Neelima Rani: சின்னத்திரையில் பிரபலமான நடிகை நீலிமா ராணி. தனக்குக் கொடுக்கும் கதாபாத்திரத்தை அர்ப்பணிப்புடன் செய்து, அப்ளாஸ் வாங்குவதில் வல்லவர். சீரியல்கள் மூலம், சின்னத்திரை ரசிகர்களிடையே தனக்கென ஓர் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருக்கிறார். சின்னத்திரை மட்டுமல்லாமல், நிறைய படங்களில் சப்போர்ட்டிங் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
நீலிமா ராணி
சென்னையில் பிறந்து வளர்ந்த நீலிமா, தேவர்மகன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார். 15 வயதில் புரஃபஷனலாக தனது கரியரை தொடங்கினார். ‘ஒரு பெண்ணின் கதை’ என்ற சீரியலில் நடிக்கத் தொடங்கிய நீலிமாவுக்கு, அடுத்தடுத்து நிறைய வாய்ப்புகள் வரத் தொடங்கின. ’மெட்டி ஒலி’, ‘கோலங்கள்’ போன்ற சீரியல்களில் நடித்துக் கொண்டு, மறுபுறம் திரைப்படங்களிலும் தனது பயணத்தைத் தொடர்ந்தார். ’நான் மகான் அல்ல’, ‘சந்தோஷ் சுப்பிரமணியம்’, ‘பண்ணையாரும் பத்மினியும்’ உள்ளிட்ட படங்களில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் நீலிமா. இதில் ‘நான் மகான் அல்ல’ படத்தில் சிறந்த சப்போர்ட்டிங் கதாபாத்திரத்திற்காக, எடிசன் விருதும் வென்றார்.
திருமணத்தின் போது
நீலிமாவின் கணவர் இசைவாணன். இவர்களுக்கு அதிதி இசை என்ற அழகிய மகள் இருக்கிறார். 33 வயதாகும் நீலிமா தற்போது அரண்மகனை கிளி சீரியலில் வில்லியாக நடித்து வருகிறார். அதோடு சொந்தமாக தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி, அதை நிர்வகித்தும் வருகிறார். சீரியல், சினிமா மட்டுமல்லாமல், சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியிருக்கிறார்.
நீலிமாவின் கணவரும், குழந்தையும்
நீலிமாவுக்கு பிங்க், ஒயிட் கலர் என்றால் பயங்கர இஷ்டம். விளையாட்டு என்றால் பேட்மிண்டன் தான் என சொல்லும் இவருக்கு, பி.வி.சிந்து தான் ஃபேவரிட் பிளேயர். உணவு என்றால், இந்தியன், சைனீஸ் ஐட்டங்களை ஒரு கை பார்த்து விடுவாராம்.