/indian-express-tamil/media/media_files/2025/08/31/prakash-raj-family-2025-08-31-12-33-10.jpg)
Prakash raj Family
கலை உலகத்தில் வில்லனாகவும், குணச்சித்திர நடிகராகவும் பல அவதாரங்கள் எடுத்து, ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் உயிர் கொடுப்பவர் நடிகர் பிரகாஷ் ராஜ். ஆனால், சினிமா திரைக்குப் பின்னால், ஒரு சாதாரண மனிதனாக அவரது வாழ்க்கை எப்படிப்பட்டது என்பது பலருக்கும் தெரியாத ஒன்று.
பிரகாஷ் ராஜ் சென்னைக்கு வந்த புதிதில், டிஸ்கோ சாந்தியின் வீட்டில் வாடகைக்குக் குடியிருந்தபோது, லலிதா குமாரியுடன் காதல் மலர்ந்தது. லலிதா குமாரி டிஸ்கோ சாந்தியின் தங்கை. 'புதுப்புது அர்த்தங்கள்', 'புலன் விசாரணை' போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர். இந்தக் காதல், 1994-ல் திருமணத்தில் முடிந்தது.
இந்தத் தம்பதியினருக்கு மேக்னா மற்றும் பூஜா என்ற இரண்டு மகள்களும், சித்து என்ற ஒரு மகனும் இருந்தனர். ஆனால், விதி வேறு விதமாக விளையாடியது. 2004-ஆம் ஆண்டு, பிரகாஷ் ராஜின் மகன் சித்து எதிர்பாராத விதமாக ஒரு விபத்தில் இறந்துபோனது, குடும்பத்தினருக்குப் பேரிழப்பாக அமைந்தது. இந்த சோகத்திற்குப் பிறகு, 15 வருடங்கள் நீடித்த அவர்களது திருமண வாழ்க்கை 2009-ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது.
விவாகரத்திற்குப் பிறகு, பிரகாஷ் ராஜ் நடன இயக்குநரான போனி வர்மாவை 2010-ல் இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு வேதாந்த் என்ற ஒரு மகன் உள்ளார். பிரகாஷ் ராஜ் தனது முதல் மனைவி மற்றும் மகள்களுடன் இன்றும் நல்ல உறவைப் பேணி வருகிறார்.
சமீபத்தில் அவள் கிளிட்ஸ் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் லலிதா குமாரி விவகாரத்துக்கு பிறகும் பிரகாஷ் ராஜூடன் நல்ல உறவை பேணுவதாக மனம் திறந்து பகிர்ந்து கொண்டார்.
"பிரகாஷ்ராஜும் நானும் 15 வருஷம் நல்ல வாழ்ந்தோம். எங்களுக்குள் ஒரு சின்ன விரிசல் வந்தது உண்மைதான். அதை சரி செய்ய உட்கார்ந்து பேசிப் பார்த்தோம். ஆனா, எங்களுக்கு முக்கியமா தெரிஞ்சது ரெண்டே விஷயம்தான்: எங்க இரண்டு பிள்ளைகள், பூஜா, மேக்னா.
அவங்க வாழ்க்கைல எந்த டிஸ்டர்பன்ஸும் வந்துடக் கூடாதுன்னு நான் ரொம்ப யோசிச்சேன். இரண்டு பேரும் பேசி ஒரு முடிவுக்கு வந்தோம். பெரியவர்களுக்கு என்ன சண்டை வந்தாலும், அது பிள்ளைகளுக்கு கண்டிப்பா ஒரு பாதிப்பை ஏற்படுத்தும். பெரிய பாதிப்பு, பெரிய இழப்பு. ஆனா, நமக்கு என்ன கஷ்டம் வந்தாலும், அப்பா-அம்மா இரண்டு பேரும் நம்மகூட இருக்காங்கன்னு ஒரு எண்ணத்தை குழந்தைகளுக்கு நாம் கொடுத்துட்டா, கண்டிப்பா அவங்க தப்பான பாதைக்கு போக மாட்டாங்க. அதுதான் என்னோட நம்பிக்கை.
நான் பிரகாஷ்கிட்ட பேசும்போது அதைத்தான் தெளிவா சொன்னேன். பசங்களுக்கு எந்த பாதிப்பும் வந்துடக்கூடாது. எது நடந்தாலும், நீங்க என்கிட்ட சொல்லுங்க, நாங்க உங்ககிட்ட சொல்றோம். நாம இரண்டு பேரும்தான் பிரிஞ்சிருக்கோம். ஆனா, பசங்களுக்கு அப்பா-அம்மாங்கறது ஒண்ணுதான்ங்கறத அவங்க மனசுல பதிய வைக்கணும்னு கேட்டேன். அவரும் அதைத்தான் எதிர்பார்த்தார். என்னை ரொம்ப புரிஞ்சுக்கிட்டவர் அவர்" என்று லலிதா குமாரி அந்த வீடியோவில் பகிர்ந்து கொண்டார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.