ராமப்பா கோவிலில் மிஸ் வேர்ல்ட்: கால்களைக் கழுவியது மரியாதையா? அவமானமா?

கோவிலுக்குள் செல்வதற்கு முன்பு, போட்டியாளர்கள் பாரம்பரிய முறைப்படி தட்டுகளில் தண்ணீர் நிரப்பி தங்கள் பாதங்களைக் கழுவும் சடங்கில் பங்கேற்றனர்.

கோவிலுக்குள் செல்வதற்கு முன்பு, போட்டியாளர்கள் பாரம்பரிய முறைப்படி தட்டுகளில் தண்ணீர் நிரப்பி தங்கள் பாதங்களைக் கழுவும் சடங்கில் பங்கேற்றனர்.

author-image
WebDesk
New Update
Ramappa Temple Miss World

Ramappa Temple Miss World Controversy

தெலங்கானாவின் முலுகு மாவட்டத்தில் அமைந்திருக்கும் 800 ஆண்டு காலப் பழமை வாய்ந்த ராமப்பா கோவில், மிஸ் வேர்ல்ட் 2025 போட்டியின் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த அழகிகளின் வருகையால் புதுப் பொலிவு பெற்றது. பாரம்பரியமும் கவர்ச்சியும் ஒருங்கே கலந்த இந்த நிகழ்வு பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

Advertisment

மிஸ் வேர்ல்ட் அழகிகளின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்தச் சிறப்பு விருந்து குறித்துப் பதிவிடப்பட்டுள்ளது. தெலங்கானா சுற்றுலாத் துறையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த அனுபவம், யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட உலகப் பாரம்பரியத் தலமான ராமப்பா கோவிலில் (ருத்ரேஸ்வரர் கோவில்) சம்பிரதாய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டுக் கோலாகலமாகத் தொடங்கியது.

கோவிலின் நுழைவாயில் சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்க, வந்திருந்த விருந்தினர்கள் கண்களைக் கவரும் வண்ணமயமான புடவைகளை அணிந்து, கூந்தலில் மல்லிகைப் பூக்களைச் சூடி இந்தியப் பாரம்பரியத்தின் அழகை வெளிப்படுத்தினர். கலாச்சார நிபுணர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுடன் இணைந்து வந்திருந்த அவர்கள், காகதீய மன்னர்களின் கட்டிடக்கலைத் திறமையை வியந்து பார்த்தனர். கோவிலின் பாரம்பரிய நடன நிகழ்ச்சிகளைக் கண்டு பரவசமடைந்தனர். மேலும், 800 ஆண்டு கால ராமப்பா கோவிலின் வரலாற்றை விவரிக்கும் அற்புதமான ஒளி-ஒலி காட்சியைக் கண்டு மகிழ்ந்தனர்.

மாலை நேரத்தில் நடைபெற்ற உள்ளூர் கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களைக் கட்டிப்போட்டன. கோவிலின் பிரம்மாண்டத்தை மேலும் அழகாக்கும் வகையில் அமைந்திருந்த கண்கவர் ஒளி அமைப்பு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. தெலங்கானாவின் வளமான கலைப் பாரம்பரியத்தை உலகறியச் செய்யும் விதமாக, வந்திருந்த அழகிகளுக்கு கைவினைப் பொருட்களால் செய்யப்பட்ட உள்ளூர் பரிசுகளும் வழங்கப்பட்டன.

Advertisment
Advertisements

பிடிஐ செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி, கோவிலுக்குள் செல்வதற்கு முன்பு, போட்டியாளர்கள் பாரம்பரிய முறைப்படி தட்டுகளில் தண்ணீர் நிரப்பி தங்கள் பாதங்களைக் கழுவும் சடங்கில் பங்கேற்றனர். இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகப் பரவின. அதில், பெண் தன்னார்வலர்கள் தண்ணீர் ஊற்ற, அழகிகள் தங்கள் பாதங்களைக் கழுவுவது பதிவாகியிருந்தது.

இருப்பினும், இந்தச் செயல் குறித்து ஒரு தவறான புரிதல் நிலவியது. தன்னார்வலர்கள் தங்கள் கைகளால் போட்டியாளர்களின் கால்களைக் கழுவுவது போன்று சிலர் விமர்சித்தனர். இது பலருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

முன்னாள் அமைச்சர் எஸ். நிரஞ்சன் ரெட்டி இதுகுறித்து கருத்து தெரிவிக்கையில், "இது சம்பந்தப்பட்ட பெண்களுக்கு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த தெலங்கானா சமூகத்தின் கண்ணியத்திற்கும் இழுக்கு ஏற்படுத்தும் செயல்" என்று கூறினார். மேலும், விவசாயிகள் துயரத்தில் ஆழ்ந்திருக்கும்போதும், நாட்டின் பாதுகாப்பு குறித்த கவலைகள் நிறைந்திருக்கும்போதும், காங்கிரஸ் அரசு இது போன்ற தவறான முன்னுரிமைகளை வழங்குவதாக அவர் குற்றம் சாட்டினார்.

