சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள அரியக்குடி கிராமத்தில், முதல் முறையாக கிடா முட்டு சண்டை போட்டி உற்சாகத்துடன் நடைபெற்றது. வழக்கமாக சிவகங்கையில் மஞ்சுவிரட்டு, மாட்டு வண்டி பந்தயம் போன்ற பாரம்பரிய விளையாட்டுகள்தான் நடைபெற்று வந்துள்ளன. ஆனால், இம்முறை கிராமப்புற மக்களின் உற்சாகத்தையும், இளைஞர்களின் ஈடுபாட்டையும் அதிகரிக்கும் வகையில், திருவேங்கட முடையான் கோயில் தேரோட்டத்தை முன்னிட்டு புதுமையான கிடா முட்டு சண்டை போட்டி நடத்தப்பட்டது.
தென்காசி, கம்பம், மதுரை, திண்டுக்கல், திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 50 ஜோடி கிடாய்கள் இதில் பங்கேற்றன. போட்டியின் விதிமுறையின்படி, ஒவ்வொரு கிடாயும் 60 தடவைகள் ஒருவரையொருவர் முட்டிக்கொள்ள வேண்டும். முடிவில் ஒன்று வெளியேறினால், அது தோல்வியடைந்ததாக அறிவிக்கப்படும், மற்ற கிடாய் வெற்றி பெற்றதாகக் கருதப்படும்.
போட்டியில் வெற்றி பெற்ற கிடாய்களின் உரிமையாளர்களுக்கு எல்.இ.டி. டிவி, அண்டா, ட்ரெஸ்ஸிங் டேபிள் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன. சிறந்த 6 கிடாய்களுக்கு தனி விருதுகளும் அளிக்கப்பட்டன. பரபரப்பாக நடைபெற்ற கிடாய் முட்டு போட்டியை அப்பகுதி இளைஞர்கள் மற்றும் கிராம மக்கள் ஆர்வத்துடன் கண்டுரசித்தனர்.