டெல்லியில் ஜி20 உச்சி மாநாடு பிரகதி மைதானத்திலுள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்ளிட்ட பல உலக நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.
மாநாட்டு அரங்கில் நம் நாட்டின் கலாச்சாரங்களைப் பிரதிபலிக்கக்கூடிய வகையிலான கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. இதில் இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலுள்ள பண்பாடு மற்றும் கலாச்சாரங்களைப் போற்றக்கூடிய விதமான பல்வேறு அம்சங்கள் இடம் பெற்று பார்வையாளர்களைக் கவர்ந்திருக்கிறது.
அந்தவகையில், தஞ்சாவூரின் பாரம்பரியம் மற்றும் அடையாளங்களில் ஒன்றாக தஞ்சாவூர் ஓவியம் திகழ்ந்து வருகிறது. கும்பகோணத்தைச் சேர்ந்த ஓவியர் பன்னீர்செல்வம் என்பவர் சக்கரபாணி ஆர்ட்ஸ் என்ற பெயரில் தஞ்சாவூர் ஓவியம் செய்து வருகிறார். வறுமையில் இருக்கக்கூடிய ஆண்கள், பெண்களைக் கண்டறிந்து அவர்களுக்கு தஞ்சாவூர் ஓவியம் வரைய கற்றுத் தந்து வாழ்வாதாரம் ஏற்படுத்தித் தருவதுடன் கலை பரவுவதற்குக் காரணமாகவும் இருந்து வருகிறார்.
/indian-express-tamil/media/media_files/zjg6Q5oKfn9fydndYBfK.jpeg)
உலகின் பல நாடுகளுக்கு தஞ்சாவூர் ஓவியத்தின் பெருமையைப் பறைசாற்றி வரும் பன்னீர்செல்வம், கைவினைக் கலைஞர்களுக்கான உயரிய விருதான `சில்ப் குரு' விருது பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், தென் மாநிலங்களில் தமிழகத்திலிருந்து ஜி20 மாநாட்டுக்காக அழைக்கப்பட்டிருந்த ஒரே கைவினைக் கலைஞர் என்ற சிறப்பைப் பெற்றிருக்கிறார் பன்னீர்செல்வம். இதில் நெகிழ்ந்திருக்கும் அவர் இது தஞ்சை மண்ணுக்குக் கிடைத்த பெருமை என மகிழ்ச்சியுடன் பேசி வருகிறார்.
இது குறித்து பன்னீர்செல்வம் தெரிவித்ததாவது, ``உலகத் தலைவர்கள் பங்கேற்கக்கூடிய ஜி20 உச்சி மாநாட்டில் கலைகளுக்குப் பெயர் பெற்ற தஞ்சாவூர் மண்ணிலிருந்து, தென்மாநிலங்களில் தமிழகத்திலிருந்து கலந்து கொண்டிருக்கும் ஒரே கைவினைக் கலைஞன் நான் என்பது எனக்குப் பெருமிதத்தைத் தருகிறது. இதைத் தமிழகத்துக்குக் கிடைத்த பெருமையாகக் கருதுகிறேன். ஏற்கெனவே மாநாட்டு முகப்பில் வைக்கப்பட்டிருக்கும் நடராஜர் சிலை கும்பகோணத்திலுள்ள ஸ்தபதிகளால் செய்யப்பட்டிருக்கிறது. மாநாட்டின் முத்தாய்ப்பாக நடராஜர் சிலை அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
/indian-express-tamil/media/media_files/OryLeqzjBb0ePHNTWGGQ.jpeg)
இந்த நிலையில், உச்சிமாநாட்டுக்காக இந்தியாவிலுள்ள பல மாநிலங்களைச் சேர்ந்த சிறந்து விளங்கக்கூடிய ஏழு கைவினைக் கலைஞர்கள் அழைக்கப்பட்டனர். தென் இந்தியாவிலுள்ள மாநிலங்களில் தமிழகத்திலிருந்து கைவினைக் கலைஞரான என்னை அழைத்திருக்கிறார்கள். நானும் உதவிக்காக என் மகன் மனோஜும் இதில் கலந்து கொண்டோம். எனக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் அரங்கில் நம் பாரம்பரியமான தஞ்சாவூர் ஓவியத்தைக் காட்சிப் படுத்தியிருப்பதுடன், தஞ்சாவூர் ஓவியம் எப்படி உருவாகிறது என உலகிலிருந்து வந்திருக்கக்கூடிய தலைவர்கள் உள்ளிட்ட பலருக்கு செய்து காட்டினேன். இதைப் பார்த்தவர்கள் தமிழகத்தையும், தஞ்சாவூர் மண்ணின் பாரம்பரியத்தையும் புகழ்ந்தனர்.
தென் மாநிலங்களிலிருந்து நான் ஒருவன் மட்டுமே இதில் கலந்துகொண்டிருப்பது எனக்குக் கிடைத்த பெருமை இல்லை. கலைகளுக்குப் பெயர்போன வரலாற்றுச் சிறப்பு கொண்ட தஞ்சாவூர் மண்ணுக்கும் தமிழ்நாட்டுக்கும் கிடைத்த பெருமை. நம் அரசு பண்பாடு மற்றும் கலாசாரத்தின் வளர்ச்சிகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தின் மூலம் கலைகள் வளர்கிறது. நமக்கான அடையாளம் தனித்துவத்துடன் கிடைக்கிறது” என்றார் பெருமையாக.
செய்தி: க. சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“