நம் வீடுகளின் சமையலறையில் தினமும் காலை எப்பொழுதும் பரபரப்பாக இருக்கும், எனவே நேரத்தை மிச்சப்படுத்த, நீங்கள் பாலை மிக விரைவாக கொதிக்க வைத்தால், அவ்வாறு செய்வதை நிறுத்த வேண்டிய நேரமிது. ஏனென்றால், இது பாலின் ஊட்டச்சத்து மதிப்பைக் குறைக்கலாம்.
ஊட்டச்சத்து நிபுணர் லவ்நீத் பத்ரா, ஏன் பாலை விரைவாக கொதிக்கக்கூடாது என்பதைப் பகிர்ந்து கொண்டார்.
பாலை மிக விரைவாக கொதிக்க வைப்பது சர்க்கரையை எரித்து, மோர் புரதத்தை திரளச் செய்யும். இதனால் கடாயின் அடிப்பகுதியில் பால் பிடித்து விடுகிறது. அதிக தீயில் பால் கொதிக்க வைக்கும் போது அது பொங்கி, கசிந்து உங்கள் அடுப்பில் அழுக்கை உண்டாக்கும்.
எனவே பாலை மிதமான தீயில் மெதுவாக சூடாக்குவது நல்லது, கொதி வரும்போது கிளறவும், என்றார்.
இதை ஒப்புக்கொண்ட உணவியல் நிபுணர் கரிமா கோயல், பால் கொதிக்கும் போது, அதில் உள்ள நீர் ஆவியாகத் தொடங்குகிறது, மேலும் கொழுப்புகள், புரதம் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் போன்ற பிற கலவைகள் பிரியத் தொடங்குகின்றன என்று கூறினார்.
ஏன் கிளற வேண்டும்?
மிதமான தீயில் வைத்து கிளறுவது, பாலில் உள்ள தண்ணீர், கார்போஹைட்ரேட், கொழுப்பு மற்றும் புரதத்தை ஒன்றாக வைத்திருக்க உதவுகிறது. அதிக வெப்பநிலையில் எந்த உணவையும் சமைப்பதால் அதன் சில சத்துக்களை இழக்க நேரிடும், பாலுக்கும் இது பொருந்தும்.
முழுமையான உணவு என்று அழைக்கப்படும் பாலில் போதுமான அளவு கார்போஹைட்ரேட்டுகள், கொழுப்புகள் மற்றும் புரதங்கள் உள்ளன. மேக்ரோஸின் (macros) ஆரோக்கியமான கலவையுடன், இது அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்களையும் கொண்டுள்ளது. பால் கொதிக்க வைப்பது, அதிலிருக்கும் பெரும்பாலான தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் அல்லது பிற நோய்க்கிருமிகளைக் கொல்ல உதவுகிறது.
தீயை எப்போது அணைக்க வேண்டும்?
கடாயின் விளிம்புகளைச் சுற்றி நீர்க் குமிழிகள் உருவாகுவதை நீங்கள் கண்டால், தீயை அணைக்கவும்.
பால் அதிகமாக சூடாகும் போது, புரதம் குறைவதற்கான வாய்ப்புகள் அதிகம். மெயிலார்ட் எதிர்வினை காரணமாக, அதிக வெப்பத்தில் சமைக்கும்போது பாலின் சுவையும் நிறமும் கூட மாறலாம். மேலும், பாலாடை வராமல் தவிர்க்க விரும்பினால், பால் குளிர்ந்தவுடன் அவ்வப்போது கிளறவும்.
கொதிக்கும் வெப்பநிலை நோய்க்கிருமிகள் ஏதேனும் இருந்தால் அவற்றைக் கொல்ல உதவுகிறது. எப்பொழுதும் கிளறிவிட்டு குறைந்த மிதமான தீயில் செய்வது நல்லது. இது ஊட்டச்சத்துக்களைத் தக்கவைக்கவும், நுண்ணுயிரிகளைக் கொல்லவும், மேலும் சுவையாகவும் உதவுகிறது என்று உணவியல் நிபுணர் கரிமா கோயல் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.