/indian-express-tamil/media/media_files/2025/01/29/tUk6sisBcmnuj55aoFL1.jpg)
தை அமாவாசை தினமான இன்று திருச்சி அம்மா மண்டபம் படித்துறை அருகே பொதுமக்கள், காவிரி ஆற்றில் நீராடி பின்னர் தங்களது மூதாதையர்களுக்கு திதிகொடுத்து, ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கி வழிபாடு செய்து வருகின்றனர்.
ஆடி, புரட்டாசி, தை மாதங்களில் வரும் அமாவாசை நாள்கள் மிகவும் விசேஷமானது. தை அமாவாசை இந்து சமய மக்களின் புனிதமும் சிறப்பும் மிகுந்த தினமாகும். தை மாதத்தில் வரும் இந்த அமாவாசை தினத்தன்று தாய், தந்தையரை இழந்தோர் தங்களின் பெற்றோர் மற்றும் மறைந்த மூதாதையரை நினைத்து விரதம் கடைபிடிப்பர்.
ஆண்டின் பிற அமாவாசை நாட்களில் விரதம் கடைபிடிக்க இயலாதவர்கள், தை அமாவாசையன்று ஆறு, கடல் போன்ற புனித நீர்நிலைகளில் குளித்து மூதாதையர்களுக்கு படையல் செய்து சிறப்பு வழிபாடு செய்வர். இதனால், முன்னோர்களின் ஆசிர்வாதம் தங்களுக்கும், தங்களது குடும்பத்தினருக்கும் என்றென்றும் கிடைக்கும் என நம்பிக்கை.
அந்த வகையில், தை அமாவாசை தினமான இன்று திருச்சி அம்மா மண்டபம் படித்துறை அருகே பொதுமக்கள், காவிரி ஆற்றில் நீராடி பின்னர் தங்களது மூதாதையர்களுக்கு திதிகொடுத்து, ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கி வழிபாடு செய்து வருகின்றனர்.
இதில், திருச்சி மட்டுமின்றி அரியலூர், பெரம்பலூர், கரூர், புதுக்கோட்டை போன்ற பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் வந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர். அதனைத் தொடர்ந்து காவிரி தாயாரையும் பின்னர் ஸ்ரீரங்கம், திருவானைக்காவல், சமயபுரம் உள்ளிட்ட ஆலயங்களுக்குச் சென்றும் வழிபாடு செய்தனர். பாதுகாப்பு பணியில் 200க்கும் மேற்பட்ட காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
செய்தி: க.சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.