சமூக வலைத்தள பயனர்களும் இந்தச் சடங்கை விமர்சித்து கருத்துக்களைப் பதிவிட்டனர்.

இருப்பினும், இந்த நிகழ்வுகளுக்கு ஆதரவாகவும் பலர் கருத்து தெரிவித்தனர். ஒருவர் கூறுகையில், "அவர்கள் வெறுமனே தண்ணீர் ஊற்றுகிறார்கள் என்பதை நான் தெளிவாகப் பார்க்கிறேன்... அவர்கள் கால்களைத் தொடவில்லை" என்றார். மற்றொருவர், "விருந்தினர்களின் கால்களைக் கழுவுவது காலனித்துவத்தின் எச்சம் அல்ல. அது நமது கலாச்சாரத்தின் ஒரு அங்கம். கிருஷ்ணரே குசேலரின் கால்களைக் கழுவினார்" என்று தனது கருத்தைப் பதிவு செய்தார்.

வரலாற்றாசிரியரும், கரோல் பள்ளி கவுகாத்தியின் நிறுவனருமான சாரு சுப்பா இதுகுறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ் இணையதளத்திடம் பேசுகையில், "இந்திய ஆன்மீக மரபுகளில், ஒருவரின் பாதங்களைக் கழுவுவது, 'பாத ப்ரக்ஷாலனம்', என்பது ஆழ்ந்த மரியாதை மற்றும் பக்தியின் அடையாளமாகக் கருதப்படுகிறது.

 பல இந்து சடங்குகளில், தெய்வங்களின் சிலை, துறவிகளின், குருமார்களின் மற்றும் சில சமயங்களில் கௌரவ விருந்தினர்களின் பாதங்களைக் கழுவுவது வழக்கமாக உள்ளது. இது பணிவு மற்றும் மரியாதையின் அடையாளமாகக் கருதப்படுகிறது. பாதங்கள் ஒரு தனிநபரின் உடல் மற்றும் அடையாளப் பயணத்தைக் கொண்டு செல்கின்றன என்ற நம்பிக்கையில் இந்த நடைமுறை வேரூன்றியுள்ளது. அவற்றைச் சுத்தம் செய்வது அந்தப் பயணத்தின் புனிதத்தை அங்கீகரிப்பதாகும்" என்று விளக்கினார்.

இந்தியாவில் இன்றும் பல சமூகங்களிலும், பகுதிகளிலும் பாதங்களைக் கழுவும் வழக்கம் உள்ளது. குறிப்பாக வேத சடங்குகள், திருமணச் சடங்குகள், பூசாரிகளுக்கான பூஜை சடங்குகள் மற்றும் குரு பூர்ணிமா போன்ற சமயங்களில் இது வழக்கமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.

தென்னிந்திய வீடுகளிலும் கோவில்களிலும் சுமங்கலி பிரார்த்தனை அல்லது கன்யா பூஜையின் போது, இளம் பெண்களை தேவியின் வடிவமாகக் கருதி அவர்களின் பாதங்கள் கழுவப்படுகின்றன. வட இந்தியாவில், பித்ரு பக்ஷம் அல்லது மூதாதையர் சடங்குகளின் போது, பிராமணர்கள் அல்லது பெரியவர்களின் பாதங்கள் உணவு மற்றும் பரிசுகள் வழங்குவதற்கு முன்பு கழுவப்படுகின்றன. கௌடிய வைஷ்ணவம் அல்லது பிற பக்தி மரபுகளில், சீடர்கள் குறிப்பிட்ட திருவிழாக்களின் போது தங்கள் குருமார்களின் பாதங்களை சம்பிரதாயமாக கழுவலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆக, உலக அழகிகளின் வருகை ராமப்பா கோவிலுக்குப் புதிய வெளிச்சத்தை அளித்த அதே வேளையில், இந்தியப் பாரம்பரியத்தின் ஆழமான விழுமியங்களையும், கலாச்சார நடைமுறைகளையும் உலகிற்கு எடுத்துரைக்கும் ஒரு வாய்ப்பாகவும் அமைந்தது. சில விமர்சனங்கள் எழுந்தாலும், பலரும் இந்த நிகழ்வை பாரம்பரியத்தையும் நவீனத்துவத்தையும் இணைக்கும் ஒரு சிறப்பான தருணமாகவே பார்க்கின்றனர்.

Read in English: ‘Disgusting activity’: Miss World 2025 contestants’ visit to Telangana temple sparks backlash over foot-washing clips; expert sheds light on this ritual

Telagnana

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: