தனது தேனிசை குரலால் இசை ரசிகர்களை கட்டிப் போட்ட பிரபல பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷல் பிறந்தநாள் இன்று.
1984-ல் மேற்கு வங்கத்தில் பிறந்து, ராஜஸ்தானிலும் மும்பையிலும் வளர்ந்தவர். நான்கு வயதில் இசை கற்கத் தொடங்கி, பதினான்கு வயதில் முதல் தனி ஆல்பம் வெளியிட்டார். தன் 16வது வயதில் ‘ஜீ’ தொலைக்காட்சியின் ‘ச ரி க ம’ நிகழ்ச்சியில் பங்கேற்று முதல் பரிசைப் பெற்றார்.
அவருடைய குரலில் மயங்கிய பாலிவுட் பிரபலம் சஞ்சய் லீலா பஞ்சாலி உடனே தன்னுடைய படத்தில் பாட வாய்ப்பளித்தார். இஸ்மாயில் தர்பார் - மாண்டி சர்மா இசையமைத்த தேவதாஸ் படத்தில் உள்ள பத்து பாடல்களில் ஐந்து பாடல்களைப் பாடும் வாய்ப்பு ஷ்ரேயாவுக்குக் கிடைத்தது.
உயர்நிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த ஸ்ரேயா, விடுப்பு எடுத்துக்கொண்டு பாடல் பதிவுக்கு வந்தார். இவர் பாடிய ஐந்து பாடல்களுமே இவரை நட்சத்திரப் பாடகியாக்கியது, அதில் ‘பைரி பியா’ பாடலுக்கு முதல் படத்திலேயே சிறந்த பாடகிக்கான தேசிய விருது அவரைத் தேடி வந்தது.
"இன்னும் நன்றாக நினைவில் இருக்கிறது. பாடலைப் பதிவு செய்வதற்கு முன்பு ஒருமுறை ஒத்திகை பார்ப்பதற்காகப் பாடச் சொன்னார்கள். நான் மெல்லக் கண்களை மூடி இடைவெளியின்றிப் பாடி முடித்துக் கண்களைத் திறந்தபோது ரெக்கார்டிங் அறைக்கு வெளியே பரபரப்பான சூழலை உணர்ந்தேன். அதன்பிறகு சஞ்சய்ஜி சொன்னபிறகுதான் தெரிந்தது நான் சிறப்பாகப் பாடிய ஒத்திகையையே பாடலாகப் பதிவுசெய்துவிட்டது" என தனது முதல் ரெக்கார்டிங் குறித்து நெகிழ்கிறார் ஸ்ரேயா கோஷல்.
இவரின் தமிழ் உச்சரிப்பு தாளாத ஆச்சர்யம் என்றால் அதே ஆச்சரியம்… இந்தி ரசிகர்களுக்கும். இந்தியும் இவர் பின்னாளில் கற்றுக்கொண்ட ஒரு மொழியே.
ஷ்ரேயா கோஷல் ஏராளமான தமிழ்ப் பாடல்களையும் பாடியிருக்கிறார். 2002-ல் முதல்முறையாக, ஆல்பம் படத்தில் இடம்பெற்ற செல்லமே செல்லம் என்றாயடா பாடலைப் பாடி தமிழ் திரையுலகில் அறிமுகமானார்,
இளங்காத்து வீசுதே (பிதாமகன்), நினைத்து நினைத்து (7ஜி ரெயின்போ காலனி), தாவணி போட்ட தீபாவளி (சண்டகோழி), பனித்துளி பனித்துளி (கண்ட நாள் முதல்), முன்பே அன்பே வா (சில்லுனு ஒரு காதல்), அய்யய்யோ (பருத்தி வீரன்), உருகுதே மருகுதே (வெயில்), ஒரு வெட்கம் வருதே (பசங்க), மன்னிப்பாயா (விண்ணைத் தாண்டி வருவாயா), உன் பேரை சொல்லும் போதே (அங்காடித் தெரு), கள்வரே (ராவணன்) இப்படி நிறைய சொல்லிக் கொண்டே போகலாம்.
ஷ்ரேயா கோஷல், குரலுக்காக மட்டுமல்லாமல் அழகுக்காகவும் அதிக ரசிகர்களைக் கொண்டவர். இதனால் அவருக்கு நடிப்பதற்கு நிறைய வாய்ப்புகள் வந்துள்ளன. ஆனால் அவர் எந்தவொரு வாய்ப்பையும் ஏற்கவில்லை.
பிப்ரவரி 5, 2015-ல் திடீரென காதல் திருமணம் செய்துகொண்டார். ஷ்ரேயாவின் கணவர், தொழிலதிபர் ஷிலாதித்யா. இந்த தம்பதிக்கு 2021 ஆம் ஆண்டு அழகான ஆண் குழந்தை பிறந்தது.
2012-ல் ஃபோர்ப்ஸ் பத்திரிகையின் புகழ்பெற்ற 100 நட்சத்திரங்கள் பட்டியலில் ஷ்ரேயாவும் இடம்பெற்றார். ஐந்து வருடங்கள் டாப் 50 பட்டியலில் அவருக்கு இடம் கிடைத்தது.
இன்று மார்ச் 12, ஸ்ரேயா கோஷல் பிறந்தநாள்!
இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் ஸ்ரேயா கோஷல் குரலுக்கு வயது என்பதே ஆகாது.
அவரது குரலில் உங்களுக்கு மிகவும் பிடித்த பாடல் எது என்பதை கமென்டில் சொல்லுங்கள்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“