/tamil-ie/media/media_files/uploads/2018/02/7b80a7d5-a137-4e4f-bb55-ed43123aa804-1.jpg)
குழந்தை பிறந்தபிறகு சுமார் 13 மாதங்கள் கழித்து, சமீபத்தில் நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் செரீனா வில்லியம்ஸ் வெற்றிபெற்றார். அப்போது, குழந்தை ஒலிம்பியாவை கணவர் அலெக்சிஸ் ஒஹானியன் கைகளில் ஏந்தி போட்டியை பார்வையிட்டார். தன் மனைவியின் கனவையும், லட்சியத்தையும் புரிந்துகொண்ட கணவர் அலெக்சிஸ் ஒஹானியன் குழந்தையை கவனித்துக்கொள்ளும் பொறுப்பை கையில் எடுத்ததை பலரும் பாராட்டினர்.
இந்நிலையில், மீண்டும் செரீனா வில்லியம்ஸ் பரவலாக பேசப்பட்டு வருகிறார். தன் குழந்தையை பிரசவித்த பிறகு, அவர் அனுபவித்த உடல் சிக்கல் குறித்து தொலைக்காட்சி ஊடகம் ஒன்றுக்கு அவர் எழுதியுள்ளார்.
அதில், ”என் குழந்தையின் இதயத்துடிப்பு குறைந்ததால் அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் மேற்கொள்ள வேண்டிய நிலைமை ஏற்பட்டது. அறுவை சிகிச்சை நன்றாக முடிந்தது. அதனை நான் உணர்வதற்குள் என் மகள் என்னுடைய கைகளில் இருந்தாள். அதுவொரு அற்புதமான உணர்வு. ஆனால், அதனை 24 மணிநேரம் கூட என்னால் அனுபவிக்க முடியவில்லை.
தொடர்ந்து எனக்கு கடுமையாக இருமல் ஏற்பட்டதால் நுரையீரலில் ரத்த உறைவு ஏற்பட்டது. அதனால், உடனடியாக அந்த ரத்த திட்டுகள் நுரையீரலுக்குள் செல்லாமல் இருக்க சிகிச்சை அளிக்கப்பட்டது. மருத்துவர்களுக்கு அத்தகைய அவசர சூழலில் என்ன செய்வதென தெரியாமல் இருந்திருந்தால் நான் இன்றைக்கு உயிரோடு இருந்திருக்க மாட்டேன். குழந்தை பிறந்ததற்கு பின்பு நான் செத்து பிழைத்தேன்”, என குறிப்பிட்டிருந்தார்.
செரீனா நுரையீரல் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
செரீனா வில்லியம்ஸ் - அலெக்சிஸ் ஒஹானியம் இணையருக்கு கடந்தாண்டு குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த பிறகுதான் இந்த ஜோடி கடந்த நவம்பர் மாதம் திருமணம் செய்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.