சரும நோய்கள் முதல் மனச்சோர்வு வரை பல்வேறு பிரச்சனைகளுக்குத் தீர்வாக அமையும் வெட்பாலை மரம், தமிழ்நாட்டின் வறண்ட நிலப்பரப்புகளிலும் செழித்து வளரும் ஒரு அரிய மூலிகை மரமாகும். "பாலை" என்ற சொல் வறண்ட நிலத்தைக் குறிப்பதால், இம்மரம் வெட்பாலை எனப் பெயர்பெற்றது.
Advertisment
குமரி, குற்றாலம், பழனி போன்ற பகுதிகளில் உள்ள இளையுதிர்க் காடுகளில் காணப்படும் இம்மரம், கடும் கோடையிலும் பசுமையாகவும், தளதளவென்றும் காட்சியளிக்கும். யானைகள் கூட இதன் பட்டையை உரித்து நீரை உறிஞ்சித் தாகம் தணிக்கும் என்பது இதன் அரிய தன்மைகளில் ஒன்றாகும்.
வெட்பாலை மரம் வெட்பாக்கு, தந்தப்பால் போன்ற வேறு சில பெயர்களாலும் அறியப்படுகிறது. இதன் இலைகள் பல மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளன. முடி உதிர்தல் முதல் பல்வேறு சரும நோய்கள் வரை பலவற்றிற்கும் ஆயுர்வேத மற்றும் சித்த மருத்துவத்தில் வெட்பாலை பயன்படுத்தப்படுகிறது.
வெட்பாலை இலைகளைக் கசக்கினால் அவை கருநீல நிறமாக மாறும். இந்தச் சாறு ஒரு இயற்கையான ஹேர் டையாகப் பயன்படுத்தப்படுகிறது.
Advertisment
Advertisements
வெட்பாலை எண்ணெய் தயாரிக்கும் முறை
வெட்பாலை இலையின் முக்கிய பயன்பாடு சரும நோய்களுக்குத்தான். இதிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் பல்வேறு தோல் பிரச்சனைகளுக்கு ஒரு சிறந்த தீர்வாக அமைகிறது.
தேவையான பொருட்கள்:
வெட்பாலை இலைகள்
1 லிட்டர் தேங்காய் எண்ணெய்
செய்முறை:
வெட்பாலை இலைகளைச் சிறிய துண்டுகளாக நறுக்கி ஒரு பெரிய பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
அதில் 1 லிட்டர் தேங்காய் எண்ணெயைச் சேர்க்கவும்.
இதை ஏழு நாட்களுக்கு காலை முதல் மாலை வரை வெயிலில் வைக்கவும்.
அவ்வப்போது மெதுவாகக் கலக்கிவிடவும்.
ஏழாம் நாளில், எண்ணெயின் நிறம் தானாகவே கருநீல நிறமாக மாறியிருக்கும். இதுவே வெட்பாலை எண்ணெய்.
இந்த எண்ணெயைக் காய்ச்ச வேண்டிய அவசியமில்லை. சூரிய ஒளியிலேயே நிறமாற்றம் நடைபெறும். எந்தவித ரசாயனக் கலப்படமும் இன்றி இயற்கையான முறையில் இந்த எண்ணெய் தயாரிக்கப்படுகிறது.
வெட்பாலை எண்ணெயின் பயன்கள்
இந்த வெட்பாலை எண்ணெய் சொரியாசிஸ் போன்ற தன்னுடல் தாக்க நோய்களால் ஏற்படும் சரும பிரச்சனைகளுக்கு ஒரு சிறந்த வீட்டு வைத்தியமாகப் பயன்படுத்தப்படுகிறது. சொரியாசிஸ் என்பது உடல் சரும செல்களை அதிகமாக உற்பத்தி செய்யும் ஒரு நிலையாகும். மனச்சோர்வு, கவலை, கோபம் போன்ற மனநலம் சார்ந்த பிரச்சனைகள் சொரியாசிஸ் அறிகுறிகளை அதிகரிக்கக்கூடும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
சொரியாசிஸ் போன்ற சரும நோய்களுக்கு வெட்பாலை எண்ணெயைத் தடவுவது ஓரளவு நிவாரணம் அளிக்க வாய்ப்புள்ளது. இந்த நோய்கள் காலநிலை மாற்றத்திற்கேற்ப வந்து போகும்தன்மை கொண்டவை. மனதை அமைதியாக வைத்துக்கொண்டு, இந்த எண்ணெயைத் தொடர்ந்து பயன்படுத்துவது சரும ஆரோக்கியத்திற்கு உதவும். வெட்பாலை எண்ணெயை சருமத்திற்குத் தடவுவதால் எந்தவித பக்கவிளைவுகளும் ஏற்படாது.
வெட்பாலை மரம் ஒரு அருமையான மூலிகைச் செடியாக, நமக்கு இயற்கையாகவே கிடைத்த ஒரு வரப்பிரசாதமாகும். இதன் மருத்துவக் குணங்களைப் புரிந்துகொண்டு பயன்படுத்தினால், பல உடல்நலப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணலாம், என்கிறார் டாக்டர் கார்த்திகேயன்.