திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்யும் பக்தர்கள் இனி லட்டு வாங்குவதற்காக நீண்ட வரிசையில் காத்திருக்க தேவை இல்லை. நாள்தோறும் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வரும் நிலையில், இலவச தரிசனத்தில் 24 மணி நேரம் வரை காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது. சாமி தரிசனம் மட்டுமல்லாமல், பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளை வாங்குவதற்கும் சில சமயங்களில் மணிக்கணக்கில் காத்திருக்க நேர்வதால் பக்தர்கள் சிரமப்பட்டு வந்தனர்.
இந்த சிரமத்தைப் போக்கும் விதமாக, திருப்பதியில் லட்டு வாங்குவதற்கு பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருப்பதை தவிர்க்கும் வகையில் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அதன்படி, லட்டு டோக்கன் பெற க்யூஆர் கோடு (QR code) முறை அமலுக்கு வரவுள்ளது. இதற்காக பிரத்யேக எந்திரங்கள் நிறுவப்படவுள்ளன. இந்த எந்திரங்களில் க்யூஆர் கோடை ஸ்கேன் செய்து விரைவாகப் பணம் செலுத்தி லட்டுகளைப் பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
டச் ஸ்கிரீன் வசதியுடன் கூடிய இந்த எந்திரங்களில், பக்தர்கள் தங்கள் தரிசன டிக்கெட் எண், எத்தனை லட்டுகள் தேவை, மற்றும் மொபைல் எண்ணை உள்ளிட வேண்டும். பின்னர், திரையில் தோன்றும் க்யூஆர் கோடை ஸ்கேன் செய்து, யுபிஐ (UPI) அல்லது பிற டிஜிட்டல் முறைகள் மூலம் லட்டுகளுக்கான பணத்தைச் செலுத்தலாம். பணம் செலுத்திய பிறகு கிடைக்கும் டோக்கனைக் கொண்டு, குறிப்பிட்ட கவுண்டர்களில் லட்டுகளைப் பெற்றுக் கொள்ளலாம்.
மேலும், தரிசன டிக்கெட் இல்லாமல் திருமலைக்கு வரும் பக்தர்களும் லட்டு பெறும் வசதியும் இந்த புதிய முறையின் கீழ் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக திருமலை தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. இந்த புதிய வசதி பக்தர்களுக்கு பெரும் வசதியை அளிக்கும் என்றும், லட்டு வாங்குவதற்காக செலவழிக்கும் நேரம் வெகுவாகக் குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.