ஒரு நாள் மாணவ கலெக்டர் அனுபவம் எப்படி இருந்தது? அரசு பள்ளி மாணவி பேட்டி
கதிர்காமம் அரசு உயர்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 பயிலும் மாணவி ஐஸ்வர்யா இன்று ஒரு நாள மாவட்ட கலெக்டராக செயல்பட்டார். மாணவி ஜஸ்வர்யாவை கலெக்டர் மணிகண்டன் சால்வை அணிவித்து வரவேற்றார்.
புதுச்சேரி அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு, மக்கள் பணிகள் செய்வது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மாவட்ட ஆட்சியருடன் ஒரு நாள் என்ற நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டு அதற்கான பணி இன்று தொடங்கப்பட்டது.
Advertisment
அதன்படி புதுச்சேரி கதிர்காமம் அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவி ஐஸ்வர்யா இன்று ஒரு நாள் மாவட்ட ஆட்சியராக பணிக்கு அமர்த்தபட்டார்.
இன்று காலை மாணவி ஐஸ்வர்யா மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தவுடன் அவருக்கு சால்வை அணிவித்தும் பூங்கொத்து கொடுத்தும் மாவட்ட ஆட்சியர் மணிகண்டன் வரவேற்று அவரது இருக்கையில் அமர வைத்து அலுவல் பணிகள் குறித்து விளக்கமாக எடுத்துரைத்தார்.
மேலும் தினந்தோறும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வரும் கோப்புகள் மற்றும் புகார் மனுக்களை எப்படி கையாள்வது என்பது குறித்தும் மனுக்களை கொடுக்க வரும் பொது மக்களிடம் எப்படி கனிவாக நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்தும் மாவட்ட ஆட்சியர் மணிகண்டன் விளக்கம் அளித்தார்.
தொடர்ந்து நகர பகுதியில் பல்வேறு இடங்களுக்கு மாவட்ட ஆட்சியருடன் காரில் புறப்பட்ட ஒரு நாள் மாவட்ட ஆட்சியர் ஐஸ்வர்யா புதுச்சேரியில் செயல்படுத்தப்பட்டு வரும் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.
தொடர்ந்து சட்டப்பேரவை அலுவலகம் வந்து ஒரு நாள் மாவட்ட ஆட்சியர் ஐஸ்வர்யாவை சட்டப்பேரவைத் தலைவர் செல்வம் சால்வை அணிவித்து வரவேற்று நினைவு பரிசு வழங்கினார்.
தொடர்ந்து புதுச்சேரியில் உள்ள சட்டசபை மைய மண்டபத்திற்கு சென்று அங்கே நடைபெறும் சட்டசபை நிகழ்வுகள் குறித்தும், முதலமைச்சர் அமரும் இடம் எதிர்க்கட்சித் தலைவர் அமரும் இடம் ஆகியவைகள் குறித்தும் சட்டப்பேரவை தலைவர் செல்வம் விளக்கி கூறினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் மணிகண்டன் கூறும்போது...
அரசு செயல்படுத்தும் மக்கள் நலப்பணிகள் குறித்து அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆட்சியருடன் ஒரு நாள் என்ற நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. அதன்படி இன்று மாணவி ஐஸ்வர்யாவுக்கு ஒரு நாள் மாவட்ட ஆட்சியராக பணியமர்த்தப்பட்டு பல்வேறு பணிகள் குறித்து எடுத்துரைத்ததாக தெரிவித்தார். இதை மேலும் தொடரும் என்று குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய ஒரு நாள் மாவட்ட ஆட்சியரான மாணவி ஐஸ்வர்யா.. இன்று ஒரு நாள் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்று பணிபுரிந்தது மறக்க முடியாத நிகழ்வு என்றும் சாதாரண பொது மக்களிடம் எவ்வாறு நடந்து கொள்வது என்பது குறித்தும், நில அபகரிப்புகள் புகார்கள் குறித்தும், ஸ்மார்ட் சிட்டி சம்பந்தமாக பணிகளை ஆய்வு செய்வதாக தெரிவித்த அவர் தொடர்ந்து நன்றாக படித்து மாவட்ட ஆட்சியராகி மக்கள் பணி செய்ய வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும் ஏதோ மாவட்ட ஆட்சியர் என்றால் கையெழுத்திடுவது மட்டும் அவருடைய வேலை அல்ல நிறைய மக்கள் பணி உள்ளது என்பதை தன்னால் புரிந்து கொள்ள முடிந்தது என்று குறிப்பிட்டார்.
மேலும் அவர் மக்களிடம் எவ்வாறு கனிவோடு நடந்து கொள்ள வேண்டும் என்பதை மாவட்ட ஆட்சியரை பார்த்து தான் அறிந்து கொண்டதாகவும் கூறினார்.
இதனை அடுத்து பாதுகாவல் பணிக்கு வந்த காவலர் காரின் கதவை திறக்க உள்ளே அமர்ந்த மாணவி மாவட்ட ஆட்சியர் உடன் புறப்பட்டு சென்றார்.
செய்தி: பாபு ராஜேந்திரன், புதுச்சேரி
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“