/indian-express-tamil/media/media_files/2025/05/01/mtZLksepLOwFQXvVzM3o.jpg)
Plastic Odyssey
ஒவ்வொரு நிமிடமும் சுமார் 20 டன் பிளாஸ்டிக் கழிவுகள் நமது கடல்களில் சென்று சேர்கின்றன என்பது அதிர்ச்சியளிக்கும் உண்மை. இந்த பிளாஸ்டிக் பெருமளவில் நிலத்தில் இருந்து ஆறுகள், வடிகால்கள் வழியாக கடலுக்குள் நுழைகிறது. ஒருமுறை கடலை அடைந்தவுடன், இவை மிகச்சிறிய துகள்களாக உடைந்து, மீன்கள் மற்றும் கடல்வாழ் உயிரினங்களுக்கு தீங்கு விளைவிக்கின்றன.
இது ஒட்டுமொத்த கடல் ecosystem-ஐ சீர்குலைப்பது மட்டுமல்லாமல், நாம் உண்ணும் உணவு மற்றும் குடிக்கும் நீரிலும் நுழைகிறது என்பது கவலை அளிக்கிறது.
நம் கண்களுக்குப் புலப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் கடலில் உள்ள மொத்த பிளாஸ்டிக்கில் வெறும் ஒரு சதவீதம் மட்டுமே என்பது இன்னும் அதிர்ச்சியளிக்கிறது. மீதமுள்ள 99 சதவீதம் கடலின் ஆழத்தில் மூழ்கி, கண்ணுக்குத் தெரியாமல் தொடர்ந்து சேதத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.
ஆனால், இந்த பிரச்சனைக்கு கடலில் அல்ல, அதன் மூல காரணமான நிலத்திலேயே தீர்வு காணும் ஒரு அரிதான முயற்சி தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதுதான் ‘பிளாஸ்டிக் ஒடிஸி’ (Plastic Odyssey) என்ற புதுமையான திட்டம்.
பிளாஸ்டிக் ஒடிஸி: ஒரு மிதக்கும் ஆய்வகம்
பிரான்சின் மார்சேயில் இருந்து 2022 அக்டோபர் 1 ஆம் தேதி புறப்பட்ட ‘பிளாஸ்டிக் ஒடிஸி’ ஒரு 40 மீட்டர் நீளமுள்ள கப்பல். இது பிளாஸ்டிக் கழிவுகளுக்கு நடைமுறை மற்றும் குறைந்த செலவிலான தீர்வுகளைக் கண்டுபிடித்து, பரிசோதித்து, பகிர்ந்து கொள்வதற்காக உருவாக்கப்பட்ட ஒரு மிதக்கும் ஆய்வகம். மற்ற கப்பல்களைப் போல ஆழ்கடலை ஆராய்வது இதன் நோக்கமல்ல.
மாறாக, பிளாஸ்டிக் கழிவுகள் கடலுக்குள் செல்வதைத் தடுப்பதற்கு தேவையான உதவிகளைச் செய்வதுதான் இதன் முக்கிய குறிக்கோள்.
தற்போது சென்னை துறைமுகத்தில் தனது 31-வது நிறுத்தமாகவும், இந்தியாவின் ஒரே பயணமாகவும் வந்திருக்கும் இந்த மிதக்கும் ஆய்வகத்தில் ஆராய்ச்சியாளர்கள், பொறியாளர்கள், தொழில்முனைவோர் மற்றும் ஒன்பது தொழில்முறை மாலுமிகள் உட்பட 20 பேர் கொண்ட குழு உள்ளது.
பிளாஸ்டிக் கழிவுகளை எவ்வாறு பயனுள்ள பொருட்களாகவும், நிலையான வாழ்வாதாரங்களாகவும் மாற்ற முடியும் என்பதை நிரூபிப்பதே அவர்களின் நோக்கம்.
கப்பலுக்குள்: கழிவு மதிப்புமிக்கதாக மாறும் இடம்
கப்பலில், பகுப்பாய்வு ஆய்வகங்கள், பைரோலிசிஸ் நிலையங்கள், பயிற்சி அறைகள் மற்றும் காட்சி பகுதிகள் உட்பட 10 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இதன் மையப்பகுதியில் மறுசுழற்சி பட்டறை உள்ளது. இங்கே, பிளாஸ்டிக் வகைகள் பிரிக்கப்பட்டு, சிறு துண்டுகளாக வெட்டப்பட்டு, குழுவினரால் உருவாக்கப்பட்ட இயந்திரங்களைப் பயன்படுத்தி உருக்கப்படுகிறது. பின்னர் இந்த பிளாஸ்டிக் பயனுள்ள பொருட்களாக வடிவமைக்கப்படுகிறது.
சென்னையின் பங்களிப்பு: கழிவில் இருந்து ஒரு தொலைநோக்கு
சென்னையில், பிளாஸ்டிக் ஒடிஸி குழு ஒரு புதிய முன்மாதிரியை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.
பாலவாக்கத்தில் உள்ள இந்திய விஷன் இன்ஸ்டிடியூட்டுடன் இணைந்து, உள்ளூர் சமூகங்களால் சேகரிக்கப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளை கண்ணாடிகளாக மாற்ற முடியுமா என்று அவர்கள் சோதித்து வருகின்றனர். இது வெற்றிகரமாக அமைந்தால், பின்தங்கிய குழுக்கள் வருமானம் ஈட்டவும், மலிவு விலையில் கண்ணாடிகளை அணுகவும், அதே நேரத்தில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றவும் உதவும்.
