கோவையில் பிரசித்தி பெற்ற மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு நாள்தோறும் பல்வேறு இடங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் அக்கோவிலில் தைப்பூச திருத்தேர் திருவிழா நடைபெறும் தேதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதன்படி பிப்ரவரி மாதம் 4ம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை திருத்தேர் திருவிழா நடைபெற உள்ளது. இந்த நாட்களில் மலை மேல் பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகம் செய்வதற்கு தடை விதிக்கப்படுவதாகவும் ஜமாப், கொட்டும் முரசு, தாரை தப்பட்டை போன்றவற்றை அடிவாரம் வரை மட்டுமே வாசிக்க வேண்டும் எனவும் மலைக் கோவிலில் வாசிக்க அனுமதி இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் தைப்பூச திருத்தேர் திருவிழா நடைபெறும் பிப்ரவரி 4-ம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை மூலவருக்கு உபயதாரர் அபிஷேகம் கிடையாது. இந்த நாட்களில் சிறப்பு அலங்காரத்துடன் மூலவர் காட்சி அளிப்பார் என கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இக்கோவிலில் ரூ250 செலுத்தி பெயர் மற்றும் முகவரியே பதிவு செய்து கொண்டால் ஒவ்வொரு கிருத்திகை அன்றும் அர்ச்சனை செய்து அந்த முகவரிக்கு ஓராண்டிற்கு தபாலில் பிரசாதம் அனுப்பி வைக்கப்படும்.
தங்க ரத புறப்பாடு தினம்தோறும் 6 மணிக்கு நடைபெறும். அதில் ரூ2000 செலுத்தி விரும்பும் நாளில் தங்கரதம் புறப்பாடு செய்யலாம். அபிஷேகம் செய்ய விரும்பும் பக்தர்கள் விரும்பும் நாளில் 1,500 ரூபாய் அலுவலகத்தில் செலுத்தி அபிஷேகம் செய்வதற்கு முன்பதிவு செய்து கொள்ளலாம் என கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் மூலவர் மற்றும் இதர பரிவார தெய்வங்களுக்கு விசேஷ தினங்களில் சிறப்பு அபிஷேகம் செய்ய விரும்பும் பக்தர்கள் 2 லட்சம் செலுத்தினால் அதில் இருந்து பெறப்படும் வட்டி தொகையைக் கொண்டு வருடத்திற்கு ஒரு நாள் விரும்பும் தேதியில் விரும்பும் பெயரில் பூஜை செய்யப்பட்டு பிரசாதம் வழங்கப்படும்.
பக்தர்கள் அவர்களின் பிறந்த நாள், திருமண நாள் மற்றும் விருப்பப்பட்ட நாட்களில் அன்னதானத்திற்கு நாளொன்றுக்கு 52,500 செலுத்தியும் நிரந்தர கட்டளை பெயரில் ஒன்பது லட்சம் ரூபாய் செலுத்தியும் பங்கேற்கலாம் என கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது. மேலும் கோவிலின் வரலாறு பூஜை நேரங்கள் கட்டண விவரங்கள் நன்கொடை செலுத்தும் வசதி பக்தர்களுக்கான வசதி ஆகியவற்றை "திருக்கோவில்" எனும் மொபைல் போன் செயலி மூலம் அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பி.ரஹ்மான் கோவை மாவட்டம்.