Tamil Recipe News, Pazhaya soru Tamil Video: பழைய சாதம் சாப்பிடுவதால் உடலுக்கு அதிக நன்மைகள் கிடைப்பதாக அறிவியல்பூர்வ ஆய்வுகள் கூறுகின்றன. எனவே இனியும் நாம் பழைய சாதத்தை வீணாக்க வேண்டாம். முந்தைய நாள் மீந்துபோன சாதத்தை அடுத்த நாள் தாளித்து, சுவையைக் கூட்டியும் சாப்பிடலாம்.
Advertisment
குறிப்பாக அடிக்கடி சமையல் செய்ய நேரம் இல்லாதவர்கள், பேச்சிலர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தலாம். சின்ன வெங்காயம், தயிர், மோர் மிளகாய் மற்றும் தாளிக்க எண்னெய், உளுந்தம் பருப்பு, கடுகு ஆகியன மட்டுமே இதற்கு தேவை. பழைய சாதம் அல்லது பழைய சோறு எப்படி தாளித்து சாப்பிடுவது? என இங்கு பார்க்கலாம்.
Pazhaya soru Tamil Video: பழைய சோறு எப்படி தாளிப்பது?
Advertisment
Advertisements
சமைத்து நன்கு சூடு தணிந்த அரிசி சாதத்தை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் தண்ணீர் ஊற்றி, கட்டி இல்லாமல் கரண்டியால் லேசாக கிளறி விடுங்கள். சாதத்தை கிளற கைகளைப் பயன்படுத்த வேண்டாம். அது விரைவில் சாதம் கெட்டுப்போக வழிவகுக்கும். சாதம் மூழ்குகிற அளவைவிட சற்று கூடுதலாகவே தண்ணீர் சேர்த்து அப்படியே மூடி வைத்துவிடுங்கள்.
இரவில் இப்படி வைத்தால், காலையில் அந்தப் பாத்திரத்தை எடுத்து திறங்கள். இப்போது அதில் இருக்கும் தண்ணீரை வடித்து எடுங்கள். இந்தத் தண்ணீருடன் சிறிது தயிரும், தேவையான அளவு உப்பும் சேர்த்து அருந்தப் பயன்படுத்தலாம். குறிப்பாக காலையில் வெறும் வயிற்றில் அருந்த இந்தத் தண்ணீர் மிகவும் ஏற்றது. இது நமக்கு கிடைக்கும் கிளை உணவுதான். மெயின் உணவான சாதம் இப்போது பாத்திரத்தில் இருக்கும். இதையே நாம் தாளித்து உணவாக்கப் போகிறோம்.
முதலில் 10 சின்ன வெங்காயம் எடுத்து நறுக்கி வைத்துக் கொள்ளவும். தேவையான அளவு கறிவேப்பிலை எடுத்துக் கொள்ளுங்கள். 4 மோர் மிளகாய் தேவை. ஒரு வாணலியில் ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு, அதில் அந்த மோர் மிளகாய்களை வறுத்துக் கொள்ளவும். அதனுடன் கடுகு சேர்த்து பொரிய விடுங்கள்.
பிறகு தாளிப்பதற்கு ஏற்ப அரை ஸ்பூன் உளுந்தம் பருப்பு சேர்க்கவும். சிறிது கிளறிவிட்டு வறுத்ததும், நறுக்கி வைத்த வெங்காயத் துண்டுகளை சேர்க்கவும். தேவையான அளவு உப்பு, கறிவேப்பிலையையும் சேர்த்து கிளறி விடுங்கள். வெங்காயம் நன்கு வதங்கியதும், இவற்றை எடுத்து ஏற்கனவே வைத்திருக்கும் பழைய சாதத்துடன் சேர்க்கவும்.
வெங்காயத்தில் சற்றே சூடு தணிந்தவுடன், சாதத்துடன் சிறிது தயிர் சேர்த்துக் கொள்ளலாம். இறுதியாக சற்றே கிளறி விடுங்கள். இப்போது தாளித்த பழைய சோறு தயார். உள்ளே நாம் போட்ட மோர் மிளகாயை கடித்துக் கொண்டே இந்த பழைய சோறை சாப்பிட்டுப் பாருங்கள். நட்சத்திர ஹோட்டல் சாப்பாடுகூட இதை நெருங்க முடியாது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"