/indian-express-tamil/media/media_files/2025/06/16/o0d6EeBnDLb99Xf6x4is.jpg)
மல்லிகைச் செடி முழுக்க மொட்டுக்கள் வர… செலவே இல்லாத சிம்பிள் டிப்ஸ்தான்!
உங்கள் வீட்டுத் தோட்டத்தில் மல்லிகைச் செடிகள் பூத்துக் குலுங்கவில்லையா? கவலையை விடுங்கள்! சில எளிய பராமரிப்பு முறைகளைப் பின்பற்றுவதன் மூலம், உங்கள் மல்லிகைச் செடியிலும் ஏராளமான, நறுமணம் மிக்க பூக்களைப் பெற முடியும் என தோட்டக்கலை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
மல்லிகைப் பூ அதிகம் பூப்பதற்கான மிக முக்கியமான ரகசியம் கவாத்து (Pruning) செய்வதுதான். பூக்கும் பருவம் முடிந்தவுடன், வாடிப் போன பூக்கள் மற்றும் பழைய கிளைகளை வெட்டி விடுவது அவசியம். பூ பூத்த கிளைகளின் நுனியில் சுமார் 6 அங்குல உயரம் வரை வெட்ட வேண்டும். ஒரு கிளையை வெட்டும்போது, அங்கிருந்து 2 புதிய கிளைகள் தோன்றும். இந்தப் புதிய கிளைகளில்தான் அதிக எண்ணிக்கையிலான பூ மொட்டுகள் உருவாகும். கவாத்து செய்வதன் மூலம் செடி அடர்த்தியாகவும், விரிவாகவும் வளரும். சிறிய செடிகளையும் கவாத்து செய்யலாம்.
மல்லிகைச்செடிக்கு தினமும் 6 முதல் 8 மணி நேரம் நேரடி சூரிய ஒளி தேவை. போதிய சூரிய ஒளி இல்லையென்றால், பூக்கள் குறைவாக பூக்கும். எனவே, செடியை வெயில் படும் இடத்தில் வைப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். மண்ணின் ஈரப்பதத்தைப் பொறுத்து நீரூற்ற வேண்டும். மண் காய்ந்தவுடன் மட்டுமே தண்ணீர் ஊற்றுங்கள். தண்ணீர் தேங்க விடக்கூடாது, ஏனெனில் அது வேர் அழுகலை ஏற்படுத்தும். கோடை காலங்களில் தினமும் தண்ணீர் தேவைப்படலாம்.
செடிக்குத் தேவையான ஊட்டச்சத்து கிடைப்பது அவசியம். ஆண்டுக்கு ஒருமுறை நன்கு மக்கிய தொழு உரம் அல்லது காய்கறி உரம் போன்ற கரிம உரங்களைச் செடியின் அடிப்பகுதியில் இடுவது நல்லது. பூக்கும் பருவத்தில், பூக்கள் அதிகம் பூக்க உதவும் வகையில் பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் சத்து நிறைந்த உரங்களைப் பயன்படுத்தலாம்.
புளித்த மோர் பாரம்பரிய மற்றும் மிகவும் பயனுள்ள முறையாகும். நன்கு புளித்த மோரை எடுத்து, அதனுடன் 5 முதல் 6 பங்கு தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கவும். பின்னர் இதை வடிகட்டி, மாலை நேரத்திலோ அல்லது அதிகாலையிலோ செடியின் இலைகள் மீது தெளிக்கவும். இந்த இயற்கையான கரைசல் புதிய தளிர்கள் வேகமாக வளரவும், பூக்கள் உதிர்வதைத் தடுக்கவும் உதவும் என தோட்டக்கலை வல்லுநர்கள் பரிந்துரைக்கின்றனர். இந்த எளிய பராமரிப்பு முறைகளைப் பின்பற்றுவதன் மூலம், உங்கள் வீட்டுத் தோட்டத்திலும் மல்லிகைச் செடிகள் நறுமணம் மிக்க பூக்களுடன் செழித்து வளரும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.