/indian-express-tamil/media/media_files/2025/10/16/download-79-2025-10-16-11-58-19.jpg)
தென்னிந்தியப் பெண்களின் தனித்துவமான அழகு என்றாலே உலகமே வியந்து பார்க்கும் அளவுக்கு பிரபலமான ஒன்று. அவர்களின் பளபளப்பான சருமமும், நீண்டு அடர்த்தியாக இருக்கும் கூந்தலும், “இதற்கு காரணம் என்ன?” என பலரிடமும் ஆச்சரியத்தையும், சிறு பொறாமையையும் எழுப்புகிறது. இதற்குப் பின்னால் விலையுயர்ந்த காஸ்மெடிக் பொருட்களோ, பார்லர் சிகிச்சைகளோ இல்லை. மாறாக, சமையலறையில் எளிதில் கிடைக்கும் சில இயற்கை பொருட்களே அந்த அழகின் நம்பிக்கைக்குரிய ரகசியம்.
தலைமுறை தலைமுறையாக நம் பாட்டி, அம்மாக்கள் பின்பற்றி வந்த இந்த பாரம்பரிய அழகு முறைகள் இன்று கூட பல இளைய தலைமுறையினரால் ஏற்றுக்கொள்ளப்பட்டு வருகின்றன. தேங்காய் எண்ணெய், மஞ்சள், கறிவேப்பிலை போன்ற இயற்கை பொருட்களே இதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
தேங்காய் எண்ணெய் — கூந்தல் மற்றும் சருமத்துக்கான இயற்கை கவசம்
கேரளா உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களில் சமையலிலிருந்து தோல் பராமரிப்பு வரை தேங்காய் எண்ணெய் ஒரு அங்கமாகவே இருந்து வருகிறது. இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் சருமத்தைச் சுருக்கங்களிலிருந்து காக்கவும், இளமையான தோற்றத்தை நிலைநிறுத்தவும் உதவுகின்றன.
மேலும், பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் முகப்பரு மற்றும் சிறு தோல் பிரச்சனைகளுக்கு இயற்கையான தீர்வாக செயல்படுகின்றன. தினமும் இரவு தூங்குவதற்கு முன் லேசாக சூடு செய்த தேங்காய் எண்ணெயை முகத்திலும் உடலிலும் மசாஜ் செய்தால், சருமம் மென்மையுடனும் பிரகாசத்துடனும் மாறும்.
அதேபோல், வாரத்திற்கு இரண்டு முறை தலையில் எண்ணெய் வைத்து மசாஜ் செய்வது முடி உதிர்வை குறைத்து, கூந்தல் அடர்த்தியை அதிகரிக்க உதவுகிறது.
மஞ்சள் — சருமத்தின் இயற்கை பொலிவின் ரகசியம்
தென்னிந்தியப் பெண்களின் வாழ்க்கையில் மஞ்சள் ஒரு பிரிக்க முடியாத பகுதி. திருமண நிகழ்ச்சிகளில் இருந்து தினசரி குளியல் வரை மஞ்சள் பயன்படுத்தப்படுகிறது. இது வெறும் மசாலா பொருளல்ல — ஒரு சக்திவாய்ந்த கிருமிநாசினி.
வெயிலில் ஏற்பட்ட கருமை மற்றும் கரும்புள்ளிகளை குறைக்க மஞ்சள் சிறப்பாக உதவுகிறது. கடலை மாவுடன் ஒரு சிட்டிகை மஞ்சளை கலந்து முகத்தில் பேக் போட்டு 10 நிமிடங்கள் விட்டு கழுவினால், முகம் பளிச்சென்று பிரகாசமாகிவிடும். வாரத்திற்கு 1 அல்லது 2 முறை இதை பயன்படுத்தினால் பார்லர் போக வேண்டிய அவசியமே இல்லாது விடும்.
கறிவேப்பிலை — இளநரைக்கும் முடி உதிர்வுக்கும் இயற்கை மருந்து
சமையலில் வாசனைக்காக மட்டுமல்லாமல், கூந்தலின் ஆரோக்கியத்திற்கும் கறிவேப்பிலை ஒரு அரிய பரிசு. இன்றைய தலைமுறையில் முடி உதிர்வும், இளநரையும் அதிகமாக உள்ளது. இதற்கு பாரம்பரிய தீர்வாக கறிவேப்பிலை எண்ணெய் பயன்படுகிறது.
தேங்காய் எண்ணெயில் ஒரு கொத்து கறிவேப்பிலையை நன்கு காய்ச்சி வடிகட்டி, வாரம் ஒருமுறை தலையில் தேய்த்து மசாஜ் செய்யலாம். இது முடி உதிர்வை குறைத்து, கருமையாகவும் அடர்த்தியாகவும் வளர உதவும். இதில் உள்ள இயற்கை வைட்டமின்கள் முடி வேரை பலப்படுத்துகின்றன.
இயற்கையே சிறந்த அழகு சிகிச்சை
“அழகு என்பது விலையுயர்ந்த க்ரீம்களிலும் பார்லர் சிகிச்சைகளிலும் இல்லை, அது இயற்கையில் தான் உள்ளது” என்பதை நம் முன்னோர்கள் தங்கள் வாழ்வியல் வழக்குகளிலேயே நிரூபித்துள்ளனர்.
இப்போது பலரும் இந்த பாரம்பரிய முறைகளை மீண்டும் தங்கள் தினசரி அழகு பராமரிப்பில் இணைத்து வருகின்றனர். தேங்காய் எண்ணெய், மஞ்சள், கறிவேப்பிலை போன்ற எளிய பொருட்கள் உங்கள் அஞ்சறைப்பெட்டியிலேயே இருக்கும் — அவைதான் உங்களின் இயற்கையான அழகு பராமரிப்புக்கு சிறந்த தீர்வு.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.