சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் ஆடி அமாவாசை திருவிழா இன்று தொடங்கி வரும் 25ம் தேதி வரை நடக்கிறது. இதையொட்டி வனத்துறை சார்பில் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இன்று பிரதோஷத்தையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே, மேற்கு தொடர்ச்சி மலையில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் உள்ளது. இங்கு நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் ஒன்று ஆடி அமாவாசை திருவிழாவாகும். இதில், லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வர்.
இந்தாண்டு ஆடி அமாவாசை ஜூலை 24ம் தேதி வருகிறது. இதையொட்டி ஆடி அமாவாசை திருவிழா இன்று தொடங்கி வரும் 25ம் தேதி வரை நடைபெறுகிறது. ஆடி அமாவாசையன்று லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று பிரதோஷத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதலே தாணிப்பாறை அடிவாரத்தில் வனத்துறை கேட் பகுதியில் குவிந்தனர். காலை 6 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் மலையேறி கோயிலுக்குச் சென்றனர். மாலையில் பிரதோஷ வழிபாடு நடைபெறுகிறது.
பக்தர்களுக்கு கட்டுப்பாடு
ஆடி அமாவாசை திருவிழாவையொட்டி வனத்துறை சார்பில் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன்படி, கோயிலுக்கு காலை 6 மணி முதல் 12 மணி வரை மட்டுமே செல்ல அனுமதிக்கப்படுவர். மாலை 4 மணிக்குள் கோயிலில் இருந்து அடிவாரத்திற்கு திரும்ப வேண்டும். இரவில் தங்க அனுமதி கிடையாது. பிளாஸ்டிக் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்களை கொண்டு செல்லக்கூடாது. ஓடைகளில் குளிக்கக் கூடாது. அனுமதிக்கப்பட்ட பாதையை மட்டுமே பயன்படுத்த வேண்டும். வனப்பகுதிக்குள் கால்நடைகளை கொண்டு செல்லவும், பலியிடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. வயதானவர்கள், கைக்குழந்தைகள், கர்ப்பிணிகள், உடல்நலம் குன்றியவர்கள் கோயிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும். மதுபாட்டில்கள், சிகரெட், போதை வஸ்துகள் வனப்பகுதிக்குள் எடுத்து செல்ல அனுமதியில்லை. வனவிலங்குகளுக்கு இடையூறோ, உணவோ வழங்குதலோ கூடாது. ஒலிபெருக்கி பயன்படுத்தக்கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன
6 ஏக்கரில் தற்காலிக பஸ் ஸ்டாண்ட்
ஆடி அமாவாசையையொட்டி பக்தர்களுக்கு குடிநீர், சுகாதாரம், மின்விளக்கு, சாலை, கழிவறை வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. தாணிப்பாறை அடிவாரத்தில் ஆக்கிரமிப்பில் இருந்த 6 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டு தற்காலிக பஸ் ஸ்டாண்ட் மற்றும் வாகன நிறுத்துமிடம் அமைக்கப்பட்டுள்ளது. பக்தர்களின் வசதிக்காக விருதுநகர், மதுரை, திண்டுக்கல், தேனி, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து இன்று முதல் சதுரகிரி கோயிலுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
2500 போலீசார் பாதுகாப்பு
அடிவாரம், மலைப்பாதை, கோயில் உள்ளிட்ட பகுதியில் தீயணைப்பு துறையினர், பேரிடர் மீட்பு படையினர், போலீசார் என 2500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
டாஸ்மாக் விடுமுறை
ஆடி அமாவாசை திருவிழாவையொட்டி வத்திராயிருப்பு, மகாராஜபுரம், இலந்தைகுளம், கூமாப்பட்டி ஆகிய பகுதியிலுள்ள 7 டாஸ்மாக் கடைகளுக்கு நாளை மற்றும் நாளை மறுநாள் என 2 நாள் விடுமுறை அறிவித்து கலெக்டர் சுகபுத்ரா உத்தரவிட்டுள்ளார்.