கோவை கே.பி.ஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் பாரம்பரிய முறையில் கோலாகலமாக பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. கல்லூரி வளாகத்தில் காவடியாட்டம், கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், புலியாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், மரக்காலாட்டம், தப்பாட்டம், மற்றும் சிலம்பாட்டம் என தமிழர் பாரம்பரிய நடனங்கள் ஆடி வளம் வந்து கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.
அதைத்தொடர்ந்து உறியடித்தல், கயிறு இழுத்தல், இளவட்டக்கல் தூக்குதல் போன்ற வீர விளையாட்டுகளும் பாண்டி, பல்லாங்குழி போன்ற ம(றை)றந்த விளையாட்டுகளும் விளையாடி மகிழ்ந்தனர். கண்கவரும் வகையில் அமைக்கப்பட்ட கிராம அலங்காரத்தில் 90களில் பயன்டுத்தப்பட்ட பொருட்கள் மற்றும் உணவுகள் கொண்ட அரங்கங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
முக்கிய அம்சமாக அனைவரையும் ஈர்க்கும் வகையில் குறி சொல்லும் பாட்டி மற்றும் கிளி ஜோசியம் போன்றவையும் இடம் பெற்றன. கல்லூரியின் செயலர் திருமதி. காயத்ரி ஆனந்தகிருஷ்ணன், முதல்வர் முனைவர் த.சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக ராட்சசன் திரைப்படத்தின் இயக்குநர் திரு. ராம் குமார் பங்கேற்று பேசினார். தலைவர் கே.பி ராமசாமி அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
கே.பி.ஆர் குழுமத்தின் தலைவர் முனைவர் கே.பி.ராமசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்ற கொண்டாட்டத்தில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவ மாணவிகள், பேராசிரியர்கள், பணியாளர்கள், சர்வதேச மாணவ மாணவிகள் மற்றும் கேபிஆர் பொறியியல் கல்லூரியால் தத்தெடுக்கப்பட்ட கிராமங்களைச் சார்ந்தவர்கள் என பலதரப்பட்ட மக்கள் ஒன்று கூடி பொங்கல் வைத்து மகிழ்ச்சியைப் பரிமாறினர்.
செய்தி: பி.ரஹ்மான்