தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களில் ஒருவர் ரகுவரன். யாருடைய சாயலும் இல்லாத நடிகர். உயரம், பார்வை, பாடி லாங்வேஜ், டயலாக் டெலிவரி என ரகுவரன் ஸ்டைல் தனித்துவமானது.
அந்த ரகுவரனின் இடத்தை நிரப்ப, இன்னும் எவரும் வரவில்லை.
ரகுவரன், ரோகிணியைக் காதலித்து 1996ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். 2004ம் ஆண்டில் இருவரும் பிரிந்தனர். இந்த தம்பதிக்கு ரிஷி என்ற ஒரு மகன் இருக்கிறார்.
ஒருமுறை ரகுவரனுக்கு மரியாதை செலுத்தும் வகையில் நடந்த ’நாயகனுக்கு நன்றி விழா’ எனும் நிகழ்வில் ரோகிணி கலந்து கொண்டு ரகுவரன் குறித்த நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.
‘ரகுவரன் வாழ்க்கைக்கு உள்ள நான் ஒரு ரசிகையா தான் போனேன், கல்யாணம் ஆனதுக்கு அப்புறம் என்னை பார்த்து நிறைய பேரு பொறாமைப்பட்டாங்க. நிறைய பெண்களோட கண்கள்ல அந்த பொறாமைய நான் பார்க்க முடிஞ்சது.
கொஞ்ச காலம்தான் நாங்க ஒன்னா இருந்தோம். அவரை நானே இன்னும் முழுசா புரிஞ்சுக்கலன்னு நினைக்கிறேன். ஆனா நான் இருந்த நிலைமை வேற…
ரகு வாழ்ந்தது கொஞ்ச காலம்தான். 100 வயசு வரை இருந்து வாழுற வாழ்க்கைய விட அவரு இந்த கொஞ்ச காலத்துல அதிகம் வாழ்ந்துட்டாரு. அவரு ரொம்ப கம்மியா தூங்குவாரு. தூங்காத நேரத்துல அவரோட மூளை வேலை செய்ஞ்சுட்டே இருக்கும்.
வெளியே நிறைய பேசமாட்டாரு, அமைதியா இருப்பாரு. ஆனா வீட்டுல நிறைய பேசுவாரு.
கல்யாணம் ஆன புதுசுல ஒருநாள் அபிமன்யு படம் ஷூட்டிங் பண்ணிட்டு ரூம்க்கு வரவே இல்லை, நான் என்ன ஆச்சுன்னு கேட்கும் போது பேசுற பேச்சு எல்லாம் வேற மாதிரி இருந்தது.
அப்போதான் அவுங்க அம்மா, நீ பயப்படாத, இப்போ என்ன கேரெக்டர் பண்ணிட்டு இருப்பானோ அந்த மாதிரி அவர் நடந்துக்குவான் சொன்னாங்க. அபிமன்யு படம் பாக்கும் போதுதான் இதையும், அதையும் என்னால கனெக்ட் பண்ணிக்க முடிஞ்சது.
ரகு அம்மாவுக்கு அஞ்சலி படம் ரொம்ப பிடிக்கும், ஏன்னா அந்த படம் நடிக்கும் போது ரொம்ப ஜாலியா, அமைதியா இருந்தாராம். அதேமாதிரி எனக்கு லவ் டுடே படம் ரொம்ப சிறந்த நேரமா இருந்தது.
அவருக்கு கல்யாணம் நடக்குமா, இல்லையானு அவங்க வீட்டுல நினைக்கும் போதுதான் எங்க கல்யாணம் நடந்து, ஒரு அழகான ஆரோக்கியமான குழந்தையையும் நான் கொடுத்தேன். முதன்முதல்ல கண்ணுல கண்ணீரோட என்கிட்ட வந்து குழந்தைய காண்பிச்சாரு.
ரகுவை அவ்ளோ சந்தோஷமா நான் எப்பவுமே பார்த்தது இல்ல. ரிஷி வந்த அந்த நாள்தான் ரகுவோட சந்தோஷமான நாள். அந்த சந்தோஷத்தை அவருக்கு கொடுக்க முடிஞ்சது அப்படிங்கிறதுதான் என்னோட சந்தோஷம்.
சாவித்திரி அம்மாவுக்கு நம்மளை மாதிரி பக்கத்துல யாராவது இருந்துருக்கணுமோ சில நேரங்கள்ல நான் நினைச்சு இருக்கேன், அதே ஒரு உணர்வோட தான் நான் ரகுவை கல்யாணம் பண்ணேன். ஏதோ ஒரு விதத்துல அவரோட பராம்பரியத்தை, அவரோட சந்ததியை தொடர்றதுக்கா ஒரு ஆளா நான் இருந்திருக்கேன்.
அவர் சினிமாவுக்குள்ள ரொம்ப விரும்பி வந்தாரு. அந்த சினிமாவுல நிறைய விஷயம் அவருக்கு கிடைச்சது’, இப்படி ரகுவரன் குறித்த பல நினைவுகளை ரோகினி அந்த நிகழ்ச்சியில் பகிர்ந்து கொண்டார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.