திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோவில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவானது இந்த ஆண்டு டிச.31 ஆம் தேதி முதல் ஜன. 09 ஆம் தேதி வரை பகல் பத்து திருவிழாவாகவும் ஜன.11 ஆம் தேதி முதல் ஜன. 20 ஆம் தேதி வரை இராப்பத்து திருவிழாவாகவும் நடைபெறுகிறது.
21 நாட்கள் நடைபெறும் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பரமபதவாசல் (சொர்க்கவாசல்) வருகின்ற ஜன.10 ஆம் தேதி அதிகாலை 5:15 மணிக்கு திறக்கப்படவுள்ளது. வைணவ திருக்கோயில்களில் நடைபெறும் மிக முக்கிய திருவிழாவான சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் தமிழகம் மட்டுமல்லாது பல்வேறு மாநிலங்களில் இருந்தும் அண்டை நாடுகளில் இருந்தும் திரளான பக்தர்கள் ஸ்ரீரங்கத்தில் திரண்டு வந்து அரங்கனை வழிபடுவர்.
அத்தகைய சிறப்பு வாய்ந்த வைகுந்த ஏகாதசி திருவிழாவை முன்னிட்டு திருச்சி மாநகர காவல்துறை சார்பில் பாதுகாப்பு பணிக்காக ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோவில் ரெங்கவிலாஸ் மண்டபம் அருகில் புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டது.
அந்த புறக்காவல் நிலையத்தை இன்று திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி திறந்து வைத்து, செய்தியாளர்களிடம் பேசுகையில்; கடந்த வருடம் சுமார் 2.5 லட்சம் பக்தர்கள் தரிசனத்திற்கு வருகை புரிந்தார்கள்.
மேலும் இந்த வருடம் சுமார் 3 லட்சம் பக்தர்கள் தரிசனத்திற்கு வருகை புரிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், வைகுண்ட ஏகாதசி விழாவிற்கு போதுமான பாதுகாப்பு அளிப்பதற்காக உள்ளுர் மற்றும் வெளியூர் காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் சுமார் 2500 பேர் பாதுகாப்பு பணிக்கு பணியமர்த்தப்பட உள்ளார்கள்.
மேலும் பகல் பத்து மற்றும் இராப்பதது விழாவின்போது திருச்சி மாநகர காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளினர்கள் 365 பேர் 2 சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டு, பக்தர்கள் சிரமமின்றி வசதியாக சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
போக்குவரத்து நெரிசலின்றி பக்தர்கள் கோவிலுக்கு வந்து செல்ல போக்குவரத்து காவல் ஆளிநர்கள் போதிய அளவில் பணி நியமிக்கப்பட்டு, போக்குவரத்தை சீராக இயங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. மேலும் இந்த வருடம் கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது நான்கு சக்கர வாகனங்களை சித்திரை வீதி மற்றும் உத்திர வீதியில் நிறுத்த அனுமதியில்லை.
கோயிலுக்கு வரும் பக்தர்கள் வாகனங்கள் நிறுத்துவதற்கு ஒதுக்கப்பட்டுள்ள வாகனங்கள் நிறுத்துமிடமான 1.பஞ்சக்கரை பார்க்கிங் 2.மேல வாசல் பார்க்கிங் ஆகிய இடங்களில் வாகனங்களை நிறுத்த அறிவுறுத்தப்படுகிறது.
தற்சமயம் பொதுமக்கள் பாதுகாப்பிற்காக கோவிலின் உட்புறத்தில் முக்கிய இடங்களில் 110 CCTV கேமராக்களும், கோவிலை சுற்றி வெளிபுறத்தில் 100 CCTV கேமராக்களும், வாகனங்கள் நிறுத்துமிடமான யாத்ரி நிவாஸில் 18 CCTV கேமராக்கள் என மொத்தம் 228 கேமராக்கள் பொருத்தப்பட்டு அதை புறக்காவல் நிலையத்திலிருந்தே கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முக்கிய வீதிகளின் சந்திப்புகளில் கண்காணிப்பு உயர்கோபுரங்கள் அமைக்கப்பட்டு காவலர்களுக்கு பைனாக்குலர் வழங்கப்பட்டு தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட உள்ளது. மேலும் பொது அறிவிப்பு ஒலிபெருக்கி அமைக்கப்ட்டு பொதுமக்களுக்கு அவ்வப்போது அறிவிப்பு செய்து தகவல் தெரிவிக்க முன்னேற்ப்பாடுகள் செய்யப்படவுள்ளது.
மேலும் கோயிலின் உட்புறத்தில் பொருத்தப்பட்டுள்ள 110 CCTV கேமராக்களிலும் 70,000 குற்றாவாளிகளின் புகைப்படங்களை FRS (Face Recognizing Software) முகம் அடையாளம் காணும் மென்பொருள் மூலம் இணைக்கப்பட்டுள்ளது.
யாரேனும் குற்றவாளிகள் நடமாடினால் மேற்கண்ட கேமராவானது குற்றவாளிகளின் முகங்களை ஸ்கேன் செய்து மென்பொருளில் பொருத்தப்பட்டுள்ள குற்றவாளிகளின் புகைப்படங்களுடன் ஒப்பீடு செய்து காவல்துறைக்கு எச்சரிக்கை ஒலியை ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட உள்ளது.
மேலும், 24 மணி நேரமும் கோவிலை கண்காணிக்க சுழற்சி முறையில் காவல் ஆளிநர்கள் பணியமர்த்தப்பட்டு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுப்படுத்தப்பட உள்ளதாக திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்வின்போது ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோவில் இந்து அறநிலைய துறை இணை ஆணையர்/செயல் ஆணையர் மற்றும் மாநகர காவல் துணை ஆணையர் தெற்கு, ஸ்ரீரங்கம் சரக உதவி ஆணையர், காவல் அதிகாரிகள், கோவில் ஊழியர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.