/indian-express-tamil/media/media_files/2025/04/15/2dWxhf1drUyTw6jFn0eQ.jpg)
கற்றாழையை 2 நாள் ஊறவைத்து இப்படி தெளிங்க… மல்லிகை செடியில் ஆயிரக் கணக்கில் பூக்கள் பூக்கும்!
மல்லிகைப் பூவின் மணமும் அழகும் யாருக்குத்தான் பிடிக்காது. நம் வீட்டுத் தோட்டத்தில் மல்லிகைச் செடி வைத்து, அது நிறைய பூ பூப்பதை பார்க்கும்போது ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. ஆனால், சில சமயங்களில் செடி நன்றாக வளர்ந்தாலும் எதிர்பார்த்த அளவு பூ பூக்காது. கவலை வேண்டாம். இந்தப் பதிவில் மல்லிகைப் செடியை எப்படி பராமரித்து, அதிகமான பூக்களைப் பெறலாம் என்பது குறித்து பூ கார்டன் என்ற யூடியூப் சேனலில் தோட்டக்கலை நிபுணர் பகிர்ந்துள்ள குறிப்பிட்டுள்ள டிப்ஸ் பற்றி பார்க்கலாம்.
மல்லிகைப் செடியில் அதிகமான பூக்கள் பூக்க மிக முக்கியமான முதல்படி கவாத்து செய்வதுதான். இது செடிக்கு புத்துயிர் அளித்து, அதிகமான தளிர்களை உருவாக்க உதவும். பொதுவாக, மல்லிகைப் பூ சீசனின் ஆரம்பத்திலும், பூக்கள் அனைத்தும் பூத்து முடிந்த பிறகும் கவாத்து செய்வது மிக அவசியம். செடியில் உள்ள கிளைகளில், 2 அல்லது 3 இலைகளை விட்டுவிட்டு, மீதமுள்ள பகுதிகளை வெட்டிவிட வேண்டும். இவ்வாறு செய்வதால், செடியின் அடிப்பகுதி தண்டு வலுப்பெற்று, செடி மேலும் செழிப்பாக வளரும். கவாத்து செய்வதன் மூலம், செடியில் புதிய தளிர்கள் ஏராளமாக உருவாகும். இந்த புதிய தளிர்களில்தான் அதிக மொட்டுக்கள் தோன்றும். செடியும் அடர்த்தியாக, ஒரு புதர் போல ஆரோக்கியமாக வளரும். கவாத்து செய்யாமல் விட்டால், செடி நீண்டு வளர்ந்து, பூக்களின் எண்ணிக்கை குறைந்துவிடும்.
கவாத்து செய்த செடிக்கு சரியான ஊட்டச்சத்துக்களைக் கொடுக்கும்போது, பூக்களின் எண்ணிக்கையும், அளவும், தரமும் பன்மடங்கு அதிகரிக்கும். செடியை நடும்போதே, மண்புழு உரம் கலந்த சத்தான மண் கலவையை பயன்படுத்துவது வளர்ச்சிக்கு உகந்தது. கவாத்து செய்த பிறகு, செடியின் வேர்ப்பகுதியைச் சுற்றி, ஒரு கைப்பிடி அளவு தொழு உரம், ஆட்டு எரு அல்லது நன்கு மக்கிய காய்கறி கழிவுகள் போன்ற இயற்கை உரங்களை இட்டு, மண்ணைக் கிளறிவிட வேண்டும்.
கற்றாழை + பழைய சாத நீர் கலவை: இது ஒரு சிறப்பான, வீட்டிலேயே தயாரிக்கக்கூடிய திரவ உரம். 2 கற்றாழை துண்டுகளை எடுத்து, சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, சுமார் 2 நாட்கள் தண்ணீரில் நன்கு ஊற வைக்கவும். கற்றாழை, செடியை குளிர்ச்சியாக வைத்திருக்கவும், பூச்சித் தாக்குதல்களைக் கட்டுப்படுத்தவும், வேர் வளர்ச்சியைத் தூண்டவும் உதவுகிறது, குறிப்பாக கோடை காலத்தில் இது மிகவும் பயனுள்ளது. சுமார் 3 நாட்கள் ஊற வைத்த பழைய சாதம் வடித்த கஞ்சித்தண்ணீர் அல்லது நீச்சத்தண்ணீர் சிறந்த ஊட்டச்சத்துக்களைக் கொண்டது. ஊறவைத்த கற்றாழை நீரையும், பழைய சாத நீரையும் ஒன்றாகக் கலக்கவும். இந்த கலவையில் ஒரு பங்கு எடுத்தால், அதனுடன் 2 அல்லது 3 பங்கு சாதாரண தண்ணீர் சேர்த்து நீர்க்கச் செய்ய வேண்டும். செடியின் மண் 2 நாட்கள் சற்று காய்ந்த நிலையில் இருக்கும்போது, இந்த திரவ உரத்தைக் கொடுத்தால், செடியின் வேர்கள் சத்துக்களை முழுமையாக உறிஞ்சிக் கொள்ளும்.
எலுமிச்சை தோல் ஊறவைத்த நீர், மீன் அமிலம் (Fish Amino Acid) போன்ற திரவ உரங்களும் மல்லிகைப் பூக்கள் அதிகமாக பூக்க நல்ல பலனைத் தரும் என்று தோட்டக்கலை நிபுணர் குறிப்பிடுகிறார். இவற்றை மாற்றி மாற்றி பயன்படுத்தலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.