/indian-express-tamil/media/media_files/2025/02/27/MmufvZamEZ30krcH98lS.jpg)
தெரு நாய்கள் தங்கள் எச்சில், கடி, நகக் கீறல், மலம், சிறுநீர் மற்றும் உடலில் உள்ள ஒட்டுண்ணிகள் வழியாக பல்வேறு நோய்களை பரப்பக்கூடியவை. அவற்றில் மிகவும் அபாயகரமான நோயாக ரேபிஸ் கருதப்படுகிறது. இந்த நோயின் வைரஸ், நாய்கள் மனிதர்களை கடிக்கும் போதும், அல்லது நகத்தால் கீறும்போதும், அவர்களின் உடலில் நுழையக்கூடும். ரேபிஸ் பாதித்தால், கடுமையான காய்ச்சல், தலைவலி, வலிப்பு, தண்ணீரை மற்றும் ஒளியை பார்த்ததும் அச்சம் ஏற்படுதல், மனஅமைதி குறைவு, பக்கவாதம் போன்ற பலவிதமான தீவிர அறிகுறிகள் தோன்றலாம்.
இந்த நோய் முற்றிலும் வளர்ந்துவிட்டால், அதை குணப்படுத்த இயலாது. எனவே, நாய்களுக்கு தடுப்பூசி போடுவது மற்றும் நாய் கடித்தவுடன் உடனடியாக மருத்துவமனை சென்று சிகிச்சை பெறுவது ஆகியவை ரேபிஸிலிருந்து பாதுகாப்பதற்கான முக்கிய நடவடிக்கைகள் ஆகும்.
டெட்டனஸ் மற்றும் ரிங்வோர்ம்
தெரு நாய்களின் கடி அல்லது கீறலால் டெட்டனஸ் மற்றும் ரிங்வோர்ம் போன்ற தீவிர நோய்கள் பரவலாம். டெட்டனஸ் மண் மற்றும் விலங்கு மலத்தில் உள்ள பாக்டீரியாவால் ஏற்படும் நோயாகும்; இது தசை பிடிப்பு, வலிப்பு, காய்ச்சல் போன்ற அறிகுறிகளை உருவாக்கும். தடுப்பூசி எடுத்துக்கொள்வது பாதுகாப்பாகும். ரிங்வோர்ம் என்பது நாய்களை தொடுவதால் அல்லது அவை படுத்திருந்த இடங்களில் உள்ள பூஞ்சைகள் மூலம் பரவும் தோல் தொற்று. இது சிவப்பான வட்ட வடிவ அரிப்புடன் தோலில் தோன்றும். நாயை தொட்ட பிறகு கைகளை சுத்தமாக கழுவுவதும், நாய்களுக்கு சிகிச்சை அளிப்பதும் இந்த தொற்றுகளைத் தவிர்க்க உதவும்.
லெப்டோஸ்பைரோசிஸ் மற்றும் ஸ்கேபிஸ்
நாய்களின் சிறுநீரில் இருந்து பரவும் லெப்டோஸ்பைரோசிஸ் நோய், மண், நீர் அல்லது உணவின் வழியாக மனிதர்களுக்குப் பரவி, காய்ச்சல், தலைவலி, மஞ்சள் காமாலை, சிறுநீரக பாதிப்பு போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும். தடுப்பூசி, சுகாதார சீர்திருத்தம் மற்றும் தேங்கிய நீரை தவிர்ப்பது முக்கிய தடுப்பு முறைகள். அதேபோல, ஸ்கேபிஸ் என்பது நுண்ணிய ஒட்டுண்ணி மூலம் பரவும் தோல் தொற்று. பாதிக்கப்பட்ட நாயுடன் நேரடி தொடர்பால் இது பரவுகிறது. இரவில் கடும் அரிப்பு, சிவப்பு தடிப்புகள், கொப்புளங்கள் ஆகியவை இதன் அறிகுறிகள். பாதிக்கப்பட்ட நாய்களைத் தவிர்ப்பது முக்கியமான பாதுகாப்பு நடவடிக்கையாகும்.
காப்ஸ்னோசைட்டோபேகாகேனிமோர்ஸ்
நாயின் எச்சியில் உள்ள காப்ப்னோசைட்டோபேகா கேனிமோர்ஸ் என்ற பாக்டீரியால் பரவும் லிச்சிங் என்பது அரிதாகவுள்ள ஆனால் மிக தீவிரமான தொற்று. இது நாயின் எச்சி திறந்த காயம், கண், மூக்கு, வாய் வழியாக உடலுக்குள் நுழைந்து காய்ச்சல், வாந்தி, வயிற்றுப்போக்கு, தலைவலி மற்றும் தீவிர சந்தர்ப்பங்களில் செப்சிஸ், உறுப்பு செயலிழப்பு ஏற்படுத்தலாம். நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் நாய்களைத் தவிர்ப்பது பாதுகாப்பு. அதேபோல், தெரு நாய்களில் உள்ள குடல் புழுக்கள் மனிதர்களுக்கும் பரவக்கூடும். நாய்கள் இருந்த மண்ணை தொட்டபின் கைகளை கழுவாமல் உணவுகளைச் சாப்பிடுவது இதற்குக் காரணமாகும்.
பிற தொற்றுக்கள்
இது மட்டுமல்லாமல் நாய்களுக்கு ஏற்படும் பேன், உண்ணி போன்ற ஒட்டுண்ணிகளும் மனிதர்களுக்கு ஆபத்தை விளைவிக்கலாம். எனவே தெரு நாய்களிடமிருந்து எப்போதும் விலகியே இருக்க வேண்டும். நாய்களை தொட நேர்ந்தால் கைகளை சோப்பு தண்ணீரால் கழுவ வேண்டும். நாய் கடி அல்லது கீறல் ஏற்பட்டால் முதலில் காயத்தை நன்கு கழுவி, பின்னர் மருத்துவரிடம் ஆலோசனைப் பெற வேண்டும். உடனடியாக தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுவதன் மூலம் தெரு நாய்களால் பரவும் நோய்களிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.