பாண்டவர் இல்லம் சீரியலில் ரேவதியாக கலக்கி கொண்டு இருக்கிறார் கிருத்திகா அண்ணாமலை. பல சீரியல்களில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து தனக்கென ஒரு பாதையை அமைத்துக் கொண்டவர். 2001-ல் 10ஆம் வகுப்பு படிக்கும்போது ஆண்டான் அடிமை என்ற படத்தில் சத்தியாராஜ் தங்கையாக நடித்து திரையுலகில் அறிமுகமானார். அடுத்து பேசாத கண்ணும் பேசுமே படத்தில் குணாளின் தங்கையாக நடித்தார். பிறகு கல்லூரி முதலாம் ஆண்டு படிக்கும்போதுதான் சின்னத்திரையில் அறிமுகமானார்.

சன் டிவியில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் ஆன மெட்டி ஒலி தொடரில் அருந்ததி என்ற கேரக்டரில் நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார். தொடர்ந்து ஆனந்தம், ஆடுகிறான் கண்ணன், கணவருக்காக, செல்லமே, முந்தாணை முடிச்சு என அடுத்தடுத்த சீரியல்களில் நடித்து நல்ல ரீச் ஆனார். அதன்பின்னர் திருமணமாகி 3 வருடங்கள் எந்த சீரியலிலும் நடிக்காமல் இருந்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு மரகத வீணை, கேளடி கண்மணி, வம்சம், செல்லமே, செல்லமடி நீ எனக்கு, பைரவி ஆவிகளுக்கு பிரியமானவள், என் இனிய தோழியே, பாசமலர், ரேகா ஐபிஎஸ், கல்யாண பரிசு போன்ற தொடர்களில் நடித்தார்.

பல மெகா சீரியல்களில் வில்லியாக நடித்து தனக்கென ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி உள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சின்னத்தம்பி சீரியலிலும் நெகட்டிவ் ரோலில் நடித்துள்ளார். இவருக்கு வில்லி கேரக்டர் தான் பிளஸ் பாயிண்ட். கிருத்திகா நட்சத்திர கபடி ஷோவில் வம்சம் டீம் கேப்டனாக இருந்தார். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு வம்சம் ராதா என பிரபலமாக அறியப்பட்டார். கிராமத்தில் ஒரு நாள் போன்ற நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார்.

சீரியல் மட்டுமில்லாமல் கலைஞர் டிவியில் ஒளிபரப்பான மானாட மயிலாட ரியாலிட்டி ஷோவிலும் பங்கேற்று ஆடியுள்ளார். தற்போது சன்டிவியின் இரண்டு முன்னணி தொடர்களில் நடித்து வருகிறார் கிருத்திகா. சுந்தரி சீரியலில் போலீஸ் கேரக்டரிலும், பாண்டவர் இல்லம் சீரியலில் மூத்த மருமகள் ரேவதியாகவும் நடிப்பில் அசத்தி வருகிறார். 15 வருடங்களாக சின்னத்திரையில் நடித்து வருகிறார். பொதுவாக பாசிட்டிவ் கேரக்டரை விட நெகட்டிவ் கேரக்டருக்கு தான் அதிக வரவேற்பு கிடைப்பதாக கூறும் கிருத்திகா வில்லி ரோலில் நடிப்பதை மிகவும் விரும்பி தேர்ந்தெடுக்கிறார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil