ஒவ்வோர் ஆண்டும் சுமார் 8 மில்லியன் மக்கள் புகையிலை பயன்பாட்டால் உயிரிழக்கின்றனர் என்று ஐ.நா. தெரிவித்துள்ளது.
உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, புற்றுநோய், நுரையீரல் நோய், இருதய நோய் மற்றும் பக்கவாதம் உள்ளிட்ட பல நாள்பட்ட நோய்களுக்கான முக்கிய ஆபத்து காரணிகளில் புகையிலையும் ஒன்றாகும். WHO தரவுகளின்படி, இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் புகையிலையால் 10 லட்சத்து 35 ஆயிரம் இறப்புகள் ஏற்படுகின்றன.
புகைபிடிப்பதால் உடலுக்கு ஏற்படும் தீமைகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த மற்றும் அப்பழக்கத்தை கைவிட அவர்களை ஊக்குவிக்க ஆண்டுதோறும் மார்ச் மாதம் இரண்டாவது புதன்கிழமை புகைப்பிடிக்காத தினம் (No Smoking Day) கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்தாண்டு மார்ச் 13 ஆம் தேதி, நோ ஸ்மோக்கிங் டே அனுசரிக்கப்படுகிறது.
2024 ஆம் ஆண்டு நோ ஸ்மோக்கிங் டே தினத்தின் கருப்பொருள் ‘புகையிலை தொழில் தலையீட்டிலிருந்து குழந்தைகளைப் பாதுகாப்பது’ ஆகும்.
பாசிவ் ஸ்மோக்கிங் பாதிப்பு
![smoking](https://img-cdn.thepublive.com/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/pqxTfx10KimC10ZbYEDV.jpg)
புகையிலையை சிகரெட்டாக மட்டுமல்லாமல் எந்த வடிவிலும் பயன்படுத்தினாலும் அது இதய நோயை உண்டாக்கும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். சிகரெட் புகைப்பவர்களில் 33% பேர் அவர்கள் 18 வயதில் இருந்தே புகைக்கின்றனர் என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
இளம் வயதினர் மத்தியில் ஏற்படும் இதய நோய்களுக்கு பெரும்பாலும் சிகரெட் பழக்கம் காரணமாக இருக்கிறது.
பாசிவ் ஸ்மோக்கிங் மூலம் தற்போது நிறைய பேர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். பாசிவ் ஸ்மோக்கிங் என்றால் ஒருவர் வீட்டிலோ அல்லது பொது இடங்களிலோ புகைப்பிடித்துக் கொண்டிருப்பார். அப்போது அவரைச் சுற்றி இருக்கும் நபர்கள் அந்தப் புகையினால் பாதிக்கப்படுவது ஆகும். இதனால்தான் தற்போது அதிகம் பேர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
புகையிலை புற்றுநோய் மட்டுமல்லாது இதயம் மற்றும் நுரையீரல் சார்ந்த நோய்களை ஏற்படுத்துகிறது. மேலும் நீரிழிவு நோய் உள்ள ஒருவர் தொடர்ந்து புகைப்பிடித்து வந்தால் அவருக்கு கை, கால்களுக்குச் செல்லும் ரத்த நாளங்களில் ரத்த ஓட்டம் தடைப்படும். அதன்பிறகு அறுவை சிகிச்சைக்கு வெகுவாக வழி வைத்துவிடும். இதனால் அவர்கள் மிகுந்த கவனத்துடன் புகைப்பிடித்தலைக் கைவிட வேண்டும்.
தற்போது இளைய தலைமுறையினரிடம் புகைப்பிடிக்கும் பழக்கம் அதிகரித்து வருகிறது. அவர்களை அதில் ஈடுபடாமல் பாதுகாத்துக் கொண்டு வரவேண்டும். அவர்களிடம் இப்போது இருந்தே விழிப்புணர்வை ஏற்படுத்த தீமைகளை எடுத்துக்கூற தயங்கக் கூடாது.
புகைப்பிடித்தலை, புகையிலை பழக்கத்தை நிறுத்திவிட்டால் பல்வேறு நன்மைகளும் உடலுக்கு ஏற்படத் தொடங்குகின்றன. புகைத்தலை விட்ட ஓராண்டில் இதய நோய்க்கான ஆபத்து பாதியாகக் குறைகிறது. புகைத்தலை விட்ட ஐந்தாண்டுகளில் புற்றுநோய் ஏற்படும் அபாயமும் குறைந்துவிடுகிறது என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஆனால், புகைத்தலை கைவிடுதல் அவ்வளவு எளிதல்ல எனக் கூறும் மருத்துவ நிபுணர்கள். அதற்கான வழிமுறைகளையும் தெரிவிக்கின்றனர். நிக்கோடின் ரீப்ளேஸ்மென்ட் தெரபி என்று ஒன்றுள்ளது. நிக்கோடின் கம், பேட் என ஏதாவது ஒன்றை சுவைத்தல் சிகரெட்டை கைவிட உதவும் எனக் கூறுகின்றனர்.
புகையிலையை நிறுத்திய பிறகு உடங்கள் உடலுக்குள் என்ன நடக்கும்?
20 நிமிடங்களில் உங்கள் ரத்த அழுத்தம், நாடித்துடிப்பு சீராகிறது.
8 மணி நேரத்தில் கார்பன் மோனாக்சைடு நம் உடலை விட்டு வெளியேறி விடுகிறது.
24 மணி நேரத்தில் மாரடைப்பு வரும் அபாயம் குறைகிறது. நுரையீரலிலிருந்து சளி மற்றும் இதர கழிவுகள் வெளியேறுகிறது.
48 மணி நேரத்தில், நிகோடின் நம் உடலை விட்டு வெளியேறி விடும். ருசி நுகரும் திறன் அதிகரிக்கிறது. சுவாசம் சுலபமாகிறது. சக்தி அதிகரிக்கிறது.
2 முதல் 12 வாரங்களில் ரத்த ஓட்டம் சீராகிறது.
3 முதல் 9 மாதங்களில், சுவாசக் கோளாறு, இருமல் உள்ளிட்டவைகள் நீங்கி விடுகின்றன.
5 ஆண்டுகளில், பின் இருதய நோய்கள் வாய்ப்பு பாதியாக குறைகிறது.
10 ஆண்டுகளுக்குப் பிறகு, நுரையீரல் புற்றுநோய்க்கான வாய்ப்பு குறைகிறது.
15 ஆண்டுகளுக்குப் பிறகு இருதய நோய்க்கான வாய்ப்பு 100 சதவீதம் குறைந்து ஆரோக்கியமான மனிதனைப் போல வாழ முடியும்.
என்ன! உங்களுக்கும் புகைப்பிடிக்கும் பழக்கம் இருக்கிறதா?
இன்றே, இப்பொழுதே புகைப்பதை நிறுத்துங்கள். ஆரோக்கியமாக வாழுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“