/indian-express-tamil/media/media_files/2025/08/26/tamannaah-bhatia-fitness-2025-08-26-16-02-12.jpg)
Tamannaah Bhatia Fitness Mantra
காலை 4 மணிக்கு எழுந்து, 4.30 மணிக்கெல்லாம் உடற்பயிற்சி செய்யத் தொடங்கிவிடுகிறார் நடிகை தமன்னா பாட்டியா. சமீபத்தில், தனது பயிற்சியாளருடன் பேசியபோது இந்த ரகசியத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் 35 வயது தமன்னா. உடற்பயிற்சி முடிந்ததும் ஓய்வெடுக்காமல், தொடர்ந்து 8 முதல் 12 மணிநேரம் வேலை செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறாராம்.
“பகலில் குட்டித்தூக்கம், ஓய்வு என எதுவும் இல்லை. நாள் முழுவதும் வேலை செய்வேன். எத்தனை மணிநேரம் வேலை செய்வேன் என்பது எனக்கும்கூட தெரியாது. சிலசமயம் 8 மணிநேரம், சிலசமயம் 12 மணிநேரம்...அது ஒரு சர்ப்ரைஸ்.
காலையில் சீக்கிரம் எழுந்து உடற்பயிற்சி செய்வது அவசியம். உணவில் கட்டுப்பாட்டுடன் இருப்பது நல்லதுதான். ஆனால், உடற்பயிற்சிக்கு அது ஒருபோதும் ஈடாகாது. நீங்கள் கண்டிப்பாகப் பயிற்சி செய்ய வேண்டும். நான் அதை மிகவும் ரசித்துச் செய்கிறேன்,” என்று தனது பயிற்சியாளரிடம் பகிர்ந்துகொண்டார் தமன்னா.
அதிகாலையில் உடற்பயிற்சி செய்வது எப்படி உதவுகிறது?
தமன்னாவைப் போல அதிகாலையில் 4 மணிக்கு எழுந்து உடற்பயிற்சி செய்வது உண்மையில் புத்துணர்ச்சியூட்டக்கூடியது என்கிறார் ஊட்டச்சத்து நிபுணரும், நீரிழிவு ஆலோசகருமான கனிக்கா மல்ஹோத்ரா.
“சூரியன் உதிப்பதற்கு முன்பே ஒரு நாளைத் தொடங்குவது ஒரு நிறைவான உணர்வைத் தரும். இது நேர்மறையான மனநிலையை ஏற்படுத்தவும் உதவும். அதிகாலை உடற்பயிற்சி கவனம் செலுத்துவதற்கும், ஆற்றலை நிலையாக வைத்திருக்கவும், இரவில் நல்ல உறக்கத்தைப் பெறவும் உதவுகிறது. மேலும், உடற்பயிற்சிக்குப் பிறகு தூங்காமல் இருப்பது உடலின் உள் கடிகாரத்தை சீராக வைத்திருக்க உதவுகிறது. இதனால் இரவில் நிம்மதியான தூக்கமும், பகலில் சுறுசுறுப்பும் இருக்கும்,” என்கிறார் மல்ஹோத்ரா.
உங்கள் உடலும் மனமும் தயாராக உள்ளதா?
இரவில் 7 முதல் 9 மணிநேரம் நல்ல தூக்கம் கிடைத்தால் மட்டுமே இந்த உடற்பயிற்சி முறை ஆரோக்கியமானது. சீக்கிரம் தூங்கச் செல்வபவர்களுக்கு இந்த வழக்கம் மிகவும் உகந்தது. “மனதுக்கும் உடலுக்கும் போதுமான ஓய்வளித்து, இத்தகைய ஒழுக்கத்தைக் கடைப்பிடிப்பது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. மேலும், ஒவ்வொரு நாளையும் புத்துணர்ச்சியுடனும், உற்சாகத்துடனும் உணர வைக்கிறது,” என்கிறார் மல்ஹோத்ரா.
நிபுணர்களின் கூற்றுப்படி, அதிகாலையில் உடற்பயிற்சி செய்வது குடல் இயக்கங்களை மேம்படுத்தி, அஜீரணக் கோளாறுகளைக் குறைக்கிறது. முதலில் தண்ணீர் அருந்தி, பின்னர் நார்ச்சத்து நிறைந்த உணவுகளைச் சாப்பிடுவது குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, நாள் முழுவதும் ஆற்றலுடனும், நல்ல மனநிலையுடனும் இருக்க உதவுகிறது.
சீரான அதிகாலை உடற்பயிற்சியானது குடலில் நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவித்து, செரிமான மண்டலத்தையும், நோய் எதிர்ப்பு சக்தியையும் வலுப்படுத்துகிறது. பகலில் தூங்குவதைத் தவிர்ப்பது உடலின் உள் கடிகாரத்தைச் சீராக வைத்திருக்க உதவுகிறது. இது நல்ல தூக்கத்திற்கும், ஒட்டுமொத்த குடல் ஆரோக்கியத்திற்கும் மிகவும் அவசியமானது.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் வாசிக்க இந்த இணைப்பை கிளிக் செய்யவும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.