வீட்டு தோட்டம் பராமரித்து நமக்கு தேவையான பொருட்களை நாமே தயார் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருக்கும். ஆனால், அதற்கு போதுமான இடவசதி எல்லோருக்கும் இருக்காது. அந்த வகையில் நம் வீட்டில் சாதாரணமாக ஜன்னல் ஓரத்திலேயே கொத்தமல்லியை எப்படி எளிமையாக வளர்ப்பது என்று காண்போம்.
Advertisment
முதலில், தரமான முழு கொத்தமல்லி விதைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த முழு கொத்தமல்லி விதைகளை ஒரு துணியில் வைத்து, துணியின் மற்றொரு பாதியை அதன் மேல் விரித்து, சப்பாத்தி மாவு உருட்ட பயன்படுத்தும் கட்டையை கொண்டு அதன் மீது தேய்க்க வேண்டும். குறிப்பாக, அதிக அழுத்தம் கொடுக்காமல் இப்படி செய்ய வேண்டும்.
பின்னர், இவற்றை தனியாக எடுத்து ஒரு கப் தண்ணீரில் சுமார் 2 முதல் 3 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். அதையடுத்து, ஊறிய விதைகளை உரத்தில் போட்டு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து கலந்து விட வேண்டும். இந்தக் கலவையை ஒரு காட்டன் துணியில் போட்டு ஈரப்பதம் இருக்கும் படி சுற்றி வைக்க வேண்டும். இவ்வாறு செய்தால், விதைகள் அனைத்தும் மூன்று நாட்களில் முளைத்து விடும்.
இப்போது ஒரு பூந்தொட்டி எடுத்து மணல், உரம் ஆகியவை பரப்பி அத்துடன் முளைத்திருக்கும் கொத்தமல்லி விதைகளை போட வேண்டும். அதன் பின்னர், இதில் சிறிது தண்ணீர் தெளித்து வெயில் மிக அதிகமாக படாத இடத்தில் வைத்து விடலாம். இதற்கு நாள் ஒன்றுக்கு ஒரு முறை தண்ணீர் தெளித்தாலே போதும். இப்படி செய்தால் அடுத்த மூன்று நாட்களில் இதில் இருந்து இலைகள் முளைக்கத் தொடங்கும் அதன்பின்னர், இந்த தொட்டியை எடுத்து சாதாரணமாக ஜன்னல் ஓரத்தில் கூட வைத்து வளர்க்கலாம்.
Advertisment
Advertisements
இதன் மூலம் நம் வீட்டிலேயே நமக்கு தேவையான கொத்தமல்லியை நாம் வளர்த்துக் கொள்ள முடியும்.