புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த அருள்முருகன் மகள் டாக்டர் ப்ரீத்தி அருள்முருகன், PhD (IIT BOMBAY), MTech (IIT Guwahati) (வேதியியல் பொறியியல்), தனது அரிய ஆராய்ச்சி மூலம் மருத்துவ உலகில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளார்.
மாதவிடாய் நின்ற பெண்களில் சுமார் 30% க்கும் அதிகமானோர் எதிர்கொள்ளும் மன அழுத்த சிறுநீர் அடங்காமை மற்றும் இடுப்பு உறுப்பு சரிவு போன்ற பிரச்சனைகளுக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில், "பெல்விக் ஃப்ளோர் சப்போர்ட் மெஷ்கள்" (Pelvic Floor Support Meshes) எனப்படும் உயிரியல் மெஷ்களைக் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளார்.
இது தொடர்பாக, சட்டப்பேரவைத் தலைவர் செல்வம் ஆர் செய்தியாளர்களைச் சந்தித்து, டாக்டர் ப்ரீத்தி அருள்முருகன் கண்டுபிடிப்பு குறித்து மாணவி மூலமே விளக்கமளித்தார்.
டாக்டர் ப்ரீத்தி அருள்முருகன் தனது கண்டுபிடிப்பு குறித்துப் பேசியதாவது:
"இந்தியாவில் 30% மாதவிடாய் நின்ற பெண்கள், இடுப்புத் தள தசைகளில் ஏற்படும் பலவீனம் காரணமாக மன அழுத்த சிறுநீர் அடங்காமை (Stress Urinary Incontinence) மற்றும் இடுப்பு உறுப்பு சரிவு (Pelvic Organ Prolapse) ஆகியவற்றால் பாதிக்கப்படுகின்றனர். "பெல்விக் ஃப்ளோர் சப்போர்ட் மெஷ்கள்" எனப்படும் எங்கள் கண்டுபிடிப்பு, இடுப்பு உறுப்புகளை அவற்றின் சரியான உடற்கூறியல் நிலையில் வைத்திருக்க அறுவை சிகிச்சை மூலம் செருகப்படும்.
/indian-express-tamil/media/media_files/2025/06/03/nPseqQzz7UAuURPO4y5k.jpeg)
எங்கள் தயாரிப்பு உயிரியல் ரீதியாக இணக்கமானது (Biologically Compatible), மக்கும் தன்மை கொண்டது (Biodegradable) மற்றும் மென்மையான ஃபைப்ரோஸிஸை (Soft Fibrosis) ஊக்குவிக்கிறது. இந்த வலை (mesh) மீண்டும் உறிஞ்சப்படும்போது இடுப்பு உறுப்புகளைத் தக்க வைத்துக் கொள்ளும். எங்கள் தயாரிப்பு இந்திய காப்புரிமையையும் பெற்றுள்ளது. இந்திய காப்புரிமை எண்: 469385.
ஐஎஸ்ஓ 10993 (ISO 10993) இன் படி அனைத்து விலங்கு சோதனைகளையும் நாங்கள் வெற்றிகரமாக முடித்துவிட்டோம், மேலும் பைலட் மனித சோதனைகளுக்கான (Pilot Human Trials) செயல்பாட்டில் இருக்கிறோம். மத்திய அரசு எங்களது ஆராய்ச்சிக்குத் தேவையான முழு ஒத்துழைப்பையும் உதவிகளையும் செய்து வருகிறது." இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்தச் செய்தியாளர் சந்திப்பின்போது மாணவியின் தந்தை அருள்முருகன் உடன் இருந்தார். டாக்டர் ப்ரீத்தியின் இந்தக் கண்டுபிடிப்பு, மாதவிடாய் நின்ற பெண்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதில் ஒரு மைல்கல்லாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. மத்திய அரசின் தொடர்ச்சியான ஆதரவுடன், இந்த உயிரியல் மெஷ்கள் விரைவில் பரவலான பயன்பாட்டுக்கு வந்து, எண்ணற்ற பெண்களுக்குப் புத்துயிர் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.