ஜீ தமிழ் டிவியில் தினமும் இரவு ஒளிபரப்பாகும் சீரியல் புதுப்புது அர்த்தங்கள். இந்த சீரியல் ப்ரோமோ வெளியான முதலே, அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. அதற்கு காரணம் தேவயானி தான். நீண்ட இடைவெளிக்கு பிறகு அவர் சின்னத்திரையில் நடிப்பதலாலேயே பலரும் புதுப்புது அர்த்தங்கள் சீரியலை எதிர்பார்த்து காத்திருந்தனர்.
அதேபோல சீரியல் வெளியான நாளிலிருந்து இன்று வரை, பலரையும் கவர்ந்து வருகிறது. சீரியலின் டைட்டிலுக்கு ஏற்றமாதிரியே, அதன் கதையும் புதுமை வாய்ந்ததுதான். இளவயதிலேயே கணவனை இழந்த லட்சுமிக்கு தனது மகன் சந்தோஷூம், அவளது மாமாவும் தான் உலகம்.
சந்தோஷீன் மனைவி பவித்ராவை போல ஒரு மருமகள் வேண்டும் எனவும், லட்சுமி போல ஒரு மாமியார் வேண்டும் எனவும் நினைக்கும் அளவுக்கு இவர்கள் இருவரது நடிப்பும் மிகவும் அன்னியோன்யமாக இருக்கும்.
இதில் பவித்ராவாக விஜே பார்வதி நடிக்கிறார். இந்த சீரியலில் அவரது நடிப்புடன், அவர் அணியும் காஸ்ட்யூம், மேக்கப் கூட பல ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்நிலையில் பார்வதி ஐபிசி மங்கை யூடியூப் சேனலுக்கு தான் அன்றாடம் கடைபிடிக்கும் அழகு பரமாரிப்பு குறிப்புகளை குறித்து பகிர்ந்துள்ளார்.
நான் வீட்டில் இருக்கும் போது நிறைய சரும பராமரிப்பு வழக்கத்தை கடைபிடிப்பேன்.
நம்முடைய கிச்சன்லேயே தோல் பராமரிப்புக்கு தேவையான நிறைய நல்ல விஷயங்கள் இருக்கிறது. தயிர், பாலாடை, தக்காளி, தேன் இதெல்லாம் நம்ம தோலுக்கு ரொம்ப நல்லது. முக்கியமா அரிசி தண்ணீர் ரொம்ப நல்லது.
பீட்ரூட், உருளைக்கிழங்கு, கேரட் போன்ற காய்கறிகள், பழங்கள், பாசி பயறு மாவு, கடலை மாவில் இருந்து நானே ஃபேஸ் மாஸ்க் தயாரித்து, அதை முகத்துக்கு அப்ளை செய்வேன். தோல் ஹைட்ரேட் ஆக இருக்க வேண்டும் என்பதற்காக நிறைய தண்ணீர் குடிக்கிறேன்.
தூங்குவதற்கு முன், இரண்டு உள்ளங்கைகளையும் நன்றாக தேய்த்து கண்களில் ஒத்தி கொடுப்பேன். ஏதாவது ஒரு மாய்ஸ்சரைஸர் எடுத்து கண்களை சுற்றி தடவிக் கொடுத்து மசாஜ் செய்தால், கருவளையங்கள் வராது. தூக்கமும் நன்றாக வரும்.
வெளியே செல்லும் போது, கிளென்சர், டோனர், சன்ஸ்கீரின் போட்டுக் கொள்வேன். அதேபோல முடிக்கு முட்டையின் வெள்ளைக்கரு, தயிர் பயன்படுத்தினால் மிகவும் சில்கியாகவும், ஸ்ட்ரெயிட்டாகவும் இருக்கும்.
வீட்டில் சாப்பாட்டுக்கு அரிசி ஊறவைக்கும் போது அந்த தண்ணீரை எடுத்து, அதை ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி, ஃப்ரிட்ஜில் வைத்துவிட்டு, காலையில் எழுந்த உடனே, முகம் கழுவிய பிறகு, அந்த ஸ்ப்ரேயை முகத்தில் பயன்படுத்துவது ரொம்ப நல்லது.
இரவு உணவை தினமும் இரவு 6 மணிக்கு முடித்து விடுவேன். தினமும் இருமுறை க்ரீன் டீ சாப்பிடுவேன். அனைத்தையும் விட முக்கியமாக நான் எப்போதும் சந்தோஷமா இருப்பேன். அருகில் உள்ளவர்களையும் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வேன். ஓய்வு நேரங்களில் எனக்கு பிடித்த விஷயங்களை செய்வேன் என்று பார்வதி அந்த யூடியூபில் வீடியோவில் கூறினார்.
இதோ ஐபிசி மங்கை யூடியூப் சேனலுக்கு பார்வதி அளித்த பேட்டி!
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “