தென்னிந்தியாவின் மிகப்பெரிய க்ரிமினல் என்று முத்திரை குத்தப்பட்ட சந்தன கடத்தல் வீரப்பனுக்கு, முத்துலட்சுமி என்ற மனைவியும், இரு மகள்களும் உள்ள நிலையில், இதில் மூத்த மகளுக்கு, ஒரு காவல்துறை அதிகாரி பெயர் வைத்துள்ளார் என்பது பலரும் அறியாத ஒரு தகவல்.
Advertisment
1952-ம் ஆண்டு கோபிநத்தம் என்ற பகுதியில் பிறந்தவர் வீரப்பன். தனது 10 வயது முதல் சட்டத்திற்கு புறம்பான வேலைகளில் ஈடுபட்டு வந்தாக கூறப்படும் நிலையில், 80-90 களில் தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் கேரளா காவல்துறையில், இவர் மீது பல்வேறு வழக்குகள் பதிந்துள்ளது. யானைகளை கொன்றது, வெடிக்குண்டு சம்பவங்கள், சந்தனமரம் கடத்தல் என பல வழக்குகளில், வீரப்பன் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.
மேலும் கர்நாடக மாநிலத்தின் ஆளுமையாக இருந்த நடிகர் ராஜ்குமார், முன்னாள் விவசாயத்துறை நாகப்பா ஆகியோரை கடத்திய வீரப்பன், நடிகர் ராஜ்குமாரை 108 நாட்களுக்கு பிறகு எந்த பாதிப்பும் இல்லாமல் பத்திரமாக வீட்டுக்கு அனுப்பி வைத்த நிலையில், அமைச்சர் நாகப்பா கடத்தப்பட்டு 3 மாதங்களுக்கு கர்நாடக வனப்பகுதியில் இறந்து கிடந்துள்ளார். இந்த சம்பவத்தில், நாகப்பாவை மீட்க, தமிழ்நாடு மற்றும் கேரளா போலீசார் இணைந்து செயல்பட்டுள்ளனர்.
பல வழக்குகளில் தொடர்புடைய வீரப்பனை பிடிக்க, பல காவல்துறை அதிகாரிகள், முயற்சித்தனர். அந்த வகையில், சமீபத்தில் காவல்துறை உயர் பதவியில் இருந்து ஒய்வு பெற்ற சைலேந்திரபாபு, 1990-களில் வீரப்பனை பிடிக்க, தர்மபுரிக்கு மாற்றப்பட்டுள்ளார். அப்போது வீரப்பனுக்கு திருமணமாகி, அவரது மனைவி முத்துலட்சுமிக்கு குழந்தை பிறக்கும் தருணம். அந்த சமயத்தில் வீரப்பனை பிடிப்பதற்காக, முத்துலட்சுமி பிரசவத்திற்கு காவல்துறை பல ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
Advertisment
Advertisements
அப்போது புதிதாக திருமணமாகியிருந்த சைலேந்திரபாபு, 10 நாட்கள் தர்மபுரியில் தங்கியுள்ளார். அந்த 10 நாட்களும் வீரப்பன் வராத நிலையில், அடுத்த நாள். சைலேந்திரபாபு, இங்கிருந்து புறப்பட, அதே நாளில் தனது குழந்தையை பார்க்க வந்த வீரப்பன் அங்கிருந்த கான்ஸ்டபிளை சுட்டுள்ளார். அதன்பிறகு முத்துலட்சுமி தனது குழந்தைக்கு பெயர் வைக்க கோரி சைலேந்திரபாபுவிடம் சென்றுள்ளார். அவர் தான் வீரப்பனின் மூத்தமகளுக்கு வித்யாராணி என்று பெயர் வைத்துள்ளார். அந்த பெண் நன்றாக படிக்க வேண்டும் என்று நினைத்து வித்யா என்று பெயர் வைத்தேன் என்று சைலேந்திரபாபு ஒரு நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“