சைவமாக இருந்தாலும் சரி, அசைவமாக இருந்தாலும் சரி... கொத்தமல்லித் தழை இல்லாமல் சமையல் முழுமையடையாது. உணவுகளுக்கு சுவை சேர்க்கும் கொத்தமல்லித் தழைக்குச் செரிமான சக்தியை அதிகரிக்கும் ஆற்றலும் உண்டு. அதனால்தான் இதை அன்றாடச் சமையலில் பயன்படுத்தும் வழக்கத்தைக் கொண்டுவந்தனர் நம் முன்னோர்.
ஆனால் ஒவ்வொரு முறையும் கொத்தமல்லி தழையை கடைகளில் வாங்க வேண்டிய அவசியம் இல்லை. உங்கள் வீட்டு மாடியில், பால்கனியில் என எங்கு வேண்டுமானாலும் ஒரு சின்ன தொட்டியில் ஈஸியாக இதை வளர்க்கலாம். அதற்கு தேவை தரமான விதைகள் தான்.
கொத்தமல்லி தழை வளர்ப்பது எப்படி?
முதலில் கொத்தமல்லி விதைகளை எடுத்து, பாதியாக உடைத்துக் கொள்ளவும்.
/indian-express-tamil/media/media_files/h0EkUfLvjAFlZtCCIyDX.jpg)
கொத்தமல்லி வளர்ப்பதற்கு பழைய வாளி, சட்டி என ஒரு பாத்திரத்தைக்கூட எடுத்துக் கொள்ளலாம். அதில் 30 சதவிகிதம் தேங்காய் நார்க்கழிவு, 30 சதவிகிதம் எரு, 40 சதவிகிதம் செம்மண் போட்டுப் பரப்பி விடவும். அதன் மேல் கொத்தமல்லி விதையைத் தூவவும். அதற்கு மேல் மீண்டும் கொஞ்சம் மண்கலவைப் போட்டு, விதை தெரியாதபடி மூடவும்.
ஆனால் ரொம்ப அதிகமாக மண் போட்டுவிடக் கூடாது. இதனால் கொத்தமல்லி முளைப்பதற்குத் தாமதம் ஆகலாம். தண்ணீரை அப்படியே ஊற்றமால் கைகளால் தெளித்துவிட வேண்டும்.
தொட்டியை அப்படியே வெயிலில் வைத்துவிடக் கூடாது. நிழலில் வைத்து அவ்வப்போது தண்ணீர் தெளித்து விட வேண்டும். இது ஒரு வாரத்தில் முளைக்க ஆரம்பித்துவிடும். அதன்பின் சூரிய ஒளியில் வைத்துவிடலாம். 15, 20 நாள்களில் சமையலுக்கு எடுத்துக்கொள்ளும் அளவுக்கு வளர்ந்துவிடும்.
இந்த குறிப்புகளை பயன்படுத்தி நீங்களும் உங்கள் வீட்டில் கொத்தமல்லித் தழை ஈஸியாக வளர்க்கலாம்.