/indian-express-tamil/media/media_files/2025/08/09/amaduai-2025-08-09-14-00-27.jpg)
மதுரை மாவட்டம் அழகர்மலை அடிவாரத்தில் அமைந்துள்ள, தென்திருப்பதி என்று புகழப்படும் 108 வைணவ தலங்களில் ஒன்றான திருமாலிருஞ்சோலை கள்ளழகர் கோவிலில், ஆடிப்பெருந்திருவிழா திருத்தேரோட்டம் இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா கோஷம் முழங்க வெகு விமர்சையாக நடைபெற்றது.
கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய இந்த விழாவில், நாள்தோறும் ஸ்ரீதேவி, பூதேவி சமேத கள்ளழகர் பெருமாள், பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்தார். இன்று காலை 9 மணிக்கு பக்தர்கள் திருத்தேரின் வடங்களைப் பிடித்து இழுத்துச் சென்றனர். மேளதாள இசையுடன் பக்தர்கள் சந்தனக் குடங்கள் ஊர்வலமாக எடுத்துச் சென்று, பதினெட்டாம் படி கருப்பணசாமி கோவிலில் பொங்கல் வைத்தும், கிடாய் வெட்டியும், அன்னதானம் வழங்கியும் நேர்த்திக்கடன் நிறைவேற்றினர்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் மேற்பார்வையில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அழகர்மலை நூபுர கங்கை ராக்காயி அம்மன், சோலைமலை முருகன், மூலவர் கள்ளழகர் பெருமாள், பதினெட்டாம் படி கருப்பணசுவாமி ஆகிய கோவில்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நெய் விளக்குகள் ஏற்றி சாமி தரிசனம் செய்தனர்.
இந்த விழாவில் பத்திரப் பதிவு துறை அமைச்சர் மூர்த்தி, தக்கார் வெங்கடாசலம், துணை ஆணையர் ராமசாமி, மேலூர் எம்எல்ஏ பெரிய புள்ளான், ஒன்றிய குழு தலைவர் பொன்னுச்சாமி, பேரூராட்சி தலைவர் குமரன், ஊராட்சி மன்ற தலைவர் தீபா தங்கம் உள்ளிட்டோர், வருவாய் மற்றும் அறநிலையத் துறை அதிகாரிகள், திருக்கோவில் பணியாளர்கள் கலந்து கொண்டனர். மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, திருநெல்வேலி, சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களிலிருந்தும், கேரளம் போன்ற மாநிலங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.