மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு புதுச்சேரி வேளாண் துறை சார்பில் காய், கனி, மலர் கண்காட்சி மூன்று நாட்கள் நடக்கிறது. இதனால் புதுச்சேரி மாநிலத்துக்கு சுற்றுலா பயணிகள் வெகுவாக வருகை தந்துள்ளனர்
புதுவை அரசின் வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை சார்பில் வேளாண் விழா 2023 மற்றும் 33வது மலர், காய் மற்றும் கனிக் காட்சி, முதலியார்பேட்டை AFT மைதானத்தில் மிகப் பிரம்மாண்டமாக தொடங்கியது. 12 ஆம் தேதி வரை நடைபெறும் கண்காட்சியை துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், முதலமைச்சர் ரங்கசாமி, வேளாண்துறை அமைச்சர் தேனீ. ஜெயக்குமார் ஆகியோர் நேற்று தொடங்கி வைத்தனர்.
இந்த கண்காட்சியில் பூக்களால் ஆன டால்பின், சிட்டுக்குருவி, மைனா, மயில்,பென்குயின், சிங்கம் ,பூக்களால் நீர் ஊற்று, யானை மற்றும் நவதானியங்களில் புதுச்சேரியில் புகழ்பெற்ற ஆயி மண்டபம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்து வரவழைக்கப்பட்ட சுமார் 15,000 அலங்காரத்தழை மற்றும் மலர் செடிகள் காட்சிப்படுத்தப்பட்டன. மேலும் 35,000 எண்ணிக்கையில் அடங்கிய சால்வியா, சாமந்தி, சினியா, பெட்டுன்னியா, டொரேன்னியா, காலன்டுலா, டையான்தஸ் மற்றும் தாலியா போன்ற மலர்ச் செடிகள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.
இதே போன்று மூலிகை செடிகள், செடிகளான பேய் விரட்டி, திப்பிலி,சோற்றுக் கற்றாழை, யானை திப்பிலி, பின்னை, மருதாணி, காட்டு துளசி, திருநீற்றுப் பச்சிலை, குட்டி பலா, கருஊமத்தை, காட்டு வெற்றிலை, தவசி கீரை, உள்ளிட்ட 1000-க்கும் மேற்பட்ட மூலிகை செடிகளும் கண்காட்சியில் இடம்பெற்று இருந்தது.
திராட்சையால் உருவாக்கப்பட்ட காளைமாடுகள், தர்பூசணியில் உருவாக்கப்பட்ட மகாத்மா காந்தி, பாரதியார், அப்துல் கலாம், அன்னை தெரசா, நரேந்திர மோடி, மற்றும் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி, துணைநிலை ஆளுநர் தமிழிசை, அமைச்சர் சந்திர பிரியங்கா உள்ளிட்ட தலைவர்கள் உருவங்களும் தர்ப்பூசணியால் உருவாக்கப்பட்டிருந்தது.
மேலும் அண்ணாச்சி பழ முதலை, மாம்பழ மீன்கள், பூசணிக்காய் கத்தரிக்காய் மயில், பாகற்காய் டைனோசர் ஆகிவைகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
மேலும் காகிதத்தால் ஆன பொம்மைகள் பணமட்டை மற்றும் தென்னை மட்டை, சுரக்குடுவையலான கலை பொருட்கள் மற்றும் கைவினைப் பொருள்கள் இந்த கண்காட்சியில் இடம்பெற்று இருந்தது.
மேலும் சிறுதானியங்களால் உருவாக்கப்பட்ட ரங்கோலி கோலங்கள், உழவன் ஏர் ஓட்டுவது, போன்ற படங்கள் மழைநீர் சேமிப்பு, பூமி பாதுகாப்பு, தலைவர்கள் சிலைகள், நடவு நடுவது ஆகியவைகளையும் பார்வையாளர்கள் கண்டு ரசித்தனர்.
இதில், வேளாண் மற்றும் அதனைச் சார்ந்த துறையில் உள்ள புதிய வகை விதைகள், உரங்கள் பயிர் பாதுகாப்பு இரசாயனங்கள், இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள்,திட்டங்கள் மற்றும் நவீன தொழில்நுட்பங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
இந்த மலர் கண்காட்சியை ஏராளமான பொதுமக்களும் வெளியூர் பார்வையாளர்கள் சுற்றுலாப் பயணிகள் வந்து கண்டு ரசித்து தனக்கு பிடித்த மலர் செடிகளை வாங்கிச் சென்றனர்.
மேலும் பார்வையாளர்கள் கண்காட்சியை ரசித்ததுடன் குடும்பத்தில் சுற்றுலாப் பயணிகள் போட்டோ எடுத்தும் செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர்.
நிறைவு விழாவில் அதிக பரிசுகள் பெறும் நபருக்கு ஆண்கள் பிரிவில் காய்கனி ராஜா என்ற பட்டமும், பெண்கள் பிரிவில் அதிக பரிசுகள் பெறும் பெண்களுக்கு மலர் ராணி/காய்கனிராணி என்ற பட்டமும் வழங்கப்படவுள்ளது..
செய்தி: பாபு ராஜேந்திரன்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“