நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி வெற்றிபெற வேண்டி நடிகர் கஞ்சா கருப்பு திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோவிலில் அக்னி சட்டி ஏந்தி வழிபாடு நடத்தினார். முன்னதாக மாலை அணிந்து விரதம் மேற்கொண்ட அவர், மஞ்சள் உடை உடுத்தி தெப்பக்குளத்தில் இருந்து குடும்பத்தினருடன் அக்னி சட்டி ஏந்தி கடைவீதி வழியாக கோவிலை வலம் வந்து நேர்த்திக்கடனை செலுத்தினார்.
இந்த காணொளி தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது. வாக்குப்பதிவு தேதி நெருங்கி வரும் நிலையில் பரப்புரை என்ற பெயரில் வருடா வருடம் சில சுவாரஸ்ய சம்பவங்கள் நடந்தேறும். அந்த வகையில், அ.தி.மு.க.வில் இணைந்த நடிகர் கஞ்சா கருப்பு அந்தக் கட்சி இந்த தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்கிற வேண்டுதலோடு, தீச்சட்டியுடன் சமயபுரம் மாரியம்மன் கோயில் பிரகாரத்தை சுற்றி வந்தார்.
அக்னி குண்டத்தில் சட்டியை இறக்கி வைக்கும் போது, "ஆத்தா, மாரியாத்தா... எடப்பாடி ஐயா தான் எல்லாத் தொகுதிகளிலும் ஜெயிக்கணும் என்றார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்த எம்பி எலெக்ஷன்ல எடப்பாடி ஐயாவுக்கு இரட்டை இலை கிடைத்ததே பெரிய விஷயம். எல்லாத் தொகுதிகளிலும் அவர் வெற்றி பெற திருச்சி மாரியம்மனிடம் ஐந்து அக்னி சட்டி, மூன்று பால்குடம் எடுத்து வேண்டியிருக்கிறேன்.
திருச்சி அ.தி.மு.க வேட்பாளர் அதிக வாக்கு வித்தியாசத்தில் ஜெயிக்கணும். ராம்நாட், சேலம் என எல்லா மாவட்டங்களுக்கும் போய் வந்து கொண்டிருக்கிறேன். எடப்பாடி ஐயா ஜெயித்து மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என மாரியாத்தாவிடம் வேண்டி இருக்கிறேன் என்றார்.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“