தை மாதத்தின் சிறப்பாக கருதப்படும் அமாவாசையின் சிறப்புகள் குறித்தும், பொதுமக்கள் பின்பற்றக் கூடிய வழிபாட்டு முறைகள் குறித்தும் தற்போது காண்போம்.
ஒரு ஆண்டின் மூன்று அமாவாசைகள் மிகவும் சிறப்பு வாய்ந்தது. அதன்படி, புரட்டாசி அமாவாசை, ஆடி அமாவாசை மற்றும் தை அமாவாசை ஆகியவை மிகுந்த சிறப்பு பெற்றதாக கருதப்படுகிறது. தை மாதம் என்பது தேவர்களுக்கான விடியற்காலை நேரம் என நம்பப்படுகிறது. இதன் காரணமாக முன்னோர்களை வழிபடுவதற்கு உகந்த நேரமாக இது கருதப்படுகிறது.
ஒரு ஆன்மா அடுத்த பிறவு எடுக்கும் வரை அவர்களின் சந்ததியினர் செய்யக் கூடிய வழிபாடுகள் அனைத்தும் பலனாக கிடைக்கிறது என ஆன்மிக வல்லுநர்கள் கூறுகின்றனர். இந்த ஆண்டில் ஜனவரி 29-ஆம் தேதி தை அமாவாசை வருகிறது. குறிப்பாக, 28-ஆம் தேதி இரவு 8:10 மணி முதல் 29-ஆம் தேதி இரவு 7:21 மணி வரை இந்த அமாவாசை நேரம் கணக்கிடப்பட்டுள்ளது.
அதன்படி, 29-ஆம் தேதி காலை 6 மணி முதல் 7:20 மணி வரை முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு பிறகு காலை 9 மணி முதல் 11:55 மணி வரைக்கும் தர்ப்பணம் கொடுக்கலாம். இந்த தை அமாவாசையுடன் திருவோணம் நட்சத்திரமும் சேர்ந்து வருகிறது. அந்த வகையில், 29-ஆம் தேதி காலை 9:21 மணிக்கு பின்னர் திருவோண நட்சத்திரமும் அமைந்திருக்கிறது.
மேலும், உணவு படையலுக்கான நேரமாக மதியம் 1:30 மணி முதல் 2 மணி வரை குறிப்பிடப்பட்டுள்ளது. மாலை விளக்கு ஏற்றி வழிபடுவதற்காக 6 மணி முதல் 7 மணி வரை உகந்த நேரமாக பார்க்கப்படுகிறது. எனவே, குறிப்பிட்ட நேரங்களில் பொதுமக்கள் தங்கள் பணிகளை மேற்கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கோயில், நீர் நிலைகள், வீடு ஆகிய இடங்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கலாம். இவ்வாறு தர்ப்பணம் செய்த பின்னர், அன்றைய தினம் நிச்சயமாக அன்னதானம் செய்ய வேண்டும். இதனை செய்த பின்னர், மாலை நேரத்தில் கோயிலுக்கு சென்று நல்லெண்ணெய் தீபம் ஏற்றுவது சிறப்பாக அமையும். ஆனால், கோயிலுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டில் இருந்தபடியே விளக்கு ஏற்றலாம்.
அதனடிப்படையில், தை அமாவசையன்று காலையில் தர்ப்பணம் கொடுப்பதையும், மதிய நேரத்தில் படையல் வைப்பதையும், மாலையில் விளக்கு ஏற்றி வழிபடுவதையும் கடைபிடிக்க வேண்டும் என ஆன்மிகவாதிகள் கூறுகின்றனர்.