காளானில் செலினியம் எனப்படும் ரசாயன மூலக்கூறுகள் அதிகம் உள்ளன. காளான் சாப்பிடுபவர்களுக்கு உடலில் இந்த செலினியம் சத்து அதிகரித்து உடலின் எலும்புகளின் உறுதித்தன்மையை அதிகப்படுத்துகிறது. பற்கள், தலைமுடிகள் வளர்ச்சிக்கும் உறுதுணை புரிகிறது.
ரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காளான் சிறந்த உணவு ஆகும். காளான் இரும்பு சத்து அதிகம் கொண்டது. இதில் நிறைந்திருக்கும் இரும்புச்சத்துகளை நமது உடல் விரைவாக ஏற்றுக்கொள்வதால் ரத்தத்தில் சிவப்பு ரத்த அணுக்களின் உற்பத்தி அதிகரித்து, ரத்த சோகை குறைபாடு நீங்கி உடல் பலம் பெற தொடங்கும்.
காளான் அதிகம் சாப்பிட்டு வருபவர்களுக்கு உடலில் கெட்ட கொழுப்பு அதிகம் சேராமல், கொலஸ்ட்ராலின் அளவை சரியான விகிதத்தில் பராமரித்து உடலுக்கு நன்மையை செய்கிறது.
காளான் சூப்
இரத்தத்தில் கலந்துள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைத்து இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. பொட்டாசியம் சத்து அதிகமுள்ள காளான் ரத்தத்தை சுத்தம் செய்து இதயத்தைக் காக்கிறது. இதனால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் இரத்த நாளங்களின் உட்பரப்பில் உண்டாகும் கொழுப்பு அடைப்பைத் தடுக்கிறது.
தேவையான பொருட்கள்:
காளான் - 100 கிராம்
தண்ணீர் - 1/2 லிட்டர்
ஆப்பிள் தக்காளி - 2 (வேக வைத்து அரைத்து வடிகட்டியது)
வெள்ளை மிளகுத்தூள் - 2 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
சர்க்கரை - 2 ஸ்பூன்
வெண்ணெய் - 2 ஸ்பூன்
கான்பிளவர் - 25 கிராம்
பால் - 50 மில்லி
செய்முறை: தண்ணீரில் காளானை வேக வைத்து வெந்தவுடன் தக்காளி பேஸ்ட்டை ஊற்ற வேண்டும்.
கொதித்தவுடன் வெள்ளை மிளகுத்தூள், உப்பு, சர்க்கரை வெண்ணெய், கான் பிளவர் மாவு போட்டு கொதிக்க வைக்கவும். இறுதியாக பால் ஊற்றி இறக்கவும்.
காளான் பிரை
காளான், அனைத்து காலத்திலும் அனைத்து கடைகளிலும் கிடைக்கிறது. காளானில் எண்ணற்ற நன்மைகளானது அடங்கியுள்ளது. எனவே இதனை அவ்வப்போது சமைத்து சாப்பிடுவது நல்லது. பெரும்பாலானோர் காளானை மசாலா அல்லது குழம்பு என்று தான் செய்து சாப்பிடுவார்கள். ஆனால் அதனை வறுவல் கூட செய்து சாப்பிடலாம்.
இங்கு காளானைக் கொண்டு எப்படி வறுவல் செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து மகிழுங்கள்.
தேவையான பொருட்கள்:
காளான் - 1 பாக்கெட் (துண்டுகளாக்கப்பட்டது)
வெங்காயம் - 1 (நறுக்கியது)
சீரகம் - 1 டீஸ்பூன்
வரமிளகாய் - 2
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது
செய்முறை: முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம், வரமிளகாய் சேர்த்து 30 நொடி தாளிக்க வேண்டும். பின்னர் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும். பின் அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி, காளானை சேர்த்து நன்கு பிரட்டி விட வேண்டும். அப்போது காளானது தானாக தண்ணீரை வெளியேற்றும். அப்படி வெளியேற்றிய தண்ணீரானது முற்றிலும் வற்றி நன்கு வெந்த பின், அதில் கரம் மசாலா சேர்த்து பிரட்டி கொத்தமல்லி தூவி இறக்கினால், காளான் வறுவல் ரெடி!!!