New Update
/indian-express-tamil/media/media_files/2025/06/28/madurai-pond-2-2025-06-28-16-11-33.jpg)
மதுரையில் பராமரிப்பின்றி கிடக்கும் கோயில் குளம்: தூர்வாரி சீரமைக்க கோரிக்கை
மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பழங்காநத்தம் அக்ரஹாரம் பகுதியில் உள்ள 800 ஆண்டுகள் பழமையான கோதண்ட ராமர் கோயில் குளத்தை தூர்வாரி சுத்தப்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.
மதுரையில் பராமரிப்பின்றி கிடக்கும் கோயில் குளம்: தூர்வாரி சீரமைக்க கோரிக்கை
மதுரையில் வைகையின் துணைநதியான கிருதுமால் நதியின் கரையில் உள்ளது பழங்காநத்தம். மாடக்குளம் செல்லும் வழியில் உள்ள அக்ரஹாரத்தில் 800 ஆண்டு பழமையான கோதண்ட ராமர் கோயில் உள்ளது. புனர்பூச நட்சத்திரத்தன்று இங்கு தரிசித்தால் வாழ்வில் நிம்மதி பிறக்கும். மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் இருந்து 10 கி.மீ., தொலைவில் உள்ளது. திருமணத்தடை நீங்கவும், குழந்தைப்பேறு கிடைக்கவும், வியாபார வளர்ச்சிக்கும் சிறந்த பரிகாரத் தலமாகும்.
மதுரையை ஆட்சி செய்த பாண்டிய மன்னர்கள், அக்ரஹாரமான இப்பகுதியில் சிவன், பெருமாள் கோயில்களை உருவாக்கினர். அதில் ராமர் கோயிலும் ஒன்று. சர்ப்ப கிரகங்களான ராகு, கேது தோஷம் போக்கும் சர்ப்ப விநாயகர் தெற்குப் பகுதியில் உள்ளார். ராகு காலத்தில் இவருக்கு அருகம்புல் மாலை சாத்தினால் திருமணத்தடை நீங்கும். கருவறையில் சீதை, லட்சுமணர், ஆஞ்சநேயருடன் கோதண்டராமர் காட்சியளிக்கிறார். காஞ்சி மஹாபெரியவர், ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் இங்கு வருகை புரிந்துள்ளனர். அப்போது மஹாபெரியவர் ராமாயணப் பாடல் ஒன்றைப் பாடி வழிபாடு செய்தார். இந்தக் கோயில் அருகே குளம் ஒன்று உள்ளது.
பல ஆண்டுகளாக குளம் தூர்வாரப்படாததால் கரைகள் பலவீனமான உள்ளது. இதனால், இச்சாலை வழி வளைவில் திரும்பிச் செல்லும் வாகன ஓட்டிகள், வாகனத்துடன் குளத்தில் தடுமாறி தவறி விழும் சூழ்நிலை உருவாகும். குளம் 10 ஆண்டுகளுக்கு மேலாக தூர்வாரப்படாததால், 5 மீட்டர் ஆழத்திற்கு குளத்தில் சகதியும், கழிவும் தேங்கி கிடக்கிறது.
தற்போது, இந்த குளத்தை ஆகாய தாமரை செடிகள் ஆக்கிரமித்துள்ளன. குளத்தில் பிளாஸ்டிக் பொருட்களும், குப்பைகளும் தொடர்ந்து கொட்டப்படுகிறது. இதனால், குளத்தில் உள்ள தண்ணீர் மாசடைந்து மக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இக்கோயில் குளம் முழுவதும் பராமரிப்பின்றி குளத்தில் தண்ணீரே தெரியாதபடி அதிகளவில் ஆகாயத்தாமரைகள் வளர்ந்துள்ளன.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, குளத்தில் ஆக்கிரமித்துள்ள ஆகாயத் தாமரை செடிகளை அகற்றிவிட்டு முழுவதும் தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். விரைவில் வடகிழக்கு பருவ மழை துவங்க உள்ள நிலையில், குளம் தூர்வாரப்பட்டால், மழைநீரை தேக்கிவைக்க முடியும். இதனால், அடுத்து வரும் கோடை காலத்தில் தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க முடியும் என்கின்றனர் அப்பகுதி மக்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.