நயன்தாராவுக்கும், இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் கடந்த ஜூன் மாதம் திருமணம் நடந்தது. திருமணமாகி இன்னும் 5 மாதங்கள் கூட முழுமையாக முடியாத நிலையில், ‘நயன்தாரவும் நானும் அம்மா, அப்பாவாக ஆகிவிட்டோம்’ என்று கூறி விக்னேஷ் சிவன் பகிர்ந்த படங்கள் தான் இப்போது இணையத்தை புயல் போல தாக்கி உள்ளன.
தங்களுக்கு பிறந்த இரு குழந்தைகளின் பாதங்களையும் முத்தமிடுவது போல எடுத்த படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த விக்கி, அதில், “நயன்தாரவும் நானும் அம்மா, அப்பாவாக ஆகிவிட்டோம். நாங்கள், இரட்டை ஆண் குழந்தைகளுடன் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளோம். எங்கள் இருவரின் பிரார்த்தனைகள் மற்றும் முன்னோர்களின் ஆசீர்வாதங்கள் ஆகியவை இணைந்து இரு குழந்தைகளின் வடிவில் எங்களை வந்து சேர்ந்துள்ளது. எங்களின் உயிரும், உலகமுமான இரு குழந்தைகளுக்கும் உங்கள் அனைவரின் ஆசீர்வாதங்களும் வேண்டும். எங்களின் வாழ்க்கை மிக அழகாகவும், பிரகாசமாகவும் தெரிகிறது” எனப் பதிவிட்டுள்ளார்.
இதைப் பார்த்த பிரபலங்களும், ரசிகர்களும் ஒரு பக்கத்தில் நயன், விக்கி ஜோடிக்கு வாழ்த்துகளை கூறி வந்தாலும், மறுபக்கம் விமர்சனங்களும் எழுந்துள்ளது.
நயன்- விக்கி இருவரும் Surrogacy எனப்படும் வாடகைத் தாய் முறை மூலம் இரட்டைக் குழந்தைகளை பெற்றுள்ளதாகவும், குழந்தைக்கு ஏற்பாடு செய்துவிட்டு தான் இருவரும் திருமணமே செய்து கொண்டனர் என்றும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இன்னும் சிலர் நயன்- விக்கி, சில சட்ட சிக்கல்களை சந்திக்க நேரிடலாம் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
பல்வேறு உல்டநல காரணங்களால் கருவுற இயலாத தம்பதிக்கு, குழந்தை பேறு அளிக்கும் ஒரு மருத்துவ செயல்முறைதான் வாடகைத்தாய் முறை. இதில் பெண்ணின் கருமுட்டையும், ஆணின் விந்தணுவையும் செயற்கை முறையில் கருத்தரிக்க செய்து அதை வாடகைத் தாயின் கருப்பையில் செலுத்தி குழந்தை பெற்றெடுக்கப்படுகிறது.
இந்தியாவில் வாடகைத் தாய் ஒழுங்குமுறைச் சட்டத்தை மத்திய அரசு கடந்த ஆண்டு கொண்டு வந்தது. அந்தச் சட்டம் இந்த ஆண்டு ஜனவரி மாதம் அமலுக்கு வந்தது. அதில் திருமணமான 5 வருடங்களுக்குப் பிறகுதான் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் நயன்தாரா- விக்னேஷ் சிவன் திருமணம் ஜனவரி மாதம்தான் நடந்தது. இதனால் தான் இது இப்போது பேசு பொருளாகி உள்ளது.
இதற்கிடையே நயன்தாரா- விக்னேஷ் சிவன் தம்பதி, விதிமுறைகளின் படி குழந்தைகளை பெற்றார்களா என்று பொது சுகாதாரத்துறையின் சார்பில் விளக்கம் கேட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று செய்தியாளர்களிடம் கூறினார்.
முதலில் வாடகைத் தாய் மூலம்தான் நயன்தாரா குழந்தை பெற்றுக் கொண்டாரா என்பது இன்னும் உறுதியா தெரியவில்லை. அப்படியே இருந்தாலும் அவர் இந்தியாவில் இருக்கிறாரா? அல்லது வெளிநாட்டில் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றிருக்கிறாரா? அந்நாட்டின் சட்டம் என்ன சொல்கிறது என்பது போன்ற பல்வேறு கேள்விகள் இதில் இருக்கின்றன. அதன்பிறகுதான் நடவடிக்கை எடுக்கப்படுமா? இல்லையா என்பது தெரியவரும்.
இந்தியாவில் ஏற்கெனவே பல பிரபலங்கள் வாடகைத் தாய் முறை மூலம் குழந்தை பெற்றுள்ளனர். குறிப்பாக பாலிவுட் நட்சத்திரங்களான ஷாருக்கான், அமீர் கான், சல்மான் கான், கரண் ஜோஹர், ப்ரீத்தி ஜிந்தா, சன்னி லியோன், ப்ரியங்கா சோப்ரா என பல பிரபலங்கள் வாடகைத்தாய் முறை மூலம் குழந்தை பெற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“