கோவையில் சிங்கப்பூர், ஸ்பெயின் ஓவியர்கள் இணைந்து, கோவை மக்களின் வாழ்வியலை ஓவியமாக வரைந்து வருகின்றனர். இவை பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
'ஸ்ட்ரீட் ஆர்ட்' அமைப்பினர், உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, சாதாரண மக்கள் வசிக்கும் குடியிருப்புகளுக்கு சென்று, அங்குள்ள சுவர்களில், அவர்களின் வாழ்வியலை மையப்படுத்தி, தத்ரூபமாக ஓவியங்கள் வரைகின்றனர்.
உக்கடம் புல்லுக்காடு மைதானத்தில், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. இங்கு ஆயிரக்கணக்கான மக்கள் வசிக்கின்றனர். இதற்கு முன், கோவையை சேர்ந்த ஓவியர் ஜீவா மற்றும் பிரான்ஸ் நாட்டு ஓவியர்கள் பலரும் இணைந்து, ஓவியங்கள் வரைந்தனர். அது, கோவை மக்களை ஆச்சரியப்படுத்தியது.
தற்போது சிங்கப்பூர் மற்றும் ஸ்பெயின் நாடுகளில் இருந்து ஓவியர்கள் வருகை தந்துள்ளனர். இவர்களுடன் இந்திய ஓவியர்கள் இணைந்து, ஓவியங்களை வரைய ஆரம்பித்திருக்கின்றனர்.
42 அடி உயரம் மற்றும் 42 அடி அகல சுவற்றில் ஓவியம் வரையப்படுகிறது. முதற்கட்டமாக, மெஸ் ஒன்றில், ஒரு வாழை இலையில், ஊத்தப்பம், இட்லி பொடி, உளுந்த வடை இருப்பது போலவும், ஒருவர் டீ ஆற்றுவது போலவும், கண்ணாடி டம்ளரில் டீ இருப்பது போலவும் தத்ரூபமாக வரையப்பட்டுள்ளது.
அந்த சுவரின் மற்றொரு புறத்தில், ஓவியத்தின் மீதமுள்ள பகுதியை வரைய இருக்கின்றனர். இது கோவை மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
பி.ரஹ்மான், கோவை
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“