நம் அன்றாட வாழ்க்கையில் கண்ணாடிகள் வெறும் பிரதிபலிக்கும் பொருட்கள் மட்டுமல்ல. அவை நம் மனநிலையையும், நம்மைப் பற்றிய உணர்வையும் வெளிப்படுத்துகின்றன. ஒரு அழுக்கு படிந்த கண்ணாடி நம் தோற்றத்தை மங்கலாக்குவதோடு, நமக்கு ஒருவித எதிர்மறை உணர்வையும் ஏற்படுத்தும். உங்கள் கண்ணாடியை எப்பொழுதும் பளிச்சென்று வைத்திருக்க, வீட்டிலுள்ள சில எளிய பொருட்களைக் கொண்டு எப்படிப் புத்தம் புதியது போல் ஜொலிக்க வைக்கலாம் என்று பார்ப்போம்.
கண்ணாடியை ஜொலிக்க வைக்கும் 5 எளிய பொருட்கள்
பல் துலக்கும் பேஸ்ட்:
நீண்ட நாள் பராமரிக்காமல் விடப்பட்ட கண்ணாடிகளில் கருப்புப் புள்ளிகள் விழுந்தால், பல் துலக்கும் பேஸ்ட் ஒரு சிறந்த தீர்வாக இருக்கும். ஒரு ஸ்பூன் பேஸ்ட்டுடன் இரண்டு ஸ்பூன் தண்ணீர் கலந்து, ஒரு துணியால் கண்ணாடி முழுவதும் தேய்க்கவும். 10 நிமிடங்கள் ஊற வைத்த பிறகு, ஒரு செய்தித்தாள் கொண்டு நன்கு தேய்க்கவும். கருப்புப் புள்ளிகள் அகன்றுவிடும். இறுதியாக, ஒரு வெள்ளை துணியால் துடைக்க கண்ணாடி பளபளப்பாக மாறும்.
வினிகர்:
வீட்டு வேலைகளுக்கு இன்றியமையாத ஒன்றான வினிகர், கண்ணாடி சுத்தம் செய்வதிலும் கைகொடுக்கும். ஒரு ஸ்பூன் வினிகருடன் இரண்டு ஸ்பூன் தண்ணீர் கலந்து, கண்ணாடி முழுவதும் தேய்த்து 10 நிமிடங்கள் ஊற விடவும். பிறகு, செய்தித்தாள் பயன்படுத்தி நன்கு துடைக்க, கறைகள் நீங்கி கண்ணாடி ஜொலிக்கும்.
ஷேவிங் க்ரீம்:
உங்கள் கண்ணாடியைப் புதிதுபோல் மாற்ற, ஷேவிங் க்ரீம் உதவக்கூடும். ஷேவிங் க்ரீமில் சிறிதளவு தண்ணீர் கலந்து கண்ணாடியில் தடவி 15 நிமிடங்கள் ஊற வைக்கவும். பின்னர் செய்தித்தாள் கொண்டு தேய்க்க, கறைகள் நீங்கும். அடுத்ததாக, சுத்தமான துணியைக் கொண்டு துடைக்க கண்ணாடி புத்தம் புதியது போல் ஆகிவிடும்.
டால்கம் பவுடர் அல்லது விபூதி:
டால்கம் பவுடர் அல்லது விபூதியைப் பயன்படுத்தியும் கண்ணாடியை ஒளிரச் செய்யலாம். கண்ணாடியில் டால்கம் பவுடர் அல்லது விபூதியைத் தூவி சிறிது நேரம் அப்படியே விடவும். பிறகு ஒரு டஸ்டர் அல்லது பேப்பர் கொண்டு தேய்க்க, கண்ணாடி பளபளப்பாக மாறுவதை நீங்கள் காணலாம்.
எலுமிச்சை சாறு:
எலுமிச்சை சாறு கண்ணாடிக்கு ஒரு இயற்கையான பிரகாசத்தைக் கொடுக்கும். எலுமிச்சை சாற்றில் சிறிது தண்ணீர் கலந்து ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் நிரப்பவும். இப்போது அதை கண்ணாடியில் தெளித்து ஒரு ஃபைபர் டவலால் துடைக்கவும். உங்கள் கண்ணாடி உடனடியாக மின்னத் தொடங்கும்!
இந்த எளிய குறிப்புகளைப் பயன்படுத்தி உங்கள் கண்ணாடியை எப்பொழுதும் சுத்தமாகவும், பிரகாசமாகவும் வைத்துக்கொள்ளுங்கள். ஒரு சுத்தமான கண்ணாடி உங்கள் தோற்றத்தை மட்டுமல்ல, உங்கள் மனநிலையையும் மேம்படுத்தும்!