/indian-express-tamil/media/media_files/2025/07/06/minjur-mani-2025-07-06-11-15-06.jpg)
'மிஸ்டர் இந்தியா' பட்டம் வென்ற பாடிபில்டர் மீஞ்சூர் மணி அண்மையில் உயிரிழந்த சம்பவம், பாடிபில்டிங் துறையில் ஸ்டீராய்டு பயன்பாடு குறித்த பல கேள்விகளையும் சந்தேகங்களையும் எழுப்பியது. இது தொடர்பாக டாக்டர் சபரி கலாட்டாவிற்கு அளித்திருக்கும் பேட்டியில் அவர் கூறியிருப்பது பற்றி பார்ப்போம்.
ஸ்டீராய்டுகள் போன்ற ஹார்மோன்களைப் பயன்படுத்துவது உடலின் இயல்பான ஹார்மோன் சமநிலையை சீர்குலைத்து, சிறுநீரக பாதிப்பு, கல்லீரல் பாதிப்பு, மாரடைப்பு போன்ற பல பக்க விளைவுகளை ஏற்படுத்தும். சர்க்கரை நோய் (600 அளவில் சர்க்கரை இருந்தது) மற்றும் பக்கவாதம் வருவதற்கான வாய்ப்புகளும் அதிகரிக்கும்.
ஸ்டீராய்டுகளின் முக்கிய பக்க விளைவுகளில் ஒன்று தசைகளை பெருசாக்குவது. ஆனால் இது சட்டவிரோதமாகப் பயன்படுத்தப்படும்போது உடலுக்கு தீங்கு விளைவிக்கும். குரோத் ஹார்மோன் மற்றும் டெஸ்டோஸ்டிரோன் போன்ற பிற ஹார்மோன்களையும் தவறாகப் பயன்படுத்துவது ஆபத்தானது.
ஜிம்களில் வழங்கப்படும் மருந்துகள் மற்றும் ஹார்மோன்கள் பெரும்பாலும் முறையான மருத்துவ மேற்பார்வை இல்லாமல் வழங்கப்படுகின்றன. டோஸ் அளவு, பயன்பாட்டு முறை, பக்க விளைவுகள் பற்றிய அறிவு இல்லாததால் இது மிகவும் ஆபத்தானது. பல நேரங்களில், இந்த மருந்துகள் கருப்புச் சந்தையில் விற்கப்படுகின்றன, மேலும் அவற்றின் தரம் மற்றும் கலவை குறித்து யாருக்கும் தெரியாது.
புரோட்டீன் பவுடர் மற்றும் கிரியேட்டின் போன்ற சப்ளிமென்ட்கள் ஓரளவுக்கு பாதுகாப்பானவை என்றாலும், அவை தரமானவையாக இருக்க வேண்டும். குறைந்த விலையில் கிடைக்கும் புரோட்டீன் பவுடர்களில் ஸ்டீராய்டுகள் கலக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அதிக புரோட்டீன் உட்கொள்ளல் சிறுநீரகத்தை பாதிக்கலாம் என்பதால், போதுமான அளவு தண்ணீர் குடிப்பது மற்றும் கார்போஹைடிரேட்டுகளை எடுத்துக்கொள்வது அவசியம்.
பிரபல பாடிபில்டரான ரோனி கோல்மேன் மற்றும் குத்துச்சண்டை வீரர் முகமது அலி போன்றோர் டிரக்ஸ் பயன்படுத்தியதால் அவர்களின் உடல்நிலை பாதிக்கப்பட்டதையும் அவர் கூறுகிறார். மீஞ்சூர் மணி 13 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்டீராய்டுகளைப் பயன்படுத்தியதாகவும், அப்போதே அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. மணியின் மரணத்திற்குப் பிறகு, அவரது சர்க்கரை அளவு 600 ஆக இருந்ததாகக் கூறப்படுகிறது.
கணையம் இன்சுலினை உற்பத்தி செய்து ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் முக்கிய உறுப்பு ஆகும். ஸ்டீராய்டு பயன்பாடு, அதிகப்படியான மது அருந்துதல், பித்தப்பை கற்கள் போன்ற காரணிகள் கணையத்தைப் பாதிக்கலாம்.
ஸ்டீராய்டுகள் சிறுநீரகம், கல்லீரல் மற்றும் இதயத்தைப் பாதிக்கக்கூடியவை. இளம் வயதினரிடையே மாரடைப்பு, பக்கவாதம் போன்ற பாதிப்புகள் அதிகரிப்பதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று மருத்துவர் தெரிவித்தார்.
ஸ்டீராய்டுகளை திடீரென நிறுத்துவதும் ஆபத்தானது. வெளிப்புற ஸ்டீராய்டுகள் உடலுக்குள் செல்லும்போது, உடல் தானாக ஸ்டீராய்டு உற்பத்தி செய்வதை நிறுத்திவிடும். திடீரென நிறுத்துவதால் உடல் மீண்டும் ஸ்டீராய்டு உற்பத்தி செய்ய முடியாமல் "அடிசன்ஸ்" (Addison's) எனப்படும் அட்ரீனல் செயலிழப்பு ஏற்படலாம். அதனால் ஸ்டீராய்டுகளை எப்போதும் படிப்படியாக மட்டுமே நிறுத்த வேண்டும் என்ற் கூறினார்.
உடல் பயிற்சியை சரியான வழியில், அதாவது ஆரோக்கியமான உணவு, பழங்கள், காய்கறிகள் மற்றும் தேவையான புரோட்டீன் சப்ளிமென்ட்களுடன் மட்டுமே செய்ய வேண்டும். இன்ஜெக்ஷன்கள் மற்றும் ஹார்மோன்களை மருத்துவரின் பரிந்துரையின்றி எடுத்துக்கொள்வது மிகவும் ஆபத்தானது. ஜிம்களில் முறையான மருத்துவ மேற்பார்வை இல்லாதது ஒரு பெரிய குறைபாடு. இளம் தலைமுறையினர் இந்த அபாயகரமான விஷயங்களைத் தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.