இந்த கப்பல் சென்னை நகரில் திடக்கழிவு மேலாண்மையில் கவனம் செலுத்தும் ரோகா சென்னை மற்றும் கபாடிவாலா கனெக்ட் போன்ற உள்ளூர் அமைப்புகளுடன் இணைந்து செயல்படுகிறது. இந்த கூட்டாண்மைகள் உலகளாவிய யோசனைகளை உள்ளூர் தேவைகளுக்கு ஏற்றவாறு மாற்றவும், திட்டத்தை மேலும் நிலையானதாக மாற்றவும் உதவுகின்றன.
சுவாரஸ்யமாக, பிரான்ஸ் போன்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியா ஏற்கனவே குறைந்த பிளாஸ்டிக் நுகர்வு கொண்ட நாடாக உள்ளது. இந்தியர்கள் ஒவ்வொரு ஆண்டும் தலா ஏழு கிலோ பிளாஸ்டிக் மட்டுமே பயன்படுத்துகின்றனர், இது பிரெஞ்சு சராசரியை விட 10 மடங்கு குறைவு. குறிப்பாக ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கு பதிலாக ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் போன்ற பொருட்களைப் பயன்படுத்துவது போன்ற குறைந்த கழிவு வாழ்க்கை முறைகளுக்கு இந்தியாவை ஒரு மாதிரியாக குழுவினர் பார்க்கின்றனர்.
வளர்ந்து வரும் தாக்கத்துடன் ஒரு உலகளாவிய பயணம்
பிளாஸ்டிக் ஒடிஸி புறப்பட்டதிலிருந்து ஹாங்காங், தைவான், வியட்நாம், மலேசியா மற்றும் செனகல் உட்பட 30க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பயணித்துள்ளது. வழியில், 400க்கும் மேற்பட்ட தொழில்முனைவோர் கப்பலில் ஏறி யோசனைகளை பரிமாறிக்கொள்ளவும், புதிய தொழில்நுட்பங்களைக் கற்றுக்கொள்ளவும், தங்கள் சொந்த மறுசுழற்சி முயற்சிகளைத் தொடங்கவும் செய்தனர்.
கப்பலின் மிகப்பெரிய வெற்றிகளில் ஒன்று செனகலில் நிகழ்ந்துள்ளது. அங்கு மிதக்கும் ஆய்வகக் குழுவால் பகிர்ந்து கொள்ளப்பட்ட அறிவைப் பயன்படுத்தி இப்போது 10 மறுசுழற்சி தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. பிலிப்பைன்ஸில், இதுபோன்ற சிறிய தொழிற்சாலைகள் ஏற்கனவே செயல்பட்டு ஆண்டுக்கு 300 டன் வரை பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்கின்றன. இந்த தொழிற்சாலைகள் ஒவ்வொன்றும் குறைந்தது 20 புதிய வேலைகளை உருவாக்குகின்றன, சுற்றுச்சூழல் மாற்றம் பொருளாதார நன்மைகளையும் கொண்டு வர முடியும் என்பதை நிரூபிக்கின்றன.
இந்த கப்பல் தனது பயணத்தின்போது 5,000க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களை வரவேற்றுள்ளது, பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் நிலைத்தன்மை குறித்து நேரடி கற்றல் அனுபவங்களை வழங்கியுள்ளது. பல குழந்தைகளுக்கு, இது அவர்களின் முதல் கப்பல் பயணம் மற்றும் கழிவுகளை எவ்வாறு பயனுள்ள ஒன்றாக மாற்ற முடியும் என்பதற்கான முதல் பார்வை ஆகும்.
அடுத்து என்ன: 'சாத்தியமற்ற சுத்தம்'
இந்த பயணம் அடுத்த ஆண்டுக்குள் முடிவுக்கு வந்தாலும், பணி தொடரும். கடினமான, தொடப்படாத இடங்களில் உள்ள பாதிக்கப்படக்கூடிய சுற்றுச்சூழல் அமைப்புகளை சுத்தம் செய்வதன் மூலம் மீட்டெடுப்பதில் கவனம் செலுத்தும் ஒரு புதிய கப்பலான 'தி இம்பாசிபிள் கிளீன்அப்' என்ற அடுத்த திட்டத்தை குழு ஏற்கனவே திட்டமிட்டுள்ளது.
பிளாஸ்டிக் ஒடிஸி ஒரு நடமாடும் வகுப்பறை, தொழிற்சாலை மற்றும் சிந்தனைக் களம் ஆகும். இது ஒரு பொதுவான பிரச்சினையைத் தீர்ப்பதற்காக உலகம் முழுவதிலுமிருந்து யோசனைகளை ஒன்றிணைக்கிறது. ஒவ்வொரு துறைமுகத்திற்குச் செல்லும்போதும், இது சமூகங்களுக்கு நடவடிக்கை எடுக்கவும், கழிவுகளைக் குறைக்கவும், பிளாஸ்டிக்கிலிருந்து மதிப்பை உருவாக்கவும் அதிகாரம் அளிக்கிறது.
பிளாஸ்டிக் கடலை அடைவதற்கு முன்பே மாசுபாட்டை நிறுத்துவதன் மூலம், உண்மையான மாற்றம் நிலத்தில், உள்ளூர் மக்களுடன், எளிய இயந்திரங்களுடன் மற்றும் செயல்பட வேண்டும் என்ற விருப்பத்துடன் தொடங்குகிறது என்பதை இந்த கப்பல் நிரூபிக்கிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.