/indian-express-tamil/media/media_files/2025/09/09/tamilnadu-mh-2025-09-09-18-57-18.jpg)
சிவகங்கை மாவட்டம், பொன்னங்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட வீரவலசை கிராமத்தில், மனிதாபிமானம் மிளிரும் ஒரு காட்சி அனைவரையும் உருக்கியது. நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளைக் கொண்டிருந்த இந்த கிராமம், அடிப்படை வசதிகள் இல்லாததால் இன்று முப்பது வீடுகளுக்கே சுருங்கியுள்ளது. அத்தகைய அமைதியான கிராமத்தில், நூறை கடந்த வயதான பாட்டியை, 80 வயது மகள் வள்ளி தன் கைகளால் அன்புடன் உணவூட்டிக் கொண்டிருக்கும் காட்சி கண்கலங்க வைத்தது.
இவர் என் அம்மா. வயது 100 கடந்துவிட்டது. எந்தவித வியாதியும் இல்லை. சக்கரை, ரத்த அழுத்தம் எதுவும் இல்லை என்று மருத்துவரே வியந்தார். ஆனால் ஒரு மாதமாக படுக்கையிலே இருக்கிறார். 40 நாளாக உணவுக்குப் பதிலாக குளுக்கோஸ் மட்டும் குடித்து உயிரோடு இருக்கிறார். இது ஒரு அதிசயம் தான்,” என்று வள்ளி பெருமையுடன் கூறினார்.
அவர் மேலும், “நான் ஒரே மகள். கணவர் இல்லை. ஆனாலும் எத்தனை சிரமம் இருந்தாலும் என் அம்மாவை நான் தான் கடைசி வரை பார்த்துக் கொள்வேன். இன்றைய தலைமுறைகள் பலர் பெற்றோரை ஆசிரமங்களில் விட்டுவிடுகிறார்கள். ஆனால் என் அம்மாவை என் கைகளாலேயே பராமரிப்பேன். என் அம்மா உயிரோடு இருப்பதே என் ஆசை,” எனக் கண்கலங்கினார்.
100 வயதான தாயை தன் கைகளால் பராமரிக்கும் 80 வயது மகளின் அரிய அன்பு, பெற்றோர்களைப் பராமரிப்பதில் அனைவருக்கும் எடுத்துக்காட்டாக உள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.