New Update
/tamil-ie/media/media_files/uploads/2020/10/sambar-tamil-news.jpg)
hotel sambar recipe hotel samber making video
Vegetables Sambar: சாம்பாரையும் வைக்கிற விதமாக வைக்க வேண்டும். அடுத்த முறை இப்படி சாம்பாரை சமைத்து சாப்பிட்டுப் பாருங்கள்.
hotel sambar recipe hotel samber making video
Sambar Recipe Tamil, Sambar Making Tamil Video: என்னதான் விதவிதமான உணவு வகைகளை சமைத்தாலும், நாம் தவிர்க்க முடியாத ஒரு பாரம்பரிய உணவு சாம்பார். சாதம், இட்லி, தோசை என எதற்குமே சாம்பார் முக்கியம். சாம்பார் டேஸ்டியாக இல்லாவிட்டால் வீட்டு உணவோ, விருந்து உணவோ ருசிக்காது.
இந்த சாம்பாரையும் வைக்கிற விதமாக வைக்க வேண்டும் என்பதே முக்கியம். அடுத்த முறை இப்படி சாம்பாரை சமைத்து சாப்பிட்டுப் பாருங்கள். அப்புறம் சொல்லுங்கள்!
சாம்பார் வைக்கத் தேவையான பொருட்கள்: துவரம் பருப்பு - 250 கிராம், எண்ணெய் - 150 மில்லி, சின்ன வெங்காயம் - 15 (சுவைக்கு இது முக்கியம்), தக்காளி - 3, முருங்கைக் காய் - 2, கொத்தமல்லி - 1 கொத்து, கருவேப்பிலை - சிறிதளவு, பச்சை மிளகாய் - 4, காய்ந்த மிளகாய் - 6, பூண்டு - 10 பற்கள், கத்தரிக்காய் - 4, கடுகு - 1/2 டீ ஸ்பூன், சீரகம் - 1/2 டீ ஸ்பூன், உளுத்தம் பருப்பு - 1/2 டீ ஸ்பூன், நெய் - 1 டீ ஸ்பூன், உப்பு - 1/2 டீ ஸ்பூன், மிளகாய் தூள் - 1/2 டீ ஸ்பூன், மஞ்சள் - 1/2 டீ ஸ்பூன், சீரகப் பொடி - 1/2 டீ ஸ்பூன், தனியா பொடி - 1/2 டீ ஸ்பூன், பெருங்காயத்தூள் - 1/4 டீ ஸ்பூன், புளி - தேவையான அளவு, தண்ணீர் - 1 1/2 லிட்டர்
முதலில் பருப்பை அரை மணி நேரத்திற்கு முன்னதாக ஊற வைத்துவிடுங்கள். பின் குக்கரில் போட்டு 3 விசில் வரும்வரை வேக வைத்துக் கொள்ளுங்கள். வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் சின்ன வெங்காயம் போட்டு பொன்னிறமாக மாறும் வரை வதக்க வேண்டும். பிறகு கத்தரிக்காய் சேர்த்து வதக்குங்கள். இதனுடன் பூண்டு, பச்சை மிளகாயும் சேர்த்துக் கொள்ளுங்கள். அடுத்து தக்காளி சேர்த்து குழைய வதக்க வேண்டும். பின்னர் அனைத்து தூள் வகைகளையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். வதக்கி முடித்ததும் முருங்கைக்காயை சேர்த்து கிளறுங்கள்.
காய்களை வேக வைக்க, அவை மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றுங்கள். நன்கு பச்சை வாசனை போகும் அளவுக்கு கொதிக்க வைக்கவும். பிறகு வேக வைத்த பருப்பை மத்தால் கடைந்துவிட்டு, குழம்பு கூட்டி வைத்துள்ள கடாயில் கொட்டி கலந்துவிடுங்கள். பிறகு ஊற வைத்த புளி தண்ணீரை கரைத்து ஊற்றிவிடுங்கள். போதுமான அளவு தண்ணீர் சேர்த்து, உப்பு போடவும்.
கொதித்து வந்ததும் தாளிக்க மற்றொரு கடாய் வைத்து எண்ணெய் விட்டு கடுகு, சீரகம் சேர்த்து பொறிய விடுங்கள். பிறகு கருவேப்பிலை, கொத்தமல்லி, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் சேர்த்து வதக்க வேண்டும். இது முடிந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு, கொதிக்கும் சாம்பாரில் கொட்டுங்கள்.
பிறகு அடுப்பை அணைத்துவிடுங்கள். இதனுடன் நெய் சேர்த்து, கொத்தமல்லி தழை தூவி விடுங்கள். இப்போது சுவையான சாம்பார் ரெடி!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.