/indian-express-tamil/media/media_files/2025/04/11/QRP6BgceNWABqb94BHBH.jpg)
கோடை விடுமுறை வந்தாலே குளிர்ச்சியான இடங்களுக்கு சுற்றுலா செல்ல வேண்டும் என்று பலரும் விருப்பப்படுவார்கள். வெளிமாநிலங்கள் அல்லது வெளிநாடுகளுக்கு சிலர் சென்றாலும், நம் ஊரில் இருக்கும் சிறப்பான ஊர்களை காண வேண்டும் என்ற ஆசை பலருக்கு இருக்கும். மேலும், இதற்கான செலவும் குறைவாக இருக்கும்.
அந்த வகையில் தேனிக்கு அருகே இருக்கும் மேகமலை குறித்து தற்போது காணலாம். முதலாவதாக மேகமலை செல்பவர்கள், அதன் வழியில் இருக்கும் சின்ன சுருளி நீர் வீழ்ச்சிக்கு செல்லலாம். வருடத்தின் அனைத்து நாட்களிலும் இங்கு நீர் வரத்து இருப்பதாக கூறப்படுகிறது. எனவே, குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் செல்ல இப்பகுதி ஏற்றதாக இருக்கும்.
அடுத்தபடியாக, மேகமலை செல்லும் பகுதியில் நிறைய தேயிலை தோட்டங்களை பார்க்க முடியும். இதன் இயற்கை எழில் கொஞ்சும் காட்சி காண்போர் கண்களை கவரும் வகையில் இருக்கும். புகைப்படங்கள் நிறைய எடுக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், இந்தப் பகுதியில் எடுக்கலாம்.
மேலும், மேகமலை செல்லும் வழியிலேயே ஹைவேவிஸ் அணை அமைந்திருக்கும். பார்ப்பதாற்கு சிறியதாக இருந்தாலும், மிகவும் அழகாக இருக்கும். ஏரியின் மூலமாக இந்த அணைக்கு தண்ணீர் பாய்ச்சப்படுகிறது. இதைக் கடந்து செல்லும் அனைத்துப் பாதைகளும் இயற்கை அழகுடன் காட்சி அளிக்கும்.
இதையடுத்து, மகாராஜா மெட்டு பகுதியைக் காணலாம். ரூ. 30 கொடுத்து டிக்கெட் வாங்கி செல்ல வேண்டும். இங்கு நடக்கும் போது அப்பகுதியின் அனைத்து இடங்களையும் முற்றிலும் பார்க்கும் வகையில் இருக்கும். குறிப்பாக, இங்கிருந்து பார்த்தால் தேனி, சின்னமனூர் மற்றும் கேரள பகுதிகளையும் பார்க்கலாம்.
இறுதியாக, மேகமலையை விட்டு கீழே இறங்கும் போது மாலை 5:30 மணிக்கு முன்பாக வந்து விட வேண்டும். இல்லையென்றால் அங்கிருந்து வருவதற்கு அனுமதி இருக்காது. பின்னர், அங்கேயே அறை எடுத்து தங்க வேண்டிய சூழல் இருக்கும். மேலும், இப்பகுதியில் யானைகள் அதிகமாக நடமாடுவதால் கவனமாக செல்ல வேண்டும்.
இந்த கோடை காலத்தில் குளிர்ச்சியான இடத்திற்கு செல்ல வேண்டும் என்று விருப்பப்படுபவர்களுக்கு மேகமலை ஒரு நல்ல தேர்வாக அமையும்.
நன்றி - Benny planet Youtube Channel
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.