/indian-express-tamil/media/media_files/2025/09/03/aksharaa-2025-09-03-12-15-04.jpg)
Aksharaa hassan
சினிமா என்ற பெரும் சாம்ராஜ்யத்தில், நட்சத்திரக் குடும்பத்தில் பிறந்தவர்களுக்குப் பாதை எளிதாக இருக்கும் என்ற பொதுவான ஒரு கருத்து நிலவுகிறது. ஆனால், அதைத் தலைகீழாக மாற்றி, தனக்கான பாதையைத் தானே செதுக்கிக் கொண்டவர் ஒருவர் உண்டு. அவர்தான், உலக நாயகன் கமல்ஹாசனின் இளைய மகள் அக்ஷரா ஹாசன். சுருதி ஹாசனின் தங்கை என்ற அடையாளத்தைத் தாண்டி, தனது பன்முகத் திறமையால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர்.
அக்ஷரா ஹாசன், 1991 அக்டோபர் 12-ம் நாள் சென்னையில் பிறந்தார். கலை உலகையே சுவாசிக்கும் குடும்பத்தில் இருந்து வந்த இவருக்கு, இயல்பாகவே நடிப்பு மற்றும் கலை ஆர்வம் இருந்தது. மூத்த சகோதரி ஸ்ருதி ஹாசன், இசை மற்றும் நடிப்பில் ஜொலித்து வரும் நிலையில், அக்ஷரா தனது பாதையை சற்று வித்தியாசமாக அமைத்துக் கொண்டார்.
வழிகாட்டிகளின் வழியே...
திரைப்பட உலகில் கதாநாயகியாக அறிமுகமாவதற்கு முன்பு, அக்ஷரா, உதவி இயக்குநராகப் பணியாற்றினார். ராகுல் தோலாகியா, ராம மூர்த்தி, ருச்சி நாராயண் போன்ற பிரபல இயக்குநர்களிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்து, திரைப்படத் தயாரிப்பின் நுட்பங்களைக் கற்றுக் கொண்டார். இந்த அனுபவம், அவருக்கு திரைப்படத்தின் அனைத்துப் பக்கங்களையும் புரிந்துகொள்ள உதவியது. மணிரத்னம் இயக்கிய 'கடல்' படத்தில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு வந்தபோதும், அதை மறுத்து உதவி இயக்குநராகப் பணியாற்றுவதையே அவர் விரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு நட்சத்திரத்தின் உதயம்
2015-ல், அமிதாப் பச்சன் மற்றும் தனுஷ் உடன் இணைந்து 'ஷமிதாப்' (Shamitabh) என்ற இந்தித் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். விவேகம் (2017), கடாரம் கொண்டான் (2019) போன்ற தமிழ்த் திரைப்படங்களிலும், அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு (2022) போன்ற படங்களிலும் நடித்துள்ளார். ஒவ்வொரு படத்திலும், அவர் ஏற்றுக்கொண்ட பாத்திரங்கள் தனித்துவமானவை.
நடிகையைத் தாண்டி...
அக்ஷரா ஹாசன் ஒரு திறமையான நடனக் கலைஞர். குறிப்பாக, பால்ரூம் நடனத்தில் அவருக்கு சிறப்பான பயிற்சி உண்டு. நடிப்பைத் தாண்டி, நடன இயக்குநர் ஆக வேண்டும் என்ற கனவும் அவருக்கு இருந்தது. சமீபத்தில் ஒரு யூடியூப் நேர்காணலில் 10ஆம் வகுப்பு இரண்டு முறை ஃபெயில் ஆனதை அக்ஷரா ஹாசன் வெளிப்படையாக பகிர்ந்து கொண்டார்.
”நான் ஹை ஸ்கூல் முடிக்கல. பரவால்ல சில பேருக்கு படிப்பு ஒத்துக்காது. எனக்கு ஒத்துக்கல. நான் படிப்பை பாதியிலேயே நிறுத்திட்டேன். நான் 10வது ஃபெயில் ஆகிட்டேன். மறுபடியும் டிரை பண்ணேன். திரும்பியும் ஃபெயில் ஆகிட்டேன். என்ன செய்றதுனே தெரியல. ரொம்ப கடுப்பா இருந்தது. மானம் போயிடுச்சு. மக்கு மாதிரி ஃபீல் ஆச்சு. நான் அப்பாகிட்ட போய் சொன்னேன். அப்பா டிரை பண்ணேன். நான் பாஸ் ஆகல. நான் படிப்பை விடுறதுதான் நல்லதுனு நினைக்கிறேன். ஆனா வெட்டியா இருக்க மாட்டேன்’னு சொன்னேன்.
அப்பா என்ன பண்ண போறனு கேட்டாரு. நான் டான்ஸ் கத்துக்கிறேன். காலேஜ் போகணும் சொன்னேன். ஸ்கூல் முடிக்காம எப்படி காலேஜ் போவ’னு அப்பா கேட்டாரு. சொல்யூஷன் இருக்கு பா. போகலாம்” சொன்னேன் என்று அக்ஷரா அப்பாவித்தனத்துடன் அந்த பேட்டியில் பகிர்ந்து கொண்டார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.