Serial Actress Neelima Rani about her Father shares photos Tamil News
Serial Actress Neelima Rani about her Father shares photos Tamil News : சீரியல், திரைப்படங்களில் பிசியாக இருந்த நீலிமா ராணிக்கு, இந்த லாக்டவுன் பிரேக்கில் தன்னுடைய யூடியூப் சேனலை மேம்படுத்த நேரம் எடுத்துக்கொண்டார். அதில், கடந்த மாதம் 20-ம் தேதி தந்தையர் தினத்தையொட்டி, தன்னுடைய மறைந்த தந்தையைப் பற்றி உருக்கமாகப் பகிர்ந்துகொண்டார் நீலிமா. அதில், வாடகை வீட்டில் வாழ்ந்த நாள்கள் முதல் இறக்கும் தருவாய் வரை தன்னுடைய தந்தையின் பயணத்தையும், சில புகைப்படங்களையும் பகிர்ந்துகொண்டார்.
Advertisment
"என் வாழ்க்கையோட ஹீரோவும் என் வாழ்க்கையோட மிகப் பெரிய வில்லனும் அப்பாதான். கடவுள் பாதி மிருகம் பாதி என்பது என் அப்பாவிற்கு 100 சதவிகிதம் பொருந்தும். என் அப்பா சிரிப்பழகன். சிரிச்சாருன்னா அவ்வளவு அழகு. 750 ரூபாய் வாடகை வீட்டில் வாழ்ந்தாலும், கூலர்ஸ் போடாமல் வெளியே வரவே மாட்டார். எப்போதுமே ஸ்டைலிஷாக இருப்பார்.
Advertisment
Advertisements
அப்பாவுக்கு 6 அக்கா 1 அண்ணா. எல்லோரையும் ஒன்றா சேர்த்து வெச்சு ஒரு புகைப்படம் எடுக்கணும்னு ரொம்ப ஆசைப்பட்டு எடுத்த புகைப்படம் இது ஒன்றுதான். புகைப்படங்கள் மிகவும் அழகான விஷயம். நம்முடன் இருந்தவர்கள், என்றாவது ஒருநாள் நம்மைவிட்டு நிரந்தரமாகச் சென்றால், 'அப்படியெல்லாம் எங்கேயும் செல்லவில்லை இதோ உன்ன பக்கத்தில்தான் இருக்கிறேன் பார்' என்பதுபோல நமக்கு உணர்த்தும் ஓர் விஷயம்தான் புகைப்படங்கள்.
அம்மா புடவையைத் தவிர எதுவுமே உடுத்தமாட்டாங்க. ஆனால், அம்மாவுக்காக ஒரு சல்வார் வாங்கிட்டு வந்து உடுத்தி அழகு பார்த்தார் அப்பா". இப்படி ஏராளமான புகைப்படங்களைப் பகிர்ந்துகொண்டிருக்கும்போதே, உடைந்து அழத்தொடங்கிவிட்டார் நீலிமா. பிறகு, "அப்பாவிற்கு ஆஸ்துமா பிரச்சனை இருந்தது. ஆனால், அதையெல்லாம் பொருட்படுத்தாமல் செயின் ஸ்மோக்கராக இருந்தார். அதுவும் ஸ்டைலிஷான ஸ்மோக்கர். ஆறாம் விரல்போல் நினைத்துக்கொண்டிருக்கும் பலருக்கும் நான் கேட்டுக்கொள்வது, தெய்வ செய்து புகைபிடிக்காதீர்கள். நம் வாழ்க்கையைக் கெடுக்கும் ஓர் விஷயம் அது.
அப்பாவுக்கு டைரி எழுதும் பழக்கம் உண்டு. ஆனால், அதில் இருக்கும் சுவாரசியமான விஷயம் என்னவென்றால், அவர் செய்த எல்லா தில்லுமுல்லு வேலைகளையும் எழுதி வைத்திருப்பார். அவருக்கு சீட்டு விளையாடும் பழக்கம் இருந்தது. யாருக்கு எவ்வளவு பணம் கொடுக்கவேண்டும் உள்ளிட்டவற்றையெல்லாம் எழுதி வைப்பார். அதேபோல, யாருக்கும் தெரியாமல் வீட்டிலிருந்து பணம் ஏதாவது எடுத்திருந்தால், அதையும் குறிப்பிடுவார். அப்பா, எங்களை ஏமாற்றி இருக்கலாம். ஆனால், அவருக்கு என்றைக்குமே உண்மையாகவே இருந்திருக்கிறார். அவரை அவர் ஏமாற்றியதில்லை. இது அவரிடம் இருந்து நான் கற்றுக்கொண்ட பாடம்.
அப்பா எப்போதும் அன்னை 'நீலுதல்லி' என்றுதான் கூப்பிடுவார். நான் நடிகை ஆனதுக்கு என் அப்பாதான் காரணம். 2009 பிப்ரவரி 21-ம் தேதி, அவர் மேல் கைபோட்டுத் தூங்கிக்கொண்டிருந்த அதே வேளையில்தான் அவர் இறந்தார். அவர் இறந்ததுகூட எனக்கு தெரியல. தூக்கத்திலேயே அவருடைய உயிர் பிரிந்தது. அந்த நாள் அப்பா தவறிய தினம் அல்ல. அப்படியே என் நெஞ்சில் பதிந்த தினம்" என்று பகிர்ந்திருந்தார் உருக்கமாக!
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil