/indian-express-tamil/media/media_files/6461X7kEczs5kNFr0yQc.jpg)
Rava Idli cooking hacks
சமையலில் நீங்கள் புதியவராக இருந்தாலும் அல்லது அனுபவமிக்க சமையல்காரராக இருந்தாலும், சில நேரங்களில் சின்னச் சின்ன தவறுகள் கூட நாம் சமைக்கும் உணவின் சுவையைக் கெடுத்துவிடலாம். அதிலும், பலருக்கும் பிடித்தமான ரவா இட்லியை சரியான பதத்தில் பஞ்சுபோல செய்வது ஒரு சவாலான விஷயம். ரவா இட்லி மிருதுவாகவும், சுவையாகவும் இருக்க, சில குறிப்புகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
டெல்லியில் உள்ள ஹில்டன் கார்டன் இன் சாகேத் ஹோட்டலின் ஜூனியர் செஃப் ஷேகர் சந்திரா , சரியான ரவா இட்லி செய்வதற்கான சில முக்கிய குறிப்புகளைப் பகிர்ந்துள்ளார். அவற்றை நீங்கள் முயற்சித்துப் பார்க்கலாம்.
சரியான ரவா மற்றும் கெட்டியான தயிர்
முதலில், மைய அரைத்த ரவை அல்லது ரவா (sooji) பயன்படுத்த வேண்டும். கொரகொரப்பான ரவை பயன்படுத்தினால் இட்லி சரியான பதத்தில் வராது. மேலும், மாவு தயாரிக்க, புதிய மற்றும் கெட்டியான தயிர் பயன்படுத்த வேண்டும். தயிர் மாவுக்கு ஒரு புளிப்பு சுவையை கொடுப்பதுடன், மாவு புளிக்க உதவுகிறது.
மாவு புளிக்க வைப்பது மற்றும் கலவை
மிருதுவான மற்றும் பஞ்சுபோன்ற இட்லிகளைப் பெற, மாவை குறைந்தது 30 நிமிடங்கள் முதல் 1 மணிநேரம் வரை புளிக்கவைப்பது மிக முக்கியம். சீக்கிரம் புளிக்க வேண்டுமென்றால், சிறிது பேக்கிங் சோடா சேர்க்கலாம். மேலும், மாவில் உப்பு, துருவிய இஞ்சி, நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை போன்ற மசாலா பொருட்களை சேர்த்து சுவையை அதிகரிக்கலாம்.
மாவு கெட்டியாக, ஆனால் இட்லி தட்டில் ஊற்றக்கூடிய பதத்தில் இருக்க வேண்டும். தேவைக்கேற்ப தண்ணீர் சேர்த்து கலக்கவும். கூடுதலாக, இட்லியை வேக வைப்பதற்கு முன், தாளிக்க பயன்படுத்தும் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு மற்றும் கறிவேப்பிலை ஆகியவற்றை மாவுடன் சேர்க்கலாம். இட்லிகள் தட்டில் ஒட்டாமல் இருக்க, இட்லி தட்டில் சிறிது எண்ணெய் தடவிய பின் மாவை ஊற்றவும்.
தாளிப்பில் ஒரு சின்ன ரகசியம்
செஃப் சந்திரா கூறிய மற்றொரு முக்கியமான விஷயம், தாளிக்கும் போது கருப்பு மிளகு மற்றும் கிராம்பு சேர்ப்பது. ஆனால் இதில் சில நுட்பங்கள் உள்ளன:
எண்ணெய் மிகவும் சூடாக இல்லாமல், மிதமான சூட்டில் இருக்க வேண்டும். அதிக சூட்டில் மிளகு மற்றும் கிராம்பு கருகி கசப்பான சுவையை கொடுத்துவிடும்.
சரியான நேரத்தில் மிளகு மற்றும் கிராம்பை சேர்க்க வேண்டும். சீக்கிரம் சேர்த்தால் கருகிவிடும், தாமதமாக சேர்த்தால் அதன் சுவை முழுமையாக வெளிப்படாது.
மிளகு மற்றும் கிராம்பின் வாசம் எண்ணெயில் சேர்ந்தவுடன், அவற்றை வெளியே எடுத்துவிடலாம். இதனால் தாளிப்பில் கசப்பு ஏற்படாமல், மிளகு மற்றும் கிராம்பின் சுவை மட்டும் இட்லியில் இருக்கும்.
இந்த எளிய குறிப்புகளைப் பின்பற்றுவதன் மூலம், வீட்டிலேயே சுவையான மற்றும் மிருதுவான ரவா இட்லியை எளிதாக செய்யலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.