/indian-express-tamil/media/media_files/2025/04/13/fJhZI34AYwCCkn8RGf6g.jpg)
கோடை காலம் மற்றும் மழை காலம் என எதுவாக இருந்தாலும் கொசு தொல்லை அதிகமாக தான் இருக்கும். இதனை விரட்டுவதற்கு ஏராளமான கொசு விரட்டிகள் கடைகளில் கிடைக்கின்றன. பெரும்பாலான மக்களும் இவற்றை பயன்படுத்துகின்றனர்.
ஆனால், இது போன்ற செயற்கையான கொசு விரட்டிகளை பயன்படுத்துவதால் சுவாச பிரச்சனை ஏற்படுவதாக வல்லுநர்கள் கூறுகின்றனர். அந்த வகையில் இயற்கையான கொசு விரட்டியை எப்படி வீட்டிலேயே தயாரிக்கலாம் என்று பார்ப்போம்.
நம் வீட்டில் இருக்கும் அனைத்து விதமான வாசனை பூக்களையும் உதிர்த்து எடுத்துக் கொள்ள வேண்டும். இப்போது, அடுப்பில் ஒரு தோசைக் கல் வைத்து, அதில் உதிர்த்து வைத்திருக்கும் பூக்களை போட்டு லேசான சூட்டில் வறுக்க வேண்டும். காய்ந்த போன பூக்களையும் இதற்கு பயன்படுத்தலாம்.
இதையடுத்து, பூக்களை வேறு ஒரு பாத்திரத்திற்கு மாற்றி விடலாம். இனி, 6 அல்லது 7 கிராம்புகள் மற்றும் ஒரு துண்டு பட்டை சேர்த்து மிக்ஸியில் ஒரு முறை அரைக்க வேண்டும். இதைத் தொடர்ந்து, பூக்களையும் இத்துடன் சேர்த்து பொடியாக அரைக்க வேண்டும்.
இந்தக் கலவையுடன் சேர்த்து கம்ப்யூட்டர் சாம்பிராணி மற்றும் 4 கற்பூரத்தையும் பொடியாக்கி கலக்க வேண்டும். இறுதியாக, ஒரு ஸ்பூன் வேப்பிலை பொடி மற்றும் இரண்டு ஸ்பூன் வேப்பெண்ணெய் சேர்த்து பசை பதத்திற்கு கலக்க வேண்டும்.
இதனை உருட்டி எடுத்தால் இயற்கையான கொசு விரட்டி தயாராகி விடும். இந்த உருண்டைகளை ஒரு டப்பாவில் அடைத்து வைத்துக் கொள்ளலாம். தேவைப்படும் நேரத்தில் மட்டும் இதனை எடுத்து பற்ற வைத்து கொசுக்களை விரட்ட பயன்படுத்தலாம். இந்த கொசு விரட்டிகளை பயன்படுத்துவதால், நமக்கு சுவாசம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்கும்.
நன்றி - Nalini Manick Cooking Youtube Channel
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.