Chennai Tamil News: சென்னையில் இருந்து திருப்பதி வரை முன்பதிவு இல்லாமல் ரயில் சேவை பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பெருந்தொற்றிற்கு முன் இயங்கிக்கொண்டிருந்த முன்பதிவு இல்லாத பயணியர் ரயில் சேவை, தற்போது தினமும் காலை 9.50 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து திருப்பதி வரை இயக்கத்தில் விடப்பட்டுள்ளது.

இந்த ரயில் சேவை, சென்னை சென்ட்ரலில் இருந்து அரக்கோணம் வரை இயக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது சென்னை ரயில்வே கோட்டம் உத்தரவின் படி திருப்பதி வரை நீட்டித்து இருக்கிறது.
தற்போது இயக்கத்தில் விடப்பட்டிருக்கும் ரயில் சேவை, சென்னை சென்ட்ரலில் இருந்து தினமும் காலை 9:50 மணிக்கு புறப்பட்டு, மதியம் 1:40 மணிக்கு திருப்பதி செல்லும். திருப்பதியில் இருந்து மதியம் 1:45 மணிக்கு புறப்பட்டு, மாலை 5:15 மணிக்கு சென்ட்ரல் வரும்.
பேசின் பிரிட்ஜ், பெரம்பூர், வில்லிவாக்கம், அம்பத்துார், ஆவடி, திருநின்றவூர், திருவள்ளூர், கடம்பத்துார், திருவாலங்காடு, அரக்கோணம், திருத்தணி உள்ளிட்ட ரயில் நிலையங்களில் வழியாக நின்று செல்லும்.
இதுகுறித்து, திருநின்றவூர் ரயில் பயணியர் பொது நல சங்க செயலர் எஸ்.முருகையன் கூறியதாவது: கொரோனா பெருந்தொற்று பரவலால் இரண்டு ஆண்டுகள் நிறுத்திவைக்கப்பட்ட ரயில் சேவை, மக்களின் கோரிக்கையை ஏற்று, மீண்டும் சென்னை சென்ட்ரல் - திருப்பதி வரை துவங்கப்பட்டுள்ளது.
இந்த ரயில் சேவை, பெரும்பாலான ரயில் நிலையங்களில் நின்று செல்வதால், திருப்பதி வரை செல்லும் பக்தர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.
திருநின்றவூரில் இருந்து திருப்பதிக்கு, 60 ரூபாய் கட்டணத்தில் செல்ல முடியும் என்று கூறப்பட்டிருக்கிறது. இதுவே, பஸ்களில் பயணிக்க வேண்டுமென்றால், 150 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். ஆகையால் சென்னை ரயில்வே கோட்டத்திற்கு அவர் நன்றி தெரிவித்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil