Serial Actress Neelima Rani Different Flowers Tea Recipes Video Tamil News
Serial Actress Neelima Rani Different Flowers Tea Recipes Video Tamil News : சின்னதிரை உலகில் ராணியாக வலம்வந்தவர், தற்போது தன்னுடைய தனிப்பட்ட யூடியூப் சேனல் மூலம் ஏராளமான நல்ல பதிவுகளை மக்களோடு பகிர்ந்து வருகிறார் நீலிமா ராணி. அந்த வரிசையில் சமீபத்தில் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமான பூக்கள் வைத்து தயார் செய்த தேநீர் வகைகளைப் பகிர்ந்துகொண்டார். பூக்கள் என்றாலே மென்மையானது ஆனால், அதில் ஏராளமான மருத்துவ குணங்கள் உண்டு. அவற்றைத் தெரிந்துகொண்டு, முயற்சி செய்து பார்த்து, நன்கு பலன் கிடைத்ததன் விளைவாக, இந்த காணொளியைப் பதிவு செய்து ஷேர் செய்திருக்கிறார் நீலிமா ராணி. அவர் பகிர்ந்துகொண்ட ரெசிபி மற்றும் அதன் பலன்களை இனி பார்க்கலாம்..
Advertisment
"இன்றைக்கு நாம் முதலில் பார்க்கப்போவது செம்பருத்தி டீ. பெரும்பாலும் செம்பருத்தி பூ மற்றும் இலைகளைத் தலைமுடியைப் பராமரிப்பதற்காக உபயோகிப்பார்கள். ஆனால், அதனைத் தேநீராக்கிக் குடிப்பது உடலுக்கு அவ்வளவு நல்லது. இதன் முக்கியமான குணம் என்னவென்றால், நம் மனதிற்கும் இருக்கும் கவலைகளை குறைக்கும். இந்த கொரோனா காலகட்டத்தில் எல்லோருக்குமே ஒருவிதமான ஸ்ட்ரெஸ் அதிகரித்துவிட்டது. அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக அவ்வப்போது விடுபட இந்த செம்பருத்தி தேநீரைக் குடிக்கலாம்.
Advertisment
Advertisements
மேலும், இது உடலில் இருக்கும் சர்க்கரை அளவையும் பேலன்ஸ் செய்யும். இந்த செம்பருத்தி டீ செய்வதற்கு முதலில் தண்ணீரை சுடவைத்து, அதில் செம்பருத்தி பூக்களைக் கிள்ளி போடவும். அப்போதுதான் அதிலிருக்கும் எசென்ஸ் நன்கு இறங்கும். இந்தக் கலவையை நன்றாகக் கொதிக்கவைத்து அதன் சாறு இறங்கும் வரை காத்திருக்கவேண்டும். பூவின் நிறம் சிவப்பிலிருந்து வெங்காயத்தோல் நிறத்துக்கு மாறும். இந்த நிலை வந்தபிறகு, டீயை வடிகட்டி அதனோடு சர்க்கரை அல்லது தேன் கலந்து குடிக்கலாம். நான் எப்போதும் அப்படியே குடிப்பேன். இதுவே நல்ல சுவையைக் கொடுக்கும்.
அடுத்ததாக மல்லிகைப்பூ டீ. இதற்கும் முதலில் தண்ணீரைக் கொதிக்க வைத்து, அதில் 2 - 3 மல்லிகை பூக்கள் எடுத்து அதன் இதழ்களைப் பிரித்தும் போடலாம் அல்லது அப்படியே முழு பூவை போட்டு கொதிக்கவிடவும். இதன்கூட, 2 லவங்கம் மற்றும் சிறிதளவு துருவிய இஞ்சி சேர்த்துக்கொள்ளவும். இதனை அதிகமாக சேர்க்கவேண்டாம். ஏனென்றால் மல்லிகைப்பூவின் வாசம் போய்விடும். இந்தக் கலவை நன்கு கொதித்தபிறகு, வடிகட்டி தேன், சர்க்கரை அல்லது நாட்டுச் சர்க்கரை கலந்து குடிக்கலாம். இல்லையென்றால் அப்படியே குடிக்கலாம். இந்த மல்லிகைப்பூ டீ மூளை வளர்ச்சிக்கு மிகவும் சிறந்தது. அதுமட்டுமின்றி டைப் 2 டயபடீஸ் போன்றவற்றை கன்ட்ரோலில் வைத்திருக்க உதவும்.
இறுதியாக, ரோஜா பூ டீ. ரோஜாப்பூவிற்கு நம் உடல்நலம் மீது காதல் அதிகம். ஆம், நம் சருமத்தைப் பாதுகாப்பதில் ரோஜாவிற்கு அதிக பங்கும் ஆர்வமும் உண்டு. இதனைச் செய்ய மீண்டும் ஒரு கப் தண்ணீரில் ரோஜா இதழ்களைச் சேர்த்து நன்கு கொதிக்கவிடவேண்டும். ரோஜாவின் நிறம் மாறும் வரை காத்திருக்கவும். பிறகு அதனை வடிகட்டி அப்படியே குடிக்கலாம். இந்த ரோஜாப்பூ டீ மாதவிடாய் நாட்களில் பெண்கள் குடித்து வந்தால் வயிற்றுவலி இருக்காது. மேலும், தொண்டைப் புண்களுக்கும் இது மிகவும் நல்லது" என்றுகூறி இந்த உபயோகமான காணொளியை நிறைவு செய்கிறார் நீலிமா.